குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும்

குற்றத்துக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கவேண்டும் செய்த தவறை நினைத்து நினைத்து சம்பந்தப்பட்டோர் வருந்தவேண்டும்.அதுவும் பாரத தேசத்தின் பெரும் தலைவரான ராஜீவ் காந்தியையும் , ஈழ மக்கள் தலைவர் பத்மநாபாவையும் புலிகள் கொன்றதற்கு அவர்கள் சரியான தண்டனையை அனுபவிக்க வேண்டும் அனுபவித்தும் விட்டார்கள்.ஆனால் இதைவிட பல்லாயிரக்கணக்கணக்கில் கொலைகளை செய்த புலிகள் வெளியில் சர்வசாதாரணமாக நடமாடும் போது , புலிகளுக்கு பட்ரி வாங்கி கொடுத்ததும் , வாடகைக்கு தங்க வீடு கொடுத்தும் வேறும் சில உதவிகளையும் செய்ததால் இவர்கள் தமது இளமைகாலங்களான 27 வருடங்களை ஜெயிலில் இருந்து துன்பத்தை அனுபவித்து தண்டனை பெற்று விட்டனர் இதற்குப்பின் இவர்களை வெளியில் விடுவதில் தவறில்லை.

ஆனால் இவர்களை வெளியில் விடாவே கூடாது என்கிறார் ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரியான அனுசியா டெய்சி அவர் இவ்வாறு கூறுகிறார்,

1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி என் வாழ்நாளின் மிகப்பெரிய கருப்பு நாள் ஆகும். இந்த தினத்தை மறக்க நான் ஒவ்வொரு நாளும் முயற்சித்தாலும், என்னால் முடியவில்லை. அழுகையை அடக்கிக்கொண்டே கனத்த இதயத்துடன் என் காவல் பணியை நிறைவு செய்துவிட்டேன். இருந்தாலும் வேதனையை சுமந்தபடி என் சோகத்தை பகிர்கிறேன்.

அன்றைய தினம், முன்னாள் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து, குறிப்பாக பெண்களை கூட்டத்தை கட்டுப் படுத்தும் நோக்கில் என்னை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்திருந்தனர். என் தலைமையில் 10 பெண் போலீசார் ராஜீவ்காந்தியை பெண்கள் கூட்டம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். நான் ராஜீவ்காந்திக்கு மிக அருகில் நின்றுகொண்டிருந்தேன்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒருகட்டத்தில் நான் தடுமாறி விழப்போனேன். அப்போது ராஜீவ்காந்தி என்னை பார்த்து, ‘பீ ரிலாக்ஸ்’ (பதற்றம் வேண்டாம்) என்று கூறினார். நான் புன்னகைத்தேன். அப்போது ஒரு சிறுமி இந்தியில் ஏதோ அவரிடம் பேச, அதை ராஜீவ்காந்தி உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்தார்.

அந்தசமயம் திடீரென்று ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என் உடம்பில் எதேதோ துளைத்துக்கொண்டு போனது. அதேவேகத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன். என் உடலின் இடதுபுறம் முழுவதும் சிதைந்தன. என் கையில் 3 விரல்கள் காணவில்லை. முடிகள் அனைத்துமே கருகிவிட்டன. வெடிகுண்டு வெடித்ததில் அதன் ரவைகள் என் உடலை துளைத்து சிதைத்திருந்தன. ஆனாலும் என் உயிர் என்னை விட்டு பிரியாமல் இருந்தது. அப்போது என்னை சிலர் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். மயக்கம் அடைந்த நான், கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

அவ்வப்போது சிகிச்சைகள் அளிக்கப்பட்டு என் உடலில் இருந்த குண்டின் ரவைகள் அகற்றப்பட்டன. என் மார்பு பகுதி முழுவதும் கரித்துண்டாய் மாறிப்போனதை நினைத்து நினைத்து அழுதேன்.

சுமார் 3 மாதம் வரை சிகிச்சையில் இருந்தேன். சிகிச்சைக்கு பிறகும் வலி என்னை பாடாய் படுத்தியது. இருந்தாலும் நான் நேசித்த காவல் பணி என்னை விட்டு போகக்கூடாது என்பதால், மீண்டும் காவல் பணிக்கு உடனடியாக திரும்பினேன். என் உழைப்பு, என் நம்பிக்கை எனக்கு பதவி உயர்வை தந்தது.

இந்த நாட்டில் பிறந்ததற்கு, நேர்மையான காவல்பணி செய்ததற்கு இதுபோன்ற வருத்தம் நிறைந்த பரிசுகள் கிடைக்கவேண்டுமா? ஒரு தேச தலைவரை, அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற பாவிகளை விடுதலை செய்து நடமாட வைக்க இந்த அரசு நினைக்கிறதா? இதற்கு மக்கள் துணைபோகிறார்களா? குற்றவாளிகளுக்கு பரிதாபமும், சாதகமான தீர்ப்பும் கிடைத்துவிட்டால் அது நீதி ஆகாது.

இதற்கு முன்பு நான் அரசு பணியில் இருந்தேன். அதனால் என் கடமைக்கு கட்டுபட்டு நான் எதுவும் பேசவில்லை. இப்போது நான் பணியில் இல்லை. எனவே என் வேதனையை தெரிவிக்கிறேன். நளினி உள்பட அந்த 7 குற்றவாளிகள் வெளியே வரக்கூடாது. அவர்களை விடுதலை செய்யக்கூடாது.