கடந்து போன…… தினம்

ஒரு வாரத்தினுள் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கும் அகால மரணச் செய்திகள்… தற்கொலைகள்… கொலைகள்… மாரடைப்பு மரணங்கள்… புற்றுநோய் செய்திகளைப் பார்க்கும் பொழுது அதற்;காக மனம் வேதனைப்படும் பொழுது ஒன்றே ஒன்று தான் மனத்திற்கு தோன்றியது.

ஆஸ்தீகர்கள் நம்பும் கடவுள் அருளாய் இருக்கலாம்… நாஸ்தீகர்கள் நம்பும் இயற்கையாக இருக்கலாம் இன்றைய தினம் மகிழ்வான ஒரு தினமாகவும் இந்த இரண்டு நாள் விடுமுறை தினமும் மனத்திற்கு எந்த சஞ்சலம் இல்லாமலும் கடந்து போனதிற்கு அந்த ஆண்டவனுக்கு சரி… அல்லது இயற்கைக்கு சரி நாம் நன்றியுடைவர்களாக இருக்க வேண்டும்.

எங்களுக்குள் நாங்கள் கோடுகளைப் போட்டுக் கொண்டு…. எங்கள் யாப்புகளை நாமே வரைந்து கொண்டு அதனினுள் நின்று ஆயுக்காள் அடிபட்டுக் கொண்டும்… ஆளை ஆள் நசுக்கி கொண்டும் செல்லும் இன்றைய போக்குகளின் முடிவுதான் எதுவரை?

எந்த உலகத்திற்குள் இன்று சண்டைகளும் அதிகாரப் போட்டிகளும் இல்லை?

அது இலக்கிய உலகமாக இருக்கலாம்… ஆன்மீக உலகமாக இருக்கலாம்…. அரசியல் உலகமாக இருக்கலாம்… எங்கும் போட்டிகள்… இந்த போட்டிகளின் முடிவுதான் என்ன?

மன அமைதி இன்மையும்… மரணங்களும்…. தற்கொலைகளும்… கைதுகளும் தான் எங்கள் வாழ்வை மிரட்டியும் விரட்டிக் கொண்டும் இருந்தால் எங்களுக்காக நாங்கள் உருவாக்கிய அத்தனையும் துறந்து விடுவதால் அந்த நிம்மதியும் அமைதியும் சமாதானமும் கிடைக்குமாயில் எங்கள் மீது நாங்கள் போர்த்தியிருக்கும் இரும்புக் கவசங்களை கழற்றி வீசுவது சாலச் சிறந்தது.

ஆம்! எங்களுக்காக நாங்கள் போட்டுக் கொண்ட கோடுகள் ஆழப்படுத்த முடியாமலும் அகலப்படுத்த முடியாமலும் எங்களுக்கே அவை சிறைக்கம்பிகள் ஆகும் போது அவையை எங்கள் கைகளே உடைத்தெறியும்.

அதனைத் தான் புரட்சி என்கின்றோமா?

(Jeeva Kumaran)