அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்?

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சட்டத்தில் கூறப்படாவிட்டாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் விருப்பப்படியே இலங்கையில் இந்தத் திகதி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் திகதியும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் திகதியும் சட்டத்தாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் முதலாவது திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.

அதாவது அது நவம்பர் 2 ஆம் திகதிக்கும் நவம்பர் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் தான் அது நடைபெறும். அதில் தெரிவு செய்யபப்டும் நபர் அடுத்து வரும் ஜனவரி மாதத்தில் 20 ஆம் திகதி தான் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

இன்று அமெரிக்க மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்ய வாக்களித்தாலும் இலங்கையில் போல் அந்த வாக்குகளின் முடீவின் படி உடனே புதிய ஜனாதிபதி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்வாளர்களே (Electors) இன்றைய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவர். சகல மாநிலங்களினதும் அந்தத் தேர்வாளர்களின் மொத்த எண்ணிக்கை Electoral College என்றழைக்கப்படுகிறது. இதற்கு ‘தேர்தல் சபை’ என்று ஒரு சராசரி அர்த்தத்தை வழங்கலாம்.

இந்தத் தேர்வாளர்களின் வாக்குகளாலேயே ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். அந்தத் தெரிவு டிசம்பர் மாதம் இரண்டாவது புதன்கிழமைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை நடைபெறும். ஆனால் இன்றைய தேர்தல் பெறுபேறுகளின் படி தேர்வாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பெரும்பாலும் ஊகிக்கலாம்.

இலங்கையில் மாவட்ட வாரியாக நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதைப் போல் அமெரிக்காவில் 50 மாநிலங்களிலிருந்தும் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸூக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அதேவேளை ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இருவர் வீதம் செனட் சபைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திருந்தும் தெரிவு செய்யப்படும் காங்கிரஸ் மற்றம் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையிலேயே அந்தந்த மாநிலத்திலிருந்து ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்வாளர்கள் நியமிக்கப்படுவர்.

உதாரணமாக கலிபோனிய மாநிலத்தின் கொங்கிரஸ் மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 55 ஆகும். எனவே ஜனாதிபதியை தெரிவு செய்யும் அம் மாநிலத்துக்கான தேர்வாளர்களின் எண்ணிக்கையும் 55 ஆகும். வயோமிங், அலஸ்கா மற்றும் நோத் டகோட்டா ஆகிய மாநிலங்களில் தலா மூன்று தேர்வாளர்களே நியமிக்கப்படுவர். காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இல்லாத கொலம்பியா மாவட்டத்தின் வொஷிங்டன் நகருக்காகவும் 3 தேர்வாளர்கள் நிமிக்கப்படுவர்.

மாநிலங்களின் சனத்தொகை இந்த எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாகும். ஆயினும் ஏனைய காரணிகளின் தாக்கத்தினால் சில மாநிலங்களுக்கு அநீதியும் இழைக்கபப்ட்டு இருக்கிறது. உதாரணமாக, சிறிய வயோமிங் மாநிலத்தில் 193,000 பேருக்கு ஒரு தேர்வாளர் நியமிக்கப்படும் போது மிகப் பெரிய மாநிலமான கலிபோனியாவில் 718,000 பேருக்கு ஒரு தேர்வாளர் நியமிக்கப்படுகிறார்.

சகல மாநிலங்களுக்குமான தேர்வாளர்களின் எண்ணிக்கை 538 ஆகும். ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்காக 270 தேர்வாளர்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு டொனலட் ட்ரம்ப் 304 வாக்குகளைப் பெற்றார்.

அமெரிக்காவிலும் ஜனாதிபதித் தேர்தலின் போது பல வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும் இரண்டு வேட்பாளர்களிடையே தான் உண்மையான போட்டி நடைபெறும். இன்று நடைபெறும் தேர்தலிலும் உண்மையான போட்டி தற்போதைய ஜனாதிபதியும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனல்ட் டரம்புக்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையிலேயே நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் ஒரு வேட்பாளரின் பெயரில் ஆகக் கூடுதலான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கான சகல தேர்வாளர்களையும் நியமிக்கும் வாய்ப்பு அவரது கட்சியான குடியரசு கட்சிக்குக் கிடைக்கிறது. இந்த முறைமை றinநெச-வயமநள-யடட ளலளவநஅ (வெற்றி பெறுபவர் அனைத்தையும் பெறும் முறைமை) என்றழைக்கபப்டுகிறது.

அதன் படி கலிபோனியாவில் வெற்றி பெறும் கட்சிக்கு அந் மாநிலத்துக்கான 55 தேர்வாளர்களையும் நியமிக்கும் உரிமை கிடைக்கிறது. டெக்ஸாஸில் வெற்றி பெறும் கட்சிக்கு அம் மாநிலத்துக்கான 38 தேர்வாளர்களையும் நியமிக்கும் உரிமை கிடைக்கிறது.

