தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

தமிழ்த் தேசிய கட்சிகள், வாக்கு அரசியல் ரீதியாகத் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டாலும், நினைவேந்தல் தடை போன்றதொரு முக்கியமான பிரச்சினையில், ஒன்றுமையாக ஓரணியில் திரண்டிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஆனால், ஓரணியில் திரள்வதும் அதன் ஊடாகச் சர்வதேசத்துக்குச் செய்தி சொல்வதும் மாத்திரம், அரசியல் வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடுமா என்கிற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் எழுச்சி என்பது, ஒற்றுமையாக ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டின் போக்கிலேயே நிகழ்ந்து வந்திருக்கின்றது. ஏனெனில், தமிழ் அரசியல், குறிப்பாகத் தமிழ்த் தேசிய அரசியல், பௌத்த சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிராக எழுந்த ஒன்று.

அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலுக்கும், அதன் ஓரணித் திரட்சிக்கும் சுதந்திர இலங்கையைத் தாண்டிய வரலாறு உண்டு. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம், அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துவிடும் என்றிருந்தால், அரை நூற்றாண்டுக்கு முன்னரேயே, தமிழ் மக்கள் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள்.

தேர்தல் மேடைகளில் உதிர்க்கப்படும் ஒற்றுமை, ஓரணிக் கோரிக்கை என்பன தர்க்க ரீதியானவை இல்லை. ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும், சனக்கூட்டங்களின் ஜனநாயக அடிப்படைகளோடு பலம் பெறும் நடைமுறைகள்தான். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால், ஒற்றுமையும் ஓரணித் திரட்சியும் மாத்திரம், எல்லாவற்றையும் பெற்றுத் தந்துவிடாது என்பதுதான் கள யதார்த்தம்.

ஒற்றுமையையும் ஓரணித் திரட்சியையும் தாண்டி, நடைமுறைக் களத்தைப் புரிந்து கொண்ட அரசியலுக்குத் தலைமைகளும் கட்சிகளும் அதன் பின்னால் திரளும் தரப்புகளும் தயாராக வேண்டும்.

ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேர்தல்களைக் குறிவைத்த அரசியல். அது, தூரநோக்கோ, அரசியல் உரிமைகளுக்கான இலக்குகளையோ கொண்டிருக்கவில்லை. தேர்தல் வெற்றி என்கிற ஒற்றைச் சிந்தனையையே அதிகம் கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் கட்சிகள், மக்களின் நம்பிக்கையை இழந்து, தோற்றுப்போன சந்தர்ப்பங்களில், தங்களைப் பலப்படுத்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தோற்றமும் கூட, அவ்வாறான பின்னணிகளைக் கொண்டவைதான். இன்றைக்கும் அப்படியான நிலையொன்று தோன்றியிருக்கின்றது.

அதன்போக்கில், தோற்றுப்போன தரப்புகளும் அதன் தலைவர்களும் ஓரணியில் திரள்வது என்கிற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரையில், ஏக தலைமைத்துவக் கோசத்தோடு இயங்கிய கூட்டமைப்பு, குறிப்பாகத் தமிழரசுக் கட்சி, இன்றைக்கு ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளோடு இணக்கமான நிலையெடுத்திருப்பது, அதன் போக்கிலானது என்பதுதான் பொதுவான உணர்நிலை.

திலீபனுக்கான நினைவேந்தல் என்பது, தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினை என்கிற காரணத்தால், மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகள், தவிர்க்க முடியாத சூழலில், மாவை சேனாதிராஜாவின் அழைப்பை ஏற்றிருக்கின்றன. ஓரணியில் சேர்ந்திருக்கின்றன என்கிற நிலையைத்தாண்டி, அதில் புரிந்து கொள்ளக் கூடிய அம்சங்கள் ஏதும் இல்லை. அப்படியான நிலையில், வாய்ப்பேச்சில் மாத்திரம் ஒற்றுமை, ஓரணித் திரட்சி என்கிற விடயங்களுக்கு, என்ன வகையிலான முக்கியத்துவம் இருக்கின்றது?

எந்தவோர் அரசியலும் அதுசார் போராட்டங்களும், சொந்த மக்களிடம் அங்கிகாரத்தைப் பெறாமல், பிறதரப்பிடம் அங்கிகாரத்தைப் பெற முடியாது. தமிழ்த் தேசிய அரசியலின் ஓரணித் திரட்சி என்பது, சொந்த மக்களிடம் சந்தேகங்களுக்கு அப்பாலான அங்கிகாரத்தைப் பெற வேண்டும். அது, சுயநல அரசியல் நோக்கங்களுக்கு அப்பாலான தலைமைத்துவங்களாலேயே சாத்தியப்படும்.

மாறாக, வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்த நகர்வு என்றால், அது அயோக்கியத்தனமான நடவடிக்கை. அது, மக்களை இன்னும் இன்னும் சோர்ந்துபோக வைக்கும்.

தமிழ் மக்கள், போராட்டங்களுக்கு உள்ளாலேயே வந்தவர்கள். அவர்களுக்கு, எந்தவகையான போராட்ட வடிவங்களும் புதியவை அல்ல! அதன் கடந்த கால அடைவுகள் குறித்தும் தெளிவான அனுபவங்கள் உண்டு.

