இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 3)

ஏ.இ. குணசிங்கா தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் “இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?” எனச் சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார்.

இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு அகவை 78 நிறைந்திருந்தது. (பக்கம்1791 சட்டமன்றப் பதிவேடு மூன்று-1928)

சிங்கள மொழி

சிங்களம் ஓர் இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த மொழி என்றாலும் அதில் காணப்படும் சில அம்சங்கள் ஏனைய இந்தோ – ஆரிய குடும்பத்தைச் சார்ந்த குடும்ப மொழிகளில் காணப்படவில்லை. காரணம் சிங்களம் ஒன்று மட்டுமே இந்தியாவுக்கு வெளியே பேசப்படும் இந்தோ – ஆரிய மொழியாகும்.

சிங்களம் மற்றும் தமிழ் இரண்டுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் சிங்களம் திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்று கூறும் புலமையாளர்களும் இருக்கிறார்கள். சிங்கள புலமையாளர்களில் ஒருவரான டபுள்யூ. எவ். குணவர்த்தன தாம் எழுதிய சித்தாந்த பரிஸ்சானய என்ற நூலில் பின்வருமாறு கூறகிறார்.

“சிங்களமொழி இலக்கணத்தில் காணப்படும் முக்கிய அம்சங்கள் ஆரிய மொழி இலக்கணத்துக்கு மாறாக உள்ளன. சிங்கள மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் தமிழ்மொழியோடும் திராவிட மொழிவழக்கோடும் (idioms) ஒத்துப் போகின்றன. இதில் இருந்து நான் ஒரு முடிவுக்குக் கட்டாயமாக வரவேண்டியிருந்தது. அதாவது சிங்களத்தின் கட்டுமான அடித்தளம் திராவிடமாகவும் அதன் கட்டுமான மேல்தளம் அதாவது அதன் சொற்றொகுதி ஆரியமாகவும் காணப்படுகிறது என்பதுதான்.” சிங்கள மொழியை இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்துடன் இணைத்து மாக்ஸ்முல்லர் குறிப்பிட்டார். திராவிட மொழிக் குடும்பத்துக்குள் சிங்களம் வராது என கால்டுவெல் சொன்னார். இதனால் சிங்களம் ஒரு இந்தோ – ஆரிய மொழி என்ற கருதுகோளே மேலோங்கிக் காணப்படுகிறது.

மொழிகளைப் பற்றி ஆய்வு செய்யும் சமூக – மொழியியலாளர்கள் இரண்டு வெவ்வேறு மொழிகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் போது அவை பல வழிகளில் ஒன்றன் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்துகின்றன எனக் கூறுகிறார்கள். இதில் எந்த மொழி வல்லமை மற்றும் பெருமை படைத்ததோ அந்த மொழி அன்பளிப்புச் செய்யும் மொழியாகவும், இரண்டாவது மொழி அன்பளிப்பை வாங்கும் மொழியாகவும் மாறிவிடுகிறது. சிங்கள – தமிழ் ஊடாடத்தில் தமிழ் கொடுக்கும் மொழியாகவும் சிங்களம் அதனை வாங்கும் மொழியாகவும் இருக்கின்றன.

சிங்களத்தில் உள்ள தமிழ்ச் சொற்களை சிங்கள பாஷேவய தெமிள வாசன அகராதிய (A Glossary of Tamil Words in Sinhala) என்ற நூலில் தொகுத்துள்ளார்கள்.

தமிழ்மொழி சிங்களமொழியின் மீது செல்வாக்குச் செலுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழ்மொழி ஆட்சி அதிகாரம் மற்றும் உன்னதமான இடத்தைக் காலத்துக்குக் காலம் வகுத்தமையே.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள்

கிமு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 247) கிமு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கிமு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால அனுராதபுர அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்துள்ளனர்.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டு தமிழர்கள் (பாலி மொழியில் தெமிள) – சேனன், குத்திகன் – அனுராதபுரத்தைப் பிடித்து 22 ஆண்டுகள் ஆண்டதாக மகாவம்சம் சொல்கிறது. அடுத்ததாக எல்லாளன் அனுராதபுரத்தைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் (கிமு 145 – 101) ஆட்சி செய்தான்.

ஆயினும் இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் மகாவம்சம் தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் பவுத்த மதத்துக்கு பெருமை தேடித் தந்த வீரனாக வருணிக்கப்பட்ட துட்டகைமுனுவின் 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் மகாவம்சம், 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே பாளி இலக்கியங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்றாக அமைகிறது.

எல்லாளனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவன் புன்நெறியைத் (இந்து மதத்தினை) தழுவியவன் எனக் கூறப் பின்நிற்கவில்லை. இவன் தனது ஆட்சியில் பவுத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும் தன் பழைய மத நம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் குறை கூறுகிறது.

“எல்லாளன் – துட்டகைமுனு இடையிலான போர் சிங்களவர் – தமிழர் போர் என மகாநாம தேரர் கெட்ட எண்ணத்தோடு சித்திரிக்கிறார். கைமுனுவின் குடிவழியைக் கவனமாக ஆராய்ந்தால் எல்லாளனைப் போலவே அவனும் ஒரு தமிழனே. ஒரேயொரு வேறுபாடு. கைமுனு பவுத்தன். எல்லாளன் இந்து. எல்லாளன் பவுத்தத்தின் எதிரியல்ல. உண்மையில் அவனைப் பவுத்தர்கள் நேசித்தார்கள். கைமுனுவிடம் காணப்பட்ட பலமான இந்து மரபுவழி காரணமாக அவன் கதிர்காமத்திலுள்ள முருகப் பெருமானின் பக்தனாக விளங்கினான்.”

