தோழர் தா. பாண்டியன் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்…

காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜொய்சி என்ற பெண்ணை தா.பா.வுக்குத் திருமணம் செய்து வைத்தார் அப்பா தாவீது. பாண்டியனுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் தான் வகித்த வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் தா.பா. அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது மனைவி அனுப்பி வைக்கும் சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. “திருமணமான புதிதில் அவளது சின்ன எதிர்பார்ப்பான பூவைக் கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று 2012-ல் மறைந்துவிட்டாள். இப்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனைத் தீர்க்கிறேன்” என்கிறார் பாண்டியன். மனைவின் மரணத்தின் பின்பு நினைவுகளை மீட்கும் பாண்டியன் இந்திய மரபுசார் குடும்ப உறவு முறைகளை அவரும் தூக்கிப் பிடிக்க தவறவில்லை என்பதை நிறுவி நிற்கின்றார்.சிறந்த மேடைப் பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு.தேர்தல் சமயங்களில், ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக’, ‘தாலிக்குத் தங்கம் இல்லை… தாளிக்க வெங்காயம் இல்லை’ என்பன போன்ற சரியான சொற்களை மிகச் சரியான நேரத்தில் முழக்கங்களாக எழுப்புவார்.1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்தவர், மரணிக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி’ என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை என்று இவருடன் சம காலத்தில் பயணிப்பவரகள் கூறுவதுண்டு.16 ஆண்டு காலம் ‘ஜனசக்தி’ ஆசிரியராக இருந்த இவர் இதுவரையில் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதில் ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ நூல்கள் அதிக வரவேற்பைப் பெற்றவை!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றோர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய பாண்டியன், 1983 முதல் 2000-ம் வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறைகூட தன் கட்சி சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாகியிருக்கிறார். சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரசும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை. கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.இந்த கால கட்டங்களில் ஈழவிடுதலை அமைப்புகளுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். அதிலும் தோழர் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் உடன் மிக நெருங்கிய தோழமையையும் உறவுகளையும் நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். அவ்வேளைகளில் அவரை சில தடவைகள் சந்தித்த அனுபவங்களும் எனக்கும் உண்டு.ஈழத் தமிழ் மக்கள் மீதான் கரிசனையை கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கொண்டிருந்த இடதுசாரித் தோழர் தா. பாண்டியன். ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால கட்டங்களில் மிகச் சரியான தனது நிலைப்பாட்டை எடுத்து செயற்பட்டு வந்தவர்களில் தா. பாண்டியனும் ஒருவர்.2000-ல், ஐ.க.க. வை விட்டு விலகி தாய்க் கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல், கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும் முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், மரணிக்கும் வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுக்களை மேடையில் மொழி பெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பா.வும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து பாண்டியன் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்தார். கால ஓட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்தார்.வரலாற்று ஓட்டத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட ஏகபோக தலமையின் போக்கை சரியாக எடை போடுவதில் அவருக்கு இருந்த குழப்பங்கள் உணரப்படக் கூடியது. கூடவே தமிழ் நாட்டுத் திராவிடக் கட்சிகளின் சலுகை அரசியலிலும் இவருக்கு இருந்த ஈடுபாடு விமர்சன ரீதியாக பார்க்கப்பட்டது. அவரின் இவ்வாறான செயற்பாடு அவரின் கடந்து வந்த அரசியல் வாழ்வியலை உற்றுப் பார்த்தால் உணரப்படக் கூடியது.இந்த உலகத்தை மீட்க ஒரே ஒரு கட்சியால்தான் முடியும் என்றெல்லாம் கருத மாட்டார். மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தி வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் போட்டாலும் முதல் ஆளாகப் போய்விடுவார்.அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967 ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும்கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.கருணாநிதி பற்றி…. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பதவியேற்று 49 ஆண்டுகளை நிறைவுசெய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளார் கருணாநிதி. வெற்றி, தோல்வி, சாதனை, சோதனை… என தி.மு.க-வின் தலைமைப் பொறுப்பில் அரை நூற்றாண்டைத் தொடும் கருணாநிதியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது இவ்வாறு கூறுகின்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன்…’1948 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அடக்குமுறைகளும் ஏவிவிடப்பட்டிருந்தன. அதுகுறித்துப் பேசவோ, நடக்கிற சம்பவங்களைக் கண்டிக்கவோ கம்யூனிஸ்ட்டுகள் மேடையேற முடியாது. சேலம் சிறைச்சாலையில், அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கம்யூனிஸ்ட் தோழர்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுகுறித்து மதுரைக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். கம்யூனிஸ்ட் தோழர்களேகூட அவ்வளவு ஆவேசமாக, உணர்ச்சிவசமாகப் பேசியிருப்பார்களா என்பது சந்தேகம்.கம்யூனிஸ்ட் கட்சியினரின் தியாகம், அந்தக் கட்சியின் தேவை என்பதையெல்லாம் குறிப்பிட்டவர், ‘பொதுவுடைமை வேண்டும்’ என்றும் பேசினார். ‘தி.மு.க-வின் நோக்கமும் பொதுவுடைமைதான்… இந்த ஆட்சியைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்துவிடலாம் என கம்யூனிஸ்ட்கள் நினைக்கிறார்கள். எங்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவந்து, ஆட்சியைக் கைப்பற்றி, படிப்படியாக பொதுவுடமையைக் கொண்டுவருவதுதான் எங்களது நோக்கமும்கூட’ என்று முடித்தார். அன்றைக்கு அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.அவரது இந்த கருத்து ஒரு யதார்த்த அரசியலை அவர் புரிந்து கொண்டதை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்களால் இன்றும் பார்க்கப்படுகின்றது. தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற முறையிலேயே அவரது அரசியல் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளன.தி.மு.க-வுடன் நாங்கள் கூட்டணியில் இல்லாதபோதும்கூட இலக்கியக் கூட்டங்கள், கண்டனக் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைத்திருக்கிறார். அப்போது, மேடையில் அருகருகே அமர்ந்திருக்கும்போது, ‘கட்சி ரீதியில் நாம் இரண்டு பேரும் பக்கத்தில் உட்கார முடியவில்லை. ஆனால், தமிழன்னை நம் இருவரையும் இங்கே அருகருகே உட்கார வைத்திருக்கிறாள்’ என்று மெதுவாகச் பாண்டியன் சொல்வார்.பதிலுக்கு கருணாநிதி ‘என்னை தா.பாண்டியன் தாக்கி எழுதியதையும் படித்து ரசித்திருக்கிறேன். தாங்கி எழுதியதையும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் அவரது தமிழ் எனக்குப் பிடிக்கும்’ என்று அவரே சொல்லியிருக்கிறார்.நட்பை முரண்பட்ட சித்தாந்தம் உடையவர்களிடையே எவ்வாறு பேணி வந்தார் தோழர் தா. பாண்டியன் என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வுகள் அடையாளமாக இருக்கின்றன.தா. பாண்டியன் பற்றி அவருடன் நெருக்கமாக பயணித்த ரதன் சந்திரசேகர் இவ்வாறு கூறுகின்றார் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தாபாவின் பங்களிப்பு என்ன? முதன்மையானதாக நான் கருதுவது இதைத்தான், 1970 – 80 களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை, தன் வசீகரச் சொல்லாற்றல் மூலம் கட்சிக்குள் ஈர்த்த, ஒரே தலைவர் தா.பாண்டியன்தான்., அவர் மட்டும்தான். அந்தப் பெருமை அவருக்கே உரித்தானது, தா.பாவுக்கு பின்னர் அது நிகழவேயில்லை…..முன்னர், தோழர் ஜீவாவும், தோழர் பாலன் என்று தோழமையுடன் விளிக்கப்பட்ட கே.பாலதண்டாயுதமும் அத்தகைய, திறன் பெற்றவராயிருந்தார். தா.பாவின் மற்ற பங்களிப்புகளை விடுத்து, இதனை, முதன்மையாகக் குறிப்பிடுவதில் காரணிகள் உள. அவரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள், வேறேதும் பாதையில் பிறழாமல், பொதுவுடமைக் கோட்பாட்டின் இலட்சியங்களுக்காக, இன்றளவும் தொடர்ந்து உழைத்தே வருகின்றனர், என்பதே ஒரு பேராதாரம் என்றும் குறிப்பிடுகின்றார் அவர் பாதையில் பயணிக்கும் தோழர் ரதன்.தமிழ் நாட்டு மக்களின் மனதில் ஈழத் தமிழர் மனங்களில் தா. பாண்டியனும் சிம்மாசனம் போட்டு அமர்ந்த கொண்டுதான் இருப்பார். அவருக்கு எமது அஞ்சலிகள். அவரின் அரசியல் வாழ்வு அனுபவங்களை நாம் உள்வாங்கிக் கொள்வோம்.(பல்வேறு ஊடகங்களிலும் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது)