மரம் பழுத்தது, வெளவால்கள் வந்தன ! தேர்தல் வந்தது, ஜனநாயகத்தின் தேவதூதர் வந்தனர் !!(பாகம் 1)

(வி.சிவலிங்கம்)

உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர். கூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளவர் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களாகும். அவர் இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவரது அரசியல் சுமார் 4 ஆண்டுகளே. அவரது இந்த மிகச் சொற்ப காலத்தின் அனுபவம் காரணமாக அரசியல் போதனைகளை மேற்கொள்ளும் அவதார புருஷராக தம்மை மாற்றி பல ஆண்டுகளாக தமது சுக போகங்களைத் துறந்து போராடிய பலரை அவமானப்படுத்தும் அரசியலை ஆரம்பித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியலை விதைக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவரது போதனைகள் ஒருவேளை மத போதனைக்கு உதவலாம். அரசியலுக்கு உதவாது.ஏனெனில் இங்கு கடவுள் அல்ல மக்களே தீர்மானிப்பவர்கள்.வட மாகாணசபையின் முதல்வராக பதவியை அலங்கரிக்கும் அவர் தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு அரசியல் அமைப்பிற்கும் தலமை தாங்குகிறார். தமிழர் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் வேண்டுகோளின்படி வட மாகாணசபையில் போட்டியிட்டவர், முதலமைச்சரானவர் தற்போது கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து தனது அரசியல் சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார். ஆனால் இவர் மாகாணசபைத் தேர்தலில் கொடுத்த தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? என்ற கேள்வியே நம் முன்னால் உள்ளது.

நாம் இப் பிரச்சனையை இரண்டு அம்சங்களினூடாகப் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்கு எதிராக அவர் தெரிவிக்கும் கருத்துக்கள். அடுத்தது அதற்கு மாற்றீடாக அவர் முன்வைக்கும் போதனைகள். ஏனெனில் அவர் எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாமல் தமிழ் மக்களின் அரசியலில் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள கட்சியை விமர்ச்சிக்கும் போக்கும், அவரது அனுபவமற்ற மாற்று அரசியல் தீர்வுகளும் தமிழ் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய சிக்கல்களை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

தமிழரசுக் கட்சி இலங்கை சுதந்திரமடைந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1949ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3ம் திகதி நல்லூரில் உள்ள கைலாசப் பிள்ளையார் கோவில் வீதியில் தோற்றம் பெற்று 1952ம் ஆண்டளவில் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றது. இந்தக் கால வேளையிலிருந்து 2015ம் ஆண்டு வரை சுமார் 65 ஆண்டு காலம் அரசியல் அஞ்ஞாதவாசம் செய்த ஒருவர் அக் கட்சியை, அதன் வரலாற்றை சரியாக மதிப்பீடு செய்யாமல், அதன் அனுபவங்களைக் கவனத்தில் கொள்ளாது குற்றம் சுமத்த விளைவது அரசியல் அநாகரீகமாகும். இது தடி எடுத்தவரெல்லாம் தண்டனை வழங்கலாம் என்ற நிலைக்குத் தள்ளி விடும்.

2009ம் ஆண்டின் பின்னர் தமிழ் சமூகம், அதன் அரசியல் என்பன பாரிய இடருக்குள் உள்ளது. பல தடைகளினூடாக, பல அனுபவங்களினூடாகப் பயணித்து வருகிறது. தமிழரசுக் கட்சி பின்பற்றிய தமிழ்க் குறும் தேசியவாத மிதவாத அரசியல் போக்கு அதற்கே உரித்தான உள் முரண்பாடுகளால் ஏற்பட்ட தீவிரவாதத் தன்மைகளால் அதன் இருப்பைப் பறி கொடுத்தது. அதே போன்று தமிழ்க்குறும் தேசியவாத்திற்குள் காணப்பட்ட வலதுசாரித் தீவிரவாதமும்,இன,சமூக முரண்பாடுகளும், ஜனநாயக விரோதப் போக்கும் அதற்கே உரித்தான விதத்தில் முடிவை எட்டியது.

இன்று இலங்கையில் ஏற்பட்ட இரத்தக் களரிக்கு சுயநலமிக்க, தீர்க்க தரிசனமற்ற அரசியல் தலைமைகளே காரணம் எனவும் இதற்காக விலை கொடுத்துள்ளவர்கள் சமான்ய சிங்கள மக்களின் பிள்ளைகளை உறுப்பினராகக் கொண்ட ராணுவமே எனவும் சிங்கள மக்களால் தமது தலைவர்கள் மீதுகுற்றம் சுமத்தப்படுகிறது. இதுபோலவே தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்த கொடுரங்களுக்கும், இன்றைய அவலங்களுக்கும் அதன் குறும் தேசியவாத அரசியல் தலைமைகளே காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

இதன் விளைவாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக தேர்தலில் சிங்களப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை அவதானித்த தமிழ் மக்கள் மீண்டும் புதிய அரசியல் மாற்றத்தைக் கோரி கூட்டமைப்பைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தனர். ஏன் மீண்டும் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்? தமிழ் மக்கள் மத்தியிலே மாற்றுத் தலைமையை வழங்கும் புதிய சக்திகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உருவாகவில்லை. எனவே நிலமைகளைக் கவனத்தில் கொண்டு தமது சார்பில் புதிய அரசுடன் பேசி நியாயத்தைப் பெறுமாறு அனுப்பினர்.

இத் தேர்தலில் அதாவது 2015 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. கூட்டமைப்பினர் தனியாகப் போட்டியிட்டனர். அத் தேர்தலில் ஐ தே கட்சி அதிக ஆசனங்களைப் பெற்ற போதிலும் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் இருந்தது. அதே போன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாதிருந்தது. ஆனால் கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசு அமைக்கும் வாய்ப்பு ஐ தே கட்சிக்கு அதிகமாக இருந்தது.

ஐ தே கட்சிஆட்சியைப் பொறுப்பெடுத்தால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பல இடர்களை அனுபவிக்க நேரிடும் எனக் கருதிய மைத்திரி தலைமையிலான தரப்பினர் ஐ தே கட்சியின் தனிக் கட்சி ஆட்சியைத் தடுக்கவும், தேசியப் பிரச்சனைகளை இணைந்து குறிப்பிட்ட காலத்தில் தீர்ப்பது எனவும் கருதி இரண்டு வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைந்தனர். இவ்வாறான மாற்றத்தின் பின்னணியில் சிவில் சமூக அமைப்புகள் காரணமாக இருந்தன. கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சிப் பதவியை அளித்தனர். அந்த ஒப்பந்தம் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் காலாவதியாகிறது.

இந்த இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்து கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னணியிலேயே புதிய தேசிய அரசு உதயமாகியது. இங்கு எமது கவனத்திற்குரிய அம்சம் என்னவெனில் தேசிய இனப் பிரச்சனைக்குக் காரணமாக இருந்த இரு பிரதான கட்சிகளும் இணைந்து இனப் பிரச்சனைக்குத் தீர்வுகளைத் தருவதாக எண்ணும்போது ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் தனது தேர்தல் விஞ்ஞாபன கோரிக்கைகளை புறம் ஒதுக்கிப் புதிய நிலமைகளைப் பரீட்சித்துப் பார்ப்பது தவறு என விவாதிக்க முடியுமா? என்பதுதான்.

2015ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டுள்ள உள்ளுர் அரசியல் மாற்றங்களின் பின்னணியிலும், போர்க் குற்றம் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் ஐ நா சபை மேற்கொண்டுள்ள ஈடுபாடுகளின் பின்னணியிலும் இலங்கை நிலவரம் தொடர்பாக ஐ நா மனித உரிமை ஆணைக்குழு காத்திரமான நகர்வுகளை எடுத்துள்ள பின்னணியிலும் புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்வது தவிர்க்க முடியாத வாய்ப்பு ஆகும். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சியும் இந்த வாய்ப்புகளைத் தவற விட்டுச் செல்லுமாயின் அது பாரிய தேசத் துரோகமாகும்.இங்கு தமிழரசுக் கட்சியின் கடந்த கால அரசியல் பற்றிக் கவனம் செலுத்துவதை விட தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? என்பதே கவனத்திற்குரியது. ஏனெனில் போரினாலும்,இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களை பொருளாதார ரீதியாகவும் உயர்த்தும் அவசியம் உள்ளது.

70 களிற்குப் பின்னர் தமிழ் அரசியலில் காணப்பட்ட தீவிரவாதம், மிதவாதப் போக்கினை அடிமைப்படுத்திய போதிலும் இவ்விரு அணுகுமுறைகளும் இணைந்தும் அவ்வப்போது பிரிந்தும் பயணப்பட்டிருக்கின்றன. 2009 இன் பின்னர் தமிழ் அரசியல் மிகத் தெளிவாகவே பிரிந்து செல்லும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அரசியல் பிளவுகள் விக்னேஸ்வரன் போன்ற பிரமுகர்களை தமிழ் அடிப்படைவாதத்தின் தலைவர்களாக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது. தமிழரசுக் கட்சி ஆரம்ப காலங்களில் முன்வைத்த கோஷங்களை தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் இந்த அடிப்படைவாதிகள் தத்தெடுக்க, கூட்டமைப்பினர் யதார்த்த அரசியலிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு தமிழ் அரசியல் மிகவும் தெளிவாகவே பிரிந்துள்ளதை நாம் காணலாம். இப் பின்னணியிலிருந்தே இன்றைய தேர்தல் அரசியலை நாம் நோக்க வேண்டும். இப் பிளவுகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது குறித்தே எமது பார்வை செலுத்தப்பட வேண்டும்.