அப்படியான நிலையில், அடையாளப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதால், என்ன பலன் என்கிற கேள்வியை, மக்கள் கேட்கும் கட்டத்தை நோக்கி நகர்த்திவிடக் கூடாது என்பதை, அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டங்கள் எல்லாமும் வெற்றியைப் பெறுவதில்லைத்தான். ஆனால், ஏற்கெனவே தோற்றுப்போன போராட்ட வடிவங்களை, மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னால், அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். அதுதான், புதிய வடிவிலான போராட்டத்தையும் அதற்கான உத்திகளையும் உருவாக்க உதவும். அவை, சர்வதேசத்தையும் அரசாங்கத்தையும் அந்தரமான நிலைக்குத் தள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய அரசியல் தோற்றம் பெற்றது முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் ஹர்த்தாலும் புறக்கணிப்புப் போராட்டமும் இருக்கும் ஒன்று! இவற்றைத் தாண்டி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயுதப் போராட்டத்தையும் நடத்தி இருக்கின்றது.

அப்படியான நிலையில், இந்தப் போராட்ட வழிமுறைகளின் இன்றைய வடிவம், என்ன கட்டங்களில் நோக்கப்படுகின்றது, அதற்கான முக்கியத்துவம் என்ன என்பது பற்றியெல்லாம், தெளிவாக ஆராய வேண்டும். அதைவிடுத்து, ‘போர் வெடிக்கும்’ என்கிற கோஷங்களால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. மாறாக, அவ்வாறான நிலைகள், சொந்த மக்களிடத்திலேயே தீண்டத்தகாத ஒன்றாகவே மாறும்.

ஆயிரம் நாள்களைத் தாண்டி நீண்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், தமிழ் மக்களால் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை, ஓர் உதாரணமாகக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வலியுறுத்தி, ஆரம்பித்த போராட்டமொன்று, காலம் செல்லச் செல்ல, போராட்டக்காரர்களுக்குள்ளேயே பல உடைவுகளைச் சந்தித்து நின்றது.

ஒரு போராட்டத்தை, அதன் உன்னதங்களின் போக்கில் நோக்காமல், சுயநல அரசியலுக்காகக் கட்சிகளும் அதன் தலைமைகளும் கையாள முற்பட்டமையே, அந்தப் போராட்ட வடிவத்தை அதிகமாகப் பாதித்தது. ஒரு கட்டத்தில், தமக்கிடையிலேயே போராட்டக்காரர்கள் முட்டி மோதிக்கொள்ளும் நிலை உருவானது. யாரை நோக்கி, போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்கிற கட்டம் மாறியது. தென் இலங்கை அதைக் கண்டு மகிழ்ந்து, கொண்டாடியது.

அதுபோல, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களுக்கு, ஆரம்பக் கட்டங்களில் ஆதரவளித்த மக்கள், காலம் செல்லச் செல்ல, அதிலிருந்து எட்டவிலகத் தொடங்கினார்கள். ஏனெனில், நீண்டு செல்லும் போராட்டமொன்றில், முழுமையாக அர்ப்பணிக்கும் அளவுக்கான காலமும் நேரமும் மக்களுக்கு இல்லை. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு, வாழ்வாதாரம் என்கிற நெருக்கடி, சொல்லிக் கொள்ளாத அளவுக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில், போராட்டத்துக்கு மனப்பூர்வமாக ஆதரவளித்தாலும், தொடர்ச்சியாக அதில் பங்கெடுத்தல் என்பது, சிக்கலான ஒன்றாக மாறுகின்றது. அது, அவர்களின் நாளாந்த நெருக்கடி. இவற்றையெல்லாம், தமிழ்த் தேசிய அரசியல் அனுபவமாகவும் படிப்பினையாகவும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்தான கேள்விக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பதிலளித்திருக்கின்றார்.

ஒற்றுமையானதும் ஓரணித் திரட்சியுடனான போராட்டம் என்று மார்தட்டிக் கொண்டிருப்பதற்கு முன்னால், ‘எதிரி’ எவ்வாறான சிந்தனைகளோடு இருக்கிறான் என்பதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால்தான், அதற்கு ஏற்ற மாதிரி அரசியலையும் அதற்கான போராட்ட வடிவங்களையும் வடிவமைக்க முடியும்.

“நீங்கள் ஹர்த்தால் நடத்தினால், ஒன்றும் ஆகப்போவதில்லை. கடந்த காலப் பதிலையே வழங்குவேன்” என்கிற இறுமாப்புள்ள ஆட்சியாளர்களிடம், அவர்கள் மறுதலிக்க முடியாத அரசியலுக்குள் சிக்க வைக்கும் போராட்டத்தை வடிவமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அது, மீண்டும் முதலாவது படியில் கால் வைப்பதாக இருந்தாலும் பரவாயில்லை.

ஏனெனில், வாய்ஜாலங்களால் ஒன்றும் ஆகப்போதில்லை. அதனால், அரசியலை உளப்பூர்வமாகவும் அர்த்தபூர்வமாகவும் முன்னெடுக்கும் தரப்புகளாக, தமிழ்த் தலைமைகள் எழ வேண்டும். இல்லையென்றால், வரப்போகும் பேரழிவுகளுக்கு அவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.