நவீன பாஞ்சாலி சபதம்! [நிஜம் கலந்த கற்பனை]

 
ஏய்! அருச்சுனா என் சுயம்பரத்தில் உன் வில்வீரம் காட்டி என்னை மணம் முடித்தாய் தமிழ் அரசு கட்சி தன் உணர்ச்சிகர பேச்சால் தமிழ் மக்களை கவர்ந்தது போல. கர்ணனும் உன்னை ஒத்த வீரன்தான் ஆனால் தமிழ் காங்கிரஸ் மலையக மக்கள் விடயத்தில் தவறான் முடிவு எடுத்ததால் தமிழ் மக்கள் அதனை விலத்தியது போல கர்ணன் வளர்ந்த குலத்தை காட்டி சபை விலக்கியது. இல்லை என்றால் கர்ணனுடன் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்திருப்பேன்.

 உன் தாய் என்னை பண்டம் என நினைத்து பங்கு போட சொல்ல அதை மீறமுடியாமல் என்னை உனது சகோதரருக்கும் தாரமாக்கினாய். ஆனந்தசங்கரி சூரியனை கையகப்படுத்த பிரபாகரன் சொல்படி வீடு சின்னத்தில் கூட்டாக போட்டியிட்டது போல. அன்று துரியோதனன் சபையில் கர்ணன் என்னை பஞ்சவர் பாவை என எள்ளிநகையாடினான். இன்று பிரபாகரன் மறைந்ததும் நடக்கும் உள்குத்தை பார்த்து தேவானந்தா இது கூட்டமைப்பு அல்ல கூத்தமைப்பு என ஏளனம் செய்கிறார்.
துச்சாதனன் என் தலைமுடி பிடித்து இழுத்து சபை நடுவில் நிறுத்த என் துகில் உரிய சொன்னான் துரியோதனன். நெடுமரம் போல் ஐவரும் நிற்க என் மானம் காக்க ஆடை தந்தான் மாய கண்ணன். இறுதியுத்த நேரத்தில் பாராளுமன்றத்தில் இருந்த வடக்கின் ஐந்து கட்சிகளும் கையறு நிலையில் இருந்தபோது மக்கள் மானத்தை மட்டுமல்ல உயிரையும் காக்க கண்ணனை தேடினார்கள். அவன் வரவில்லை. ராஜீவ் காந்திபோல் பொட்டடம்மானின் மனிதவெடி குண்டுக்கு அவனும் பலியாகி இருக்கலாம்.
முறை வைத்து என்னுடன் இல்லறம் நடத்திய உங்களால் என் இடர் தீர்க்க இயலாது போனது போலவே, தேர்தல் காலத்தில் மட்டும் கூடி ஆசனங்களை பங்கு போடும் கூட்டமைப்பு வாக்குகள் பெற்றபின் அறிக்கைகள் விட்டும் தமிழ் மக்களின் நிலை மாறதாது போல. என் தலைவிரி கோலம் கண்ட பின்பே நீங்கள் குருசேத்திரம் கண்டீர்கள். சனல் 4 தொலைகாட்சி ஆதாரத்துடன் தமிழர் அவலத்தை காட்ட கண் கலங்கிய உலகத்திடம் நியாயம் கேட்க ஐ நா சென்ற தமிழ் தலைமைகள் போல.
ஐவருடன் வாழ வேண்டி வந்தாலும் சுயம்பரத்தில் உனக்குத்தான் நான் மாலையிட்டேன்.  உன்னைத்தான் என் துணைவனாய் நான் ஏற்றேன் தமிழ் அரசு கட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதுபோல. நீ தான் உன் தாயிடம் கனி ஒன்று கொண்டு வந்ததாக கூற அனைவரும் பகிர்ந்து உண்ணுங்கள் என்றாள் குந்தி. குழப்பம் உன் சொல்லால் தான் வந்தது. தெளிவான பேச்சின்றி செயல்பட்ட தமிழ் அரசு கட்சி சமஸ்டி தனிநாடு மாவட்டசபை என குழப்பியதால் தமிழ் ஈழம் காண பல ஆயுத இயக்கங்கள் தோன்றியது போல.
உன் மீது கொண்ட மையல் தான் முதன்மையானது. உன் வீரத்தில் நம்பிக்கை வைத்து தான் குருசேத்திர யுத்தத்தில் வெற்றி நிச்சயம் என நம்பிகையோடு இருந்தேன். இது கூட தனித்து போட்டியிட்டால் பெரும்பான்மை ஆசனங்கள் தமக்கே என திடமான நம்பிக்கை கொண்டுள்ள தமிழ் அரசு கட்சி போன்றதே. அருச்சுனன் இல்லாது போர்க்களம் போக ஏனைய பாண்டவர் முயலவில்லை. அதுபோல் தேர்தலில் தமிழ் அரசு கட்சியை விலத்தி செல்ல ஏனைய கட்சிகளும் தயாராய் இல்லை.  இந்த யுகத்தில் பாண்டவர் ஒன்றுபட்டு நிற்க பிராப்தம் இல்லை. இன்று கூட்டமைப்பில் புது குழப்பம் பேரவையால்.
நீதிமானான தருமனே [விக்னேஸ்வரன்] தடுமாறும் நிலை. அருச்சுனனுக்கு சொன்ன கீதையை கம்பவாருதி தருமனுக்கு சொல்லும் நிலை. அருச்சுனனுக்கு [சம்மந்தர்] எதிராக பீமனும் [சுரேஸ்] கதாயுதம் தூக்க, நகுல [சித்தார்த்தன்] சகாதேவன் [செல்வம்] சஞ்சலத்தில். வானில் பேரிடி எழும்போது பயத்தில் அருச்சுனா அபயம் அருச்சுனா அபயம் என்பது போல் உன்னையே அரணாக இன்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். நல்லாட்சியில் துரியோதனர்கள் தமிழ் மக்கள் பங்கை கொடுக்க முயற்சிக்கும் வேளையில் தமிழ் மக்கள் போல உன்னைத்தான் நான் அரவணைப்பேன். தம்மை பங்குபோட நினைக்கும் பேரவையை ஏற்காத தமிழ் மக்களை போல.
[உள்ளூர் ஆட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடும் என்ற செய்திக்கான கட்டுரை]       
 (மாதவன் சஞ்சயன்)