கந்துவட்டி கனடா

கனடா பலருக்கு சொர்க்க பூமி.மேற்கு அய்ரோப்பிய நாடுகள் ஜனநாயக நாடுகள்.வளர்ச்சி அடைந்த நாடுகள்.இப்படித்தான் உலக மக்களின் கற்பனை. நான் மிக வறிய குடும்பத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன்.குடிசை வீடு.ஏதோ சாப்பாடு கிடைக்கும் .மண் தரையிலோ இல்லை மரங்களின் கீழோ நிம்மதியாக உறங்க முடியும்.எங்களைப் போன்றே பலரது வாழ்க்கை.

1989 இல் கனடா வந்தேன்.அதிகம் உழைக்க முடியும்.எங்கு போனாலும் வேலை எடுக்க முடியும் என்றார்கள்.நான் வந்த வருடம் சுதந்திர வர்த்தக உடன்பாடு அமெரிக்கா கனடா மெச்சிக்கோ இடையே ஏற்பட சகல வேலை வாய்ப்புகளும் பறிபோயின.வீடுகள் வாங்கிய பலர் வேலை இல்லாததால் வீடுகளை இழந்தனர்.கடன் கொடுத்த வங்கிகள் பறித்தெடுத்தன.உழைத்து சேமித்த பணமும் வீடு வாசல் எல்லாம் பறிபோனது.

இங்கே உள்ள அரச வங்கிகள் என்றாலும் தனியார் வங்கிகள் என்றாலும் நமது ஊர் கந்துவட்டிக்காரனைவிட மோசமானவை.

எனக்கு வேலை பறிபோகவில்லை..ஆனால் எனது வருமானத்துக்கு நான் தனியாக அறை எடுத்து வாழவே முடியாது.இங்குள்ள சகல மக்களின் நிலையும் அதுதான்.

நான் தனியான குடும்பமாக வாழ விரும்புபவன்.அப்படி வாழ்ந்தபோது எனது வருமானம்,எனது மனைவியின் வருமானம் குடும்ப வாழ்க்கைக்கு போதாது.இது கனடாவுக்கு மட்டுமல்ல சகல மேற்கு நாடுகள் சிங்கப்பூர்.யப்பான் அவுஸ்திரேலியா நாடுகளுக்கும் பொருந்தும்.

மூன்றாம் உலக நாட்டு மக்களின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஓரளவு பணம் மீதப்படுத்த உதவுகிறது.அதில் ஒரு அங்கத்தவர் குறைந்தாலும் நிலமை அவ்வளவுதான்.பல சந்தோசங்களை தொலைத்தே வாழ்க்கை நகருகிறது.ஒரு வீட்டுக்குள் இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் நெரிபட்டு வாழ்கின்றனர்.பலர் பெரிய வீடுகளை வாங்கி மனைவி குழந்தைகள் முகம் தெரியாமல் வாழ்கின்றனர்.விடிய எழுந்தால் நடுச்சாமம் வந்து படுப்பவர்கள் அதிகம்.பல வீடுகளில் திருட்டுப் பொருட்களை காணலாம்.

வீட்டை வாகனத்தை வாங்கிவிட்டு அவற்றை அனுபவிக்க வழியில்லாமல் ஓடித்திரிகிற கொடுமையான வாழ்க்கையே மேற்கு நாட்டு வாழ்க்கைகள்.முதலாளித்துவத்தின் கொடுமைகள் மக்கள் அறியாமல் வாழ்க்கை ஓடுகிறது.

இந்த நாட்டின் எந்த ஒரு சட்டமும் முதலாளிக்கே சாதகமானது.பெயரளவில்தான் மனித உரிமை,ஜனநாயகம்.தொழிலாளிகள் கொத்தடிமைகள்.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டக்கூடியவாறு வாழ்க்கை முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.இங்குள்ள ஒவ்வொரு தொழிலாளியும் கடனாளியாகவே வாழ்கிறான்.கடனாளியாகவே சாகிறான்.

முதலாளித்துவ சுரண்டலை உணரமுடியாதவாறு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்குறது.அரசுக்குக்கூட இரக்கம் கிடையாது.கந்துவட்டிக்காரன் போலவே இங்கேயும் கொடுமையான வாழ்க்கை முறை.இந்த வாழ்க்கை முறையே பலரை திருட வைக்கிறது.

மனிதாபிமானத்தை மறந்துவிட்ட தேசம்.பணத்துக்கு மட்டுமே மரியாதை.

்மேற்கு நாடுகளின் வளர்ச்சி என்பது ஒரு சில பண முதலைகளின் வளர்ச்சி.அது உழைக்கும் மக்களின் வளர்ச்சி அல்ல.கொடூரமான முதலாளித்துவம்.கந்து வட்டிக்காரனை விட மோசமாக உழைப்பை கொள்ளையடிக்கிறது.அதற்கு சட்டம் அதிகாரம் துணை நிற்கிறது.

எனது ்தாயநாடு அழகானது.எனது தேசத்துமக்கள் அன்பானவர்கள்.அதற்கு எந்த நாடும் நிகரல்ல.

(Vijay Baskaran)