2000 ஆம் ஆண்டு தேர்தலில் இலட்சக் கணக்கான வாக்காளர்கள் வாழும் பெரிய மாநிலமொன்றான புலொரிடாவில் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 537 பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அம் மாநிலத்தின் சகல தேர்வாளர்களையும் நியமிக்கும் உரிமையை பெற்றுக் கொண்டார். நாடளாவிய ரீதியில் புஷ்ஷை விட சுமார் 5 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனநாயக கடசியின் வேட்பாளர் அல் கோர் அந்தத் தேர்தலில் தோல்வியடைய அதுவே காரணமாகியது.

ஆனால் மெய்ன் மற்றும் நெப்ரஸ்கா ஆகிய இரு மாநிலங்களில் இந்த winner-takes-all system முறைமை பின்பற்றப்படுவதில்லை. அந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரப் படி அவர்களது கட்சிக்ளுக்கு தேர்வாளர்களை நிமிக்கும் உரிமை வழங்கப்படும்.

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் தமது தேசிய பட்டியல் வேட்பாளர்களை குறிப்பிட்டு ஒரு பட்டியலில் வைத்திருப்பது போல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் தத்தமது மாநில மாநாட்டின் போது அல்லது தமது மத்திய குழு முலமாக அந்தந்த மாநிலத்துக்கான தமது தேர்வாளர் பட்டியல்களை தயாரித்து வைத்துக் கொள்ளும்.

இன்றைய தேர்தலின் போது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் winner-takes-all முறைமைப் படி அக் கட்சியின் அம் மாநிலத்துக்கான தேர்வாளர் பட்டியலில் உள்ளவர்கள் தான் அம் மாநிலத்தின் சார்பில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்காளர்களாவர். இதே போல் மற்றொரு மாநிலத்தில் ட்ரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்றால் அம் மாநிலத்துக்கான சகல தேர்வாளர்களும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்வாறு சகல மாவட்டங்களிலும் தேர்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் Electoral College (தேர்தல் சபை) பூர்த்தியாகிவிடுகிறது. அந்தச் சபைத் தான் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய வாக்களிக்கும். அதற்காக தேர்வாளர்கள் இன்றிலிருந்து ஆறு வாரங்களில் தத்தமது மாநிலத்தில் கூடி வாக்களிப்பர். அத்தோடு மற்றொரு வாக்குச் சீட்டின் மூலம் உப ஜனாதிபதியைத் தெரிவு செய்யவும் வாக்களிப்பர். எனவே எப்போதும் ஜனாதிபதியின் கட்சியைச் சேர்ந்த ஒருவரே உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

இன்றைய தேர்தலில் கட்சி வாரியாக தெரிவு செய்யப்படும் தேர்வாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் ட்ரம்பா அல்லது பைடனா ஜனாதிபதியாகப் போகிறார் என்பது தெளிவாகும்.

ஆனால் சில வேளைகளில் தேர்வாளர்கள் மாற்றுக் கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடும். இவ்வாறான தேர்வாளர்கள் ‘Faithless Electors’ (நம்பிக்கையில்லாத தேர்வாளர்கள்) என்றழைக்கபப்டுகிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது குடியரசு கட்சியின் இரண்டு தேர்வாளர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்டனுக்கு வாக்களித்தனர். அதேவேளை ஜனநாயகக் கட்சியின் ஐந்து தேர்வாளர்கள் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு வாக்களித்தனர்.

இலங்கையில் தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் இருந்தபோது ஐக்கிய தேசிய கட்சி நாடலாவிய ரீதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றும் ஆட்சிக்கு வர முடியாமல் போன சந்தர்ப்பங்கள் இருந்தன. அதேபோல் அமெரிக்காவில் நாடளாவிய ரீதியில் ஒரு வேட்பாளர் ஏனைய வேட்பாளர்களை விட கூடுதலாக பொது மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் அவர் Electoral College வாக்களிப்பின் போது தோல்வியடையலாம். வாக்காளர்-தேர்வாளர் வீதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதும் ‘Faithless Electors’ என்ற காரணியுமே அதற்குக் காரணமாகும்.

அமெரிக்க வரலாற்றில் ஒருவர் இவ்வாறு மக்கள் வாக்களிப்பின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றும் ஜனாதிபதி பதவியை இழந்த ஐந்து சந்தர்ப்பங்கள் உள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் ட்ரம்பை விட நாடளாவிய ரீதியில் சுமார் 30 இலட்சம் வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தார்.

வயோதிபர்களும் வெள்ளையர்களும் கல்லூரிக் கல்வி அறிவு இல்லாதவர்களும் அதிகமாக உள்ள மாநிலங்களில் பெரும்பாலும் குடியரசு கட்சிக்கு சாதகமான நிலைமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இம் முறை தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் மூலம் தெரிய வருகிறது. அவர் ஜனாதிபதியானால்; தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட, ஷியாமலா கோபாலன் என்ற தமிழ் தாய்க்கும் டொனல்ட் ஜே. ஹரிஸ் என்ற பிரிட்டிஷ் ஜமய்கன் தந்தைக்கும் மகளாக பிரந்த, இன்னமும் தமது தமிழக உறவினர்களை மறக்காத, தாயின் சகோதரியை இன்னமும் தமிழில் சித்தி என்றே அழைக்கின்ற கமலா தேவி ஹரிஸ் அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.