பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 51 )

தம்பலகாத்தில் எங்கெங்கு நில ஆக்கிரமிப்பு நடக்கும் என்று கருதிய இடங்களில் தமிழர்கள் பலருக்கு காணிகள் வழங்கி குடியேற வழிவகுத்தார்.மக்கள் தொகை குறைவும் விருப்பமின்மையும் அதிக முன்னேற்றம் தரவில்லை .ஆனால் இவைகளே பின்னாட்களில் ஓரளவு இனப்பிரச்சினைகளில் இருந்து தம்பலகாமம் பாதுகாக்கப்பட்டது.இதை பலர் நன்றியுணர்வோடு சொல்லியுள்ளனர்.

கிண்ணியா டி.ஆர். ஓ வெற்றிடத்துக்கு புதிதாக நிர்வாகசேவைக்கு தேர்வான லங்காநேசன் பொறுப்பேற்றார்.இந்த இடத்திலிருந்து பற்குணம் விடுபட்டதை மஜீத் வெற்றியாக கருதினார் .லங்காநேசனும் அவருடன் அனுசரித்து செயலாற்றினார்.பற்குணத்தை இடம் மாற்ற எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வி கண்டன.

பற்குணம் திருகோணமலை மாவட்டத்தில் சேவைக்கு வந்து நான்கு வருடங்கள் நிறைவடைவதால் கண்டிப்பாக இடம் மாற வேண்டிய நிலை உருவானது.இதைத் தெரிந்த மஜீத் இந்த வருடத்துக்குள் பற்குணத்தை இடம் மாற்றுவதாக சவால் விட்டார்.இது நிர்வாக சேவை அதிகாரிகளுக்குரிய நியதி என்பதை மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

இவர் இடம் மாறுவதை அரச அதிபர் விரும்பவில்லை.பற்குணத்துக்கு உள்ளூராட்சி அமைச்சில் இருந்து விலக விருப்பம் இல்லை.எனவே இடம் மாற்றம் தவிர்க்க முடியாத்தாகவே இருந்தது.

அன்றைய நிலையில் திருகோணமலை உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி பதவி வெற்றிடம் வந்தது.அதைப் பொறுப்பேற்கும்படி அரச அதிபர் வற்புறுத்தினார்.இதன் மூலம் மஜீத் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கலாம் என்றார்.

இறுதியில் பற்குணம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றார்.மஜீத் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.தோல்வியை மூடி மறைக்க தான் பற்குணத்தை பதவி இறக்கியதாக தன் ஆதரவாளர்களிடம் கூறினார்.

இதை மஜீத் அவர்களின் தம்பி இராசதுரையிடம் கூற அவரும் நடராசாவும் பற்குணத்தின் பதவி குறைக்கப்பட்டதென கூறி நமது ஊர்களில் சந்தோசம் கொண்டாடினார்கள்.

நிர்வாக சேவை பதவிகளில் மிக இலகுவாக பணம் சம்பாதிக்கக் கூடிய பதவி இந்த உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி பதவி.அதுவும் திருகோணமலை என்றால் சொல்லவே தேவை இல்லை.

பற்குணம் தம்பலகாமத்தை விட்டு விலகிய பின் அவரால் நடாத்தப்பட்ட கூட்டுறவு கோழிப்பண்ணை நட்டமடைந்து சில காலங்களில் மூடப்பட்டது.

குறிப்பு:-மஜீத் அவர்களின் செயலாளராக பணியாற்றியவர் நெல்லிநாதன்.இவர் யாழ்ப்பாண எம்.பி. ஆக யோகேஸ்வரன் தெரிவான பின் அவரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். எப்படி நமது அரசியல்.

(Vijay Baskaran)