கைதிகள் விடுதலைக்கு தமிழர் சமூக ஜனநாயக் கட்சி கோரிக்கை

பத்திரிகைகளுக்கான அறிக்கை

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துவிட்டன. யுத்தத்தை தலைமை தாங்கி நடாத்திய தளபதிகள், யுத்தத்தை நடாத்துவதற்கு தேவையான நிதி மற்றும் ஆயுத தளபாடங்கள் கிடைக்க மூல காரணமாயிருந்தவர்கள், யுத்தத்தை நியாயப்படுத்தும் பிரசாரங்களை முன்நின்று மேற்கொண்டவர்கள் என யுத்தத்தில் முழுமையாக ஈடுபட்ட சுமார் 12000 பேரை கடந்த அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீளவும் தமது சமூக பொருளாதார வாழ்வில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களையும், கணிசமானோருக்கு நேரடி உதவிகளையும் அரசாங்கம் வழங்கியிருக்கிறது. இருந்தும் சுமார் 100 பேரளவான முன்னாள் போராளிகளை தொடர்ந்து சிறைகளில் வைத்திருப்பது துயரமானதாகும்.

அவர்களிற் பலர் திட்டவட்டமான எந்தவித குற்றச்சாட்டுக்கும் உட்படுத்தப்படாமல் வெறுமனே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அநீதியானதாகும். சிலர் மீது குற்றங்கள்; சாட்டப்பட்டிருந்தாலும் நீதிமன்ற விசாரணைகளை விரைந்து முடிக்காமல் அரசு காலத்தை இழுத்தடித்து அவர்கள் சிறைக் கொடுமைகளுக்குள்ளேயே வாழ்;க்கையைக் கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கியுள்ளமை அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானதாகும்.

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், இனங்களுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கைகளை வளர்த்தல், நாட்டு மக்கள் அனைவரிடையேயும் அரச நிறுவனங்கள் மீது நல்லெண்ணங்களை உருவாக்குதல் போன்ற இலக்குகளுடன் முயற்சிகளை முன்னெடுப்பதாக கூறுகின்ற அரசாங்கம்; இந்த முன்னாள் போராளிகளான அரசியல் கைதிகளின் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சிறைகளில் அரசியற் கைதிகளே இல்லை பயங்கரவாதிகளே உள்ளனர் எனக் கூறுவது அரசின் பலவீனத்தையே காட்டுகிறது: அதனது வாக்குறுதிகளுக்கும் உண்மையான கொள்கை நடைமுறைகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளையே வெளிப்படுத்துகிறது.

சிறையிலுள்ள கைதிகள் சட்ட விரோதமற்ற முறையில் தமது அடிப்படை உரிமைகள் பற்றி அரசியல் சமூகத் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கும், தமக்கான நீதியை நிலைநாட்டும்படி கோருவதற்கும் அவர்கள் அமைதியான முறையில் தமது உணவை ஒறுக்கும் போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியேயில்லை. தற்போது சிறையிலுள்ள தமிழ் அரசியற் கைதிகள் நடாத்தும் உண்ணாவிரதப் போராட்டம் அவர்களுக்கான நீதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறதே தவிர மாறாக அரசைப் பணிய வைக்க முயற்சிக்கிறார்கள் என்று அரசாங்கத் தரப்பினர் குற்றம் சாட்டுவது ஒரு நல்ல ஆட்சிக்கு பொருத்தமானதல்ல.

உள்நாட்டு யுத்தத்தில் அரசு வெற்றியடைந்து விட்டதனால் நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டு விட்டது என அர்த்தமாகாது என்பதை இன்றைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட சிங்களத்தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒப்புக் கொண்டு வந்திருக்கிறார்கள் – பகிரங்கமாக அவர்களே கூறி வந்திருக்கிறார்கள். யுத்த நாசங்கள் இல்லை என்ற நிலையிலிருந்து உண்மையான சமாதானத்தின் பரிமாணங்களை நிலை நாட்டுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் சிறையிலுள்ள தமிழ் அரசியற் கைதிகளுக்கு உடனடியாக நீதி வழங்குவதுவும் பிரதானமானதாகும்.

கடந்த காலங்களில் இந்த தமிழ் அரசியற் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்திய ஒவ்வொரு வேளையிலும் ஜனாதிபதியும் பிரதமரும் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப் போவதாக வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் அவை மறக்கப்பட்டதால் நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுவதாகவே அமைகிறது. இம்முறையாவது, அவ்வாறு நடந்து கொள்ளாது உடனடியாக அவர்களுக்கான நீதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதியையும் பிரதமரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தமிழ் அரசியற் கைதிகள் தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அனைவரும் ஒற்றுமையாக அவர்களின் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எழும் கோரிக்கைக்கு நாமும் எமது ஆதரவை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த அறிக்கையை வெளியிடுபவர்

அ. வரதராஜா பெருமாள்

கட்சி அமைப்புச் செயலாளர்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.

கைபேசி :- 0768679292 — ஈமெயில் – gowry005@hotmail.com