தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 05)

கிண்ணியா நகர் மீதான தாக்குதலை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அந்தப்பொறுப்பு சிறப்பு அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1985 மே 17 ஆம் நாள் ஊர்காவல்படைக்கென சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் முன்செல்ல அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பிலுவில் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு சிறுவர்கள் பெண்கள் உட்பட 40 அப்பாவித்தமிழர்கள் கோரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டனர்.

தமிழ் பேசும் மக்களிடையே விரிசல்களை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டன. அப்போது சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக இருந்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திரு சேர்ணி விஜேசுரியவின்( Zerney Wijesuriya) திட்டமிட்ட செயற்பாடுகள் அவர்களின் வெற்றிக்கு துணையாக இருந்தன. அத்துடன் மொசாட் சிறந்த ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிக்கொண்டிருந்தது. 1983 ஆம் ஆண்டில் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டாலும் 1987 ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போரில் அவர்களது செயற்பாடுகள் அதிகளவில் இருந்தன. ஆனால் 1985 ஆம் ஆண்டிலிருந்து சிறு தாக்குதல்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பணியில் அவ்வப்போது ஈடுபட்டார்கள். கிரானிலிருந்து பொத்துவில் வரை 15 முகாம்களிலிருந்து செயற்பட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான அவர்களின் பொறுப்பிலேயே இருந்தது.
அம்பாறையில் தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த அவசரமான காரணங்கள் இருந்தன. அவற்றைத் தெரிந்துகொள்ள கல்லோயா திட்டத்தினை அறிய வேண்டியது முக்கியமாகும்.
கல்லோயா திட்டம் திரு .டீ.எஸ். சேனனாயக்கா விவசாய அமைச்சராக இருந்தபோது திட்டமிடப்பட்டது. கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தார்கள். அல்லை, கந்தளாய், கல்லோயா என்பன கிழக்கு மாகாணத்திலே பெரும்பான்மையாக இருந்த தமிழ்பேசும் மக்களை சிறுபான்மையாக மாற்றுகின்ற திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களாகும்.
கல்லோ திட்டத்திற்கான அபிவிருத்திச்சபையின் முதலாவது தலைவர் ஒரு தமிழர் ஆகும். காணி ஆணையாளராக பணியாற்றிய திரு.க.கனகசுந்தரம் என்பவரே தலைவராக திரு.டீ.எஸ். சேனனாயக்காவினால் நியமிக்கப்படடார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணி சட்டத்தரணி திரு.என்.ஈ.வீரசுரியா( N E Weerasooria) ,ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர் திரு ஆதர் அமரதுங்க(Arthur Amaratunga), அப்போதைய நிலஅளவையாளர் நாயகம் திரு. ஆர்.எல். புரோகியர் (R L Brohier) ஆகியோர் கல்லோயா அபிவிருத்திச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
அம்பாறை மாவட்ட வதிவிடப்பிரதிநிதியாக திரு சேர்ளி அமரசிங்க (Shirley Amerasinghe) நியமிக்கப்படடார். ஏறத்தாள 150000 ஏக்கரில் திட்டம் நடைமுறைப் படுத்துவதென திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தினை வடிவமைப்பதற்காக பொறியியலாளர் அணியொன்று திரு ஆர.எல்.ஹகவிற்ற ( R L Kahawita) திரு.கென்னடி(Kennedy) ஆகியோரின் கூட்டுத் தலைமையில் திரு.ஆறுமுகம் (Arumugam) பேராசிரியர் றெனி ஹகவிற்ற (Professor Renee Kahawita) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மூன்று முன்மொழிவுகளை பொறியியலாளர் அணி பரிந்துரைத்தது.
1. அணை மற்றும் நீர்பாசன வலையமைப்பு வடிவமைக்க முடியும். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த இலங்கையில் பொறியியல் வலு இல்லை. ஆகையினால் சர்வதேச அளவில் விலைமனுக் கோரலினடிப்படையில் திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. நவீன பாரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கட்டடம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு உள்ளூர் மனிதவலுக்கள் பயன்படுத்தப்படலாம்.
3. துப்பரவாக்கப்படும் காணிகளில் வீடுகள் கட்டப்பட்டு 50000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டு நீர்பாசனத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.

சர்வதேசமட்டத்தில் விலைமனுக்கோரப்பட்டு வேலைகள் அமெரிக்க நிறுவனமான மொரிசன் நட்சன்( Morrison Knudsen) இடம் கையளிக்கப்ட்டது.
1953 ஆம் ஆண்டு இங்கினியாக்கல அணைக்கட்டு பூர்த்தியாக்கப்பட்டு குடியேற்றவாசிகளுக்காக வீடுகளும் அமைக்கப்பட்டன. கண்டி, கேகாலை மாவட்டங்களிலிருந்து மக்கள் மட்டக்களப்பிற்கு தொடர்வண்டி மூலமாக அழைத்துவரப்பட்டு அங்கிருந்து கனரக (ரக்) வாகனங்களில் உரிய இடங்களிற்கு கொண்டுசேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சமையல் பாத்திரங்களும் தொழில் புரிவதற்கான உபகரணங்களும் வசிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
1957 ஆம் ஆண்டளவில் 30000 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். திட்டத்தில் 70 வீதம் பூர்த்தியாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தொடர்ச்சியாக சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டுக் கொணடிருந்தன. 1985 ஆம் ஆண்டுவரை குடியேற்றம் சிறிது சிறிதாக நடைபெற்றுக்கொண்டே இருந்தது. இச்செயற்பாட்டினை தமிழ் பேசும் மக்கள் விசனத்துடன் நோக்கிக்கொண்டிருந்தனர். எதிர்ப்புகளையும் வெளியிடத் தொடங்கியிருந்தனர். நாட்டில் ஆட்சிமாற்றங்கள் எற்பட்டாலும் பொதுநோக்கில் அவர்களிடையே கருத்து முரண் இருந்ததில்லை.