தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)

சிறப்பு அதிரடிப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளீர்த்து இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இஸ்ரவேல் பாதுகாப்பு முகவரகம் ( Israel security Agency ) இன் சின் பெத் (Shin Beth) பயிற்றுவிப்பாளராக சிறப்பு அதிரடிப்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆயதப் பயிற்சிகளுடன் சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களிடையே எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாக விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற ஆலோசனை மற்றும் திட்டமிடல்களையும் முன்வைத்தார். அவ்வாலோசனைகள் சிறிலங்கா அரசிற்கு தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது. 

1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் டொலர்பாம், கென்ற்பாம், கொக்கிளாய் போன்ற இடங்களில் குடடியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் ஊர்காவல்படையினரையும் வெளியேற்ற வேண்டிய தேவை விடுதலை இயக்கங்களுக்கு இருந்தது. இவ்விடங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலநூறு சிங்கள மக்கள் தமது உயிர்களைத் துறந்தனர். 1985 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் திருக்கோணமலை மாவட்டத்தில் தெஹிவத்தை, மஹிந்தபுர, ஆண்டாங்குளம், கந்தளாய் அம்பாறை மாவட்டத்தில் அரந்தலாவ பொலனறுவை மாவட்டத்தில் திருக்கோணமடு ஆகிய இடங்களில் சிங்கள ஊர்காவல்படைகள் மீதும் சிங்கள பொது மக்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்தன. அநுராதபுரத்தில் 146 சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல்கள் சிங்கள மக்களிடையே அச்சத்தையும் அரசிற்கு சிக்கல்களையும் தோற்றுவித்தது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் பல தமிழ் ஊர்கள் மீது படையினர் தாக்குதல்கள் மேற்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களது உயிர்களை பறித்ததுடன் சொத்துக்களை முற்றாக நாசம் செய்தார்கள். அப்போது பாதுகாப்பு பந்தோபஸ்து அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி அவர்கள் நேரடியாக வருகைதந்து கட்டைப்பறிச்சான், சேனையுர், சம்புர், கடற்கரைச்சேனை ஆகிய ஊர்களில் 900 மேற்பட்ட வீடுகளை எரித்தமை சிறந்த எடுத்தக்காட்டாகும்.
இஸ்ரவேல் பயிற்றுவிப்பாளரது திட்டங்கள் கிழக்கு மாகாணத்திலே நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கு வசதியாக பல கள நிலைகள் கிழக்கில் காணப்பட்டன.
1. அக்காலத்தில் முஸ்லிம் மக்களது வர்த்தக நிலையங்களில் தமிழ் விடுதலை அமைப்புகள் பலவந்தமான நிதி திரட்டலில் ஈடுபட்டமையினால் முஸ்லிம் வர்த்தகர்கள் விடுதலை இயக்கங்கள் மீது அதிருப்தியைக் கொண்டிருந்தனர்.
2. முஸ்லிம் மக்களது உந்துருளிகளையும் வாகனங்களையும் தமது தேவைக்காகப் பலவந்தமாக பறித்தனர். இந்நடவடிக்கைகளும் முஸ்லிம் மக்கள் மீது விடுதலை அமைப்புகள் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கியது. இந்நடவடிக்கைகளில் அதிகளவில் ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கமும் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டிருந்தனர். இது கிழக்கு மாகாணம் முழுவதும் நடைபெற்றது. (அப்போதைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களிடையே அதாவது 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறந்த புரிந்துணர்வும் உறவும் இருந்ததனை யாராலும் மறுக்க முடியாது.)
