தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 14)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி ஊர் உள்ளது. திருக்கோணமலை மாவட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்கின்ற ஊர் தென்னவன்மரபுஅடி ஆகும். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் கணக்கெடுப்பில் தமிழ் ஊர் எனப் பதியப்பட்ட ஊராகும்.முழுமையாக தமிழ் மக்கள் வசித்த ஊர்.
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள் குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக் கேட்டுக்கொண்டிருந்தது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில் இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொருட்களை விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்து சென்றிருந்தார்கள். இக்கொள்வனவிற்கு தென்னவன் மரபுஅடியில் வசித்த சில தமிழ் இளைஞர்களும் புல்மோட்டையில் வசித்த சில முஸ்லிம் இளைஞர்களும் உதவினார்கள். பலத்த அச்சம் நிலவிய நாள் அது.
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டு 11 சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.(அதில் சில பொது மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது)
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து 33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.

1984 டிசம்பர் 30 ஆம் நாள் கென்ற்பாம் என்ற சிங்கள குடியேற்ற ஊரில்29 பேரும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இம் மூன்று தாக்குதல்களினால் புல்மோட்டை, தென்னவன்மரபுஅடி ஆகிய ஊர்கள் அச்சத்தில் இருந்தன. அவ்வாறான நிலையில் புல்மோட்டைக்கு துணிகரமாக வந்த விடுதலைப் புலிகள் அங்குள்ள முஸ்லிம் மக்களின் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றார்கள்.
புல்மோட்டை முஸ்லிம் மக்கள் அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களுடனும் நல்லுறவை தொடர்ந்து பேணிவந்திருந்தனர். அங்கு ஆட்சியாளர்களினால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது என்பதனை மறுக்கமுடியாது. புல்மோட்டையிலுள்ள முஸ்லிம் மக்கள் பேசுகின்ற மொழியினை வைத்து அவர்கள் தமிழ் மக்களா அல்லது முஸ்லிம் மக்களா என இன்றும் பிரித்தறியா முடியாத நிலை உள்ளமையானது அங்கு தமிழ்பேசும் மக்களின் உறவின் ஆழத்தினைப் புரிந்து கொள்வதற்கான சான்றாகும்.
நாய்களின் குரைத்தல் ஒலி தென்னவன்மரபுஅடி ஊரின் நடுவிலும் உரத்து ஒலித்தது. ஊர்மக்களின் ஒவ்வொரு வீட்டுக் கதவுகளும் தட்டப்பட்டு பதவிசிறிபுர பகுதியில் இருந்து வந்த ஆயுததாரிகளால் எழுப்பப்பட்டனர். அனேகமாக வயது வேறுபாடின்றி, ஆண்பெண் என்ற பால் வேறுபாடின்றி சிறுவர் முதியோர் என்ற பேதம்இன்றி அனைவரும் துன்புறுத்தப்பட்டனர். கையிலிருந்த துப்பாக்கிகளால் தாக்கப்பட்டனர். சிலர் உயிரச்சம் காரணமாக தப்பிப்பதற்காக அருகிலிருந்த காடுகளை நோக்கி ஓடியபோது துப்பாக்கியால் சுடப்பட்டனர். அன்று முழுவதும் அவ்வூர் அல்லோலகல்லோப்பட்டது. தென்வன்மரபுஅடி ஊரில் அன்றைய நாள் 15 பேரை காடையர்கள் சுட்டுக்கொன்றனர். 12 பேர் காயமடைந்தனர். தென்னவன்மரபுஅடி என்ற ஊருக்கு அருகாமையில் இருந்த ஊரான “அமரவயல்“ (இவ்வூரின் பெயர் தற்போது திருக்கோணமலை மாவட்டத்தில் வசிக்கின்ற பலருக்கு அப்படியொரு தமிழ் ஊர் இருந்ததா? என்பதே தெரியாமல் உள்ளது என்பதே உண்மை) என்ற ஊர் வரை இத்தாக்குதல் நீண்டிருந்தது. இவ்விரு ஊர்களில் வசித்த மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என காடையர்கள் அச்சமூட்டினர். அப்போது இவ்வூர்களின் விதானையாராக பணியாற்றிய சி.வைரமுத்து என்பவரின் ஆலோசனையினடிப்படையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் நாலாம் நாள் ஆண்டாண்டு காலமாக தாம் வாழ்ந்த மண்ண விட்டு வடக்கு நோக்கி இரவிரவாக காட்டுவழியால் தமது கைகளால் கொண்டு செல்லக் கூடிய பொருட்களை எடுத்தக்கொண்டு சென்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள “பொன்னகர்“ என்ற ஊரில் வசிக்கத் தொடங்கினார்கள். இன்றுவரை பொன்னகரில் தான் அநேகமான தென்னவன் மரபுஅடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அன்றைய நாள் தாக்குதலின் நிறைவில் புல்மோட்டைக்கு வந்த காடையர்கள் பொருட்கள் விற்பனை செய்த முஸ்லிம் மக்களை அச்சுறுத்திச் சென்றனர். ஆனால் அவர்களை தாக்குவதற்கு தலைமையேற்று வந்தவர் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கினையும் கிழக்கினையும் பிரிப்பதற்கான நிகழ்ச்சிநிரலின் முதலாவது அடி வெற்றிகரமாக ஆட்சியாளர்களால் காடையர்கள் மூலமாக நிவர்த்திக் கப்பட்டது.
அச்சமூட்டுதல், பிரித்தாளுதல் , ஒருசாராரை தமது கைக்குள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டனர் ஆண்ட ஆட்சியாளர்கள். வடக்கு கிழக்கு மக்களது பலத்தினை குறைப்பதற்காக தென்னவன்மரபுஅடி ஊரிலிருந்து மக்களை வெளியேற்றியதுடன் மணலாறு என்ற பாரிய குடிறயேற்றத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தினை செயற்படுத்தத் தொடங்கினர்.
விவசாய அபிவிருத்தி என்ற போர்வையே மணலாறு (வெலிஓயா) குடியேற்றத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.