(The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle. Dr.S.K. Vadivel – Tamil Canadian)

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுத்தற்குக் காரணம் தனது மூதாதையர் ஆண்ட அரசுரிமையை மீளக் கைப்பற்றவே ஆகும். மகாநாம தேரர் துட்டகைமுனுவின் போர் முழக்கம் “இராச்சியத்துக்கு அல்ல பவுத்தத்தின் மேன்மைக்கு” என்ற கதையைப் புனைந்துள்ளார்.

துட்டகைமுனு காலத்தில் சிங்கள இனம் என்றொரு இனம் இருக்கவில்லை. அவன் தந்தை வழியிலும் தாய் வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். மேலும் மகாநாம தேரர் காலத்திலும் (6 ஆம் நூற்றாண்டு) சிங்களவர் இருக்கவில்லை. சிங்களமொழியும் இருக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மக்களிடையே இன அடையாளம் இன உணர்வு இருக்கவில்லை. சாதி, சமய பிரிவுகளே இருந்தன. இனம் (Race) என்ற சொல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்த ஒன்றாகும். தமிழில் இனம் என்ற சொல் சுற்றத்தை அல்லது குலத்தைக் குறிக்கும்.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் என்பது திருக்குறள். இந்தக் குறள் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்தில் வருகிறது.

இனம் என்ற சொல் அபிராமி அந்தாதியில் சுற்றம் அல்லது நட்பு என்ற பொருளில் பாடப்பட்டிருக்கிறது. தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் … என்பது பாடல்.

அண்மையில் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் பரம்பரை வாரிசு மட்டுமன்றி கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்று பிரபல சிங்கள கலைஞர் ஜெக்சன் அந்தோனி தெரிவித்திருந்தார்.

இலங்கை முழுவதும் சிங்கள மக்களுக்கே உரியது என்றும், இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முற்காலத்தில் சிங்கள மக்களும் பவுத்த தேரர்களும் பரவி வாழ்ந்ததாக எண்பிக்க ஊடக ஆய்வு நடவடிக்கையை ஜக்சன் அண்டனியிடம் ஒப்படைக்குமளவுக்கு அவர் மகிந்த இராசபக்சேக்கு மிகவும் நெருக்கமான ஒரு கலைஞராவார்.

ஜக்சன் இலங்கையின் தொடக்க கால வரலாறு பற்றித் தொலைக்காட்சியில் நடாத்திவரும் நிகழ்ச்சியின் திரைக்கதைப் படி சனாதிபதி செயலகத்திலிருந்தே தயாரித்துக் கொடுக்கப்படுகின்றது.

அவ்வாறான ஒரு நிகழ்ச்சியின் போதே ஜக்சன் மகிந்த இராசபக்சே துட்டகைமுனு மன்னனின் வாரிசு மட்டுமன்றி, கவுதம புத்தரின் பரம்பரை வழி உறவினருமாவார் என்ற மகாவம்ச கூறும் கதையின் அடிப்படையில் கருத்து வெளியிட்டிருந்தார். துட்டகைமுனு மன்னனின் உண்மையான வாரிசுகள் தாம் என்று எண்பிக்கும் வகையில் இப்போது அனுராதபுரம் முழுதும் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு துட்டகைமுனு மன்னனின் வாளைத் தேடி வருகிறார்கள்!

மகாவம்ச கதையின் அடிப்படையில் கவுதம புத்தர் தொட்டு மகிந்த இராசபக்சே வரையான பரம்பரை வழித்தொடர் பின்வருமாறு அமைகின்றது.

கவுதம புத்தரின் தந்தை – சுத்தோதனன்

சுத்தோதனனின் உடன்பிறப்பு – அமிதோதனன்

அமிதோதனனின் மகன் – பாண்டுசாக்கிய

பண்டுசாக்கியாவின் மகள் – பட்டககச்சானா

பத்தகச்சானா இலங்கை வந்து பண்டுவாசுதேவனை மணக்கின்றாள்.

அவர்களின் குழந்தை உன்மாத சித்ரா வாகும்.

உன்மாத சித்ராவின் மகன் – பாண்டுகாபயன்

பண்டுகாபயவின் மகன் – மூத்தசிவன்

மூத்தசிவனின் மகன் – தேவநம்பிய தீசன்

தேவநம்பிய தீசனின் உடன்பிறப்பு – மகாநாகன். இவனே

உருகுணைக்கு தனது மனைவியோடு தப்பிச் சென்று புதிய இராசதானியை உருவாக்கியவன்.

மகாநாகவின் உடன்பிறப்பு – யடாலதிஸ்ஸ

யடாலதிஸ்ஸவின் சகோதரன் – கோத்தபாய

கோத்தபாயாவின் மகன் – காகவண்ண தீசன்

காகவண்ண தீசன் மகன்துட்டகைமுனுதுட்டகைமுனுவின் தந்தை – காகவண்ண தீசன்

(தொடரும்…..)