நாம் ஏன் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்களின் அரசியலை அடிப்படைவாதம் என்கிறோம்?இவர்கள் முன்வைக்கும் தேசம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி என்பன தவறான கோரிக்கைகளா?
இவர்களின் அரசியல் கோரிக்கைகளின் பின்னால் மறைந்திருக்கும் எண்ணங்கள் மிக ஆபத்தானவை. கிட்லர், முசோலினி அரசியல் நல்ல உதாரணங்களாகும். இவர்கள் அரசியல் ரீதியாக மிகவும் இறுக்கமான விளக்கங்களைப் பின்பற்றுவதும், இவ் விளக்கங்களிலிருந்து சமூகம் மாறிச் சென்றுள்ளதை அங்கீகரிக்க மறுப்பதும், ஏனைய சமூகங்களுக்கும் அவ்வாறான உரிமைகள் உண்டு என்பதை தெளிவாக வரையறுக்க மறுப்பதும், ஏனைய சமூகங்களோடு தமிழ் சமூகத்தினை இணைய விடாதுதடுக்கும் உட் கூறுகளை அந்த நோக்கங்கள் கொண்டிருப்பதும் அதன் அடிப்படைவாத தன்மைகளாகும்.

இவர்களின் அரசியல் என்பது தமிழ்ச் சமூகம் அதன் அரசியல் மற்றும் பொருளாதார உறவு என்பன மாறிச் சென்றுள்ளதை ஏற்க மறுக்கின்றனர். முஸ்லீம் மக்களுக்கும் அவ்வாறான உரிமைகள் உண்டு என்பதை உரக்கக் கூற தயங்குகின்றனர்.இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானத்தில் தற்போது சகல சமூகங்களும் இறுக இணைந்து வருவதால் இக் கோரிக்கைகளால் எழக் கூடிய அரசியல், சமூக, பொருளாதாரத் தாக்கங்கள் குறித்தப் பேச மறுக்கின்றனர்.மாற்றங்களுக்கான வேளை ஏற்படும்போது அவற்றைத் தடுக்க முயற்சிப்பதும், உதாரணமாக தற்போது நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலை தமிழரசுக் கட்சியின் தற்போதைய அரசியல் அணுகுமுறைகளுக்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்ற எண்ணுவது அரசியல் யாப்பு முயற்சிகளைத் தடுக்கும் உள் நோக்கம் கொண்டதாகும்.

உள்ளுராட்சித் தேர்தல்கள் எவ்வாறு அரசியல் பிரச்சனைகளின் தேர்தலாக மாற முடியும்? உள்ளுராட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லவில்லையே. மகிந்த தரப்பினர் மைத்திரி தரப்பினரின் அரசியலைத் தோற்கடிக்க இத் தேர்தலைப் பயன்படுத்துவது போலவே கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் நோக்கம் இங்கு உள்ளது.தோற்கடிப்பதில் தவறில்லை. ஆனால் தவறான நேரத்தில் தவறான ஆயுதத்தை எடுத்துள்ளனர். அதன் விளைவுகள் பற்றிப் பேசத் தயாராக இல்லை.இதில் மைத்திரி தோல்வி அடையலாம். ஆனால் அவரே தொடர்ந்தும் ஜனாதிபதி. ஆனால் தமிழ்ப் பிரதேச அரசியல் அவ்வாறில்லை. கூட்டமைப்பின் பேரம் பேசும் அரசியலைத் தோற்கடித்து விடும். இது தமிழ் மக்களின் எதிர் காலத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதுதான் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பா? இந்த அரசியல் விவேகமான முடிவா?

இலங்கையில் வாழும் சமூகங்களிடையே அடையாளம் என்பது பிரச்சனையாக இருப்பினும் பொதுவாழ்வு என்பது அமைதியாக செயற்பட வேண்டும் என்ற உள்ளுணர்வும், தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள் என வற்புறுத்தும் அதே வேளை, நாடு தழுவிய அடிப்படையில் மனிதர்கள் என்ற பொது நலன் ஒன்று இருப்பது குறித்துப் பேச மறுப்பதும் அடிப்படைவாதமே.

இத் தேர்தல்கள் உள்ளுர் பிரச்னைகளின் தீர்வுக்கான களங்களாகும். இதன் மூலம் சிவில் சமூகத்தைப் பிளவுபடுத்த எண்ணுவதும், சமூகப் பிரிவினரிடையே வெறுப்புகளைத் தோற்றுவிப்பதும் அடிப்படைவாத குணாம்சங்களாகும்.இதனை நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத விளைவுகளிலிருந்து காணலாம்.
எனவே இத்தகைய அடிப்படை வாதங்களின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் மீண்டும் அச் சகதிக்குள் செல்லாமல் அதே வேளை தனது அடையாளங்களை, அதற்கான போராட்டங்களை விட்டுக் கொடுக்காமல் செல்வதே யதார்த்த அரசியலாகும்.

(தொடரும்)