3. 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் இளைஞர்களும் சிறிது சிறிதாக விடுதலை இயக்கங்களில் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
இம் மூன்று நடவடிக்கைகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியது அரசு.
ஈரோஸ், இ.பீ.ஆர்.எல்.எப் ஆகிய இயக்கங்களிலேயே முஸ்லிம் இளைஞர்கள் ஆரம்பத்தில் இணைந்தனர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலும் இணைந்தனர்.
அரசு தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட சிலரை விடுதலை இயக்கங்களில் உள்நுழைத்தனர். இதன் மூலமாக விடுதலை இயக்கங்களின் நகர்வுகளை அரசிற்கு எளிதாக அறியக்கூடியதாக இருந்தது.
1985 இல் கிண்ணியா, அக்கரைப்பற்று சம்பவங்கள் அரசுக்கு சாதகமாக அமைந்தன. ஒன்று அரசினால் திட்டமிடப்பட்டது. மற்றயது விடுதலை அமைப்புகளினால் தோற்றுவிக்கப்பட்டது.
அக்கரைப்பற்றில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் பணம் கோரி விடுதலை அமைப்பொன்றினால் கடத்தப்பட்டார். பெருந்தொகைப் பணம் கோரியமையினால் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. ஆனால் சிறிலங்கா அரசு சிறப்பு அதிரடிப்படையின் உயர் அதிகாரிகளைப் பயன்படுத்தி முஸ்லிம் மக்களை விடுதலை இயக்கங்களுக்கு எதிராக தூண்டியது. 1985 ஏப்பிரல் மாதம் 8 ஆம் நாள் தொடங்கி 12 ஆம் நாள் வரை தொடர்ச்சியான கடையடைப்பு மற்றும் நிருவாக முடக்கத்தினை முஸ்லிம் மக்கள் நடத்தினர். முஸ்லிம் மக்கள் ஒருபடி மேல் சென்று முஸ்லிம்கள் நாடு பிரிதலுக்கு எதிரானவர்கள் என்ற கோசத்தை முன்வைத்ததுடன் தேசியக் கொடியையும் நகரில் பல இடங்களில் ஏற்றினர்.
இந்நடவடிக்கை விடுதலை இயக்கங்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினையை தூண்டிய சம்பவமாக மாறியது. சில நாட்களின் பின்னர் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பல நகர்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. கல்முனை, காத்தான்குடி, ஏறாவுர், ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற இடங்கள் இதற்கு இரையாகின. இஸ்ரவேலின் முதலாவது திட்டமிடல் எதிர்பார்த்ததைவிடஅதிகளவான வெற்றியைக் கொடுத்தது.
கிண்ணியாவில் விறகு ஏற்றச் சென்ற ஐந்து பேர் காணாமல் போயினர். அவர்களை விடுதலை இயக்கங்கள் கடத்தின என முஸ்லிம்களால் நம்பப்பட்டது. கடத்தப்பட்டு சில நாட்களில் விடுதலைப்புலிகளின் தம்பலகமம் பொறுப்பாளர் குரு மற்றும் உதயன் ஆகிய உறுப்பினர்கள் கிண்ணியா குட்டிக்கரைச்சி என்ற இடத்திற்கு அண்மையில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த போது நான்கு முஸ்லிம் இளைஞர்களால் வலையினால் வீசிப் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் தாம் விடுதலைப் புலிகள் எனக்கூறியும் பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் ஊர்த்தலைவர்கள் கூறியும் இருவரும் விடுவிக்கப்படவில்லை. அரை மணிநேரத்தின் பின்னர் இராணுவத்திடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
விறகு வெட்டச் சென்றவர்களில் ஒருவர் சில வாரத்தில் வீடு திரும்பிய பின்னர் தான் தெரிந்தது அவர்களை கடத்திக் கொன்றது சிங்களப் படைகளே என்று.
மொசாட்டின் இரண்டாவது திட்டமிட்ட செயற்பாடும் வெற்றிவாகை சுடியது.
தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள் தமக்கிடையேயான பிரிவிற்கு விடுதலைப் போராட்ட அமைப்புகளும் முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்த தீவிரவாத அடிப்படைவதிகளும் துணை போனமை கவலையான விடயங்களே. (அடுத்த தொடரில் கிண்ணியா, மூதூர் நகர் எரிப்பு விரிவாக)

(தொடரும்…..)