நிர்வாணம் அவமானம் அல்ல!

ஆடையகங்களில் துணிமாற்றும் போது, விடுதிகளில் தங்கும் போது சுற்றுமுற்றும் வீடியோ கமெரா பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணித்துக்கொள் என்பதைத் தாண்டி அவ்வாறு வீடியோ கமெராவில் திருட்டுத் தனமாக உனது நிர்வாணத்தைப் படம்பிடித்தால் அதில் உன் தவறு ஏதும் இல்லை என்றும் அதில் அவமானப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் யாராவது புத்திமதி கூறுகிறார்களா? ஏன், பாலியில் வன்முறைக்குள்ளான பெண்களை, வீடியோ காட்சிகளில் சிக்கிய பெண்களை உயிரோடு விட்டுவைத்த தமிழ் சினிமா ஏதாவது ஒன்று இருக்கின்றதா?

‘ஒரு பெண் ஆணை நம்பித்தானே உடலை ஒப்படைக்கிறாள்’ என்று திரும்பத் திரும்ப உடல் புனித பிம்பம் கட்டமைத்துக்கொண்டு இருக்கிறோம். இங்கும் பயன்படு பொருள், பயன்படுத்துநர் என்று குறுக்கி ஆணின் இரையாகவே பெண்ணுடல் கற்பிதம் செய்யப்படுகின்றது. ஏன் அந்த உடலுக்குத் தனிப்பட்ட பாலியல் ஆசைகள் இச்சைகள் தூண்டல்கள் இருக்காதா? உடலைக் கொடுத்தலும் இல்லை, பெறுதலும் இல்லை அது பரஸ்பர இச்சைத் தணிப்பு என்பதை ஏற்றுக்கொள்வதில் உள்ள தடைகள்தான் என்ன?

நாளெல்லாம் ஆண்மையவாதம் பேசிக்கொண்டு பண்பாடு கௌரவம், கலாச்சாரம் எல்லாவற்றையும் பெண்ணின்கால்களுக்கிடையில் வைத்துப் பெண்ணுக்கென்று தனி ஒழுக்க இலக்கணம் எழுதிக்கொண்டு பெண் சுதந்திரம் பேசுபவர்களைப் பழித்துக்கொண்டு இருபத்திநான்குமணிநேரமும் அலையும் பொறுக்கிகள் எல்லாம் பாலியல் வன்முறைகள் நிகழும்போது ‘நடுரோட்டில் வைத்து சுடவேண்டும்’ ‘ஆண் குறியை அறுக்கவேண்டும்’ என்று ஊளையிட்டுக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். குறியை அறுக்கவேண்டும் என்றால் மகளிர் தினத்துக்குக் கூட பெண்ணைதாயாக, மனைவியாக, தோழியாக என்று பெண் தனித்துவத்தை ஒப்புக்கொள்ளாமல்ஆணுடன்இணைத்துப்பார்க்கும் குறிகளைத்தான் முதலில் அறுக்க வேண்டும்.

பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது அறிவுரை கொடுக்க வேண்டி இருந்தால் தயவுசெய்து முதலில் உடல் புனிதம் அல்ல என்பதையே கற்றுக்கொடுக்கவேண்டும். நிர்வாணம் அவமானம் அல்ல என்பதையேசொல்லித்தரவேண்டும்.

தோழர் ரா. மயூரன்