புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 1)

புலிகளின் வதைமுகாம்.
( பெண்களுக்கான பிரத்தியே முகாம்கள்)

அறிமுகம்:
புலிகளிடமுள்ள கைதிகள் பற்றிய விவரங்களின் தொகுப்பு 5-10 வரையான எமது அறிக்கைகளில் வெளிவந்தது. கொடூரமாகவும் தரக்குறைவாகவும் கைதிகள் நடத்தப்படுவதன் கருத்தியல் பின்னணி பற்றியும் இவ்வறிக்கைகளில் அலசப்பட்டது. புலிகள் மக்கள்பாலும் தமது இயக்க உறுப்பினர்கள் தொடர்பாகவும் கொண்டுள்ள மனோபாவம் புலிகளது சமூகப்பார்வை பற்றிய வினாக்களை எழுப்புகிறது.

விரிந்து விசாலமுற்ற பார்வையை மக்களுக்கும் இயக்க உறுப்பினர்களுக்கும் கொடுக்கும் வகையிலான விடுதலை ஆட்சியமைப்பை உருவாக்குவதன் மூலம் வாழ்வின் சாராம்சத்தை உயர்த்துவதற்கு பதில் அதற்கு எதிரான கைங்கரியத்தையே புலிகள் தமது ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதிகாரத்தில் இருப்பவர்கள் பாவிப்பதற்கான பண்டங்களாகவே அனைவரும் மதிக்கப்படுகின்றனர். தலைவர்கள் அங்கத்தவர்களுக்கு கொடுக்கும் மதிப்பின் அதே பெறுமானத்தினைத் தான் அங்கத்தவன் ஒருவன் தான் சித்திரவதை செய்யும் கைதிகளிடம் காட்டுகின்றான். மனிதன் ஒருவனில் மதிக்கத்தக்க குணாம்சங்கள் அர்ப்பணிப்பு- அதாவது மற்றைய இயக்கங்களில் சேர்ந்தவர்களில் பலர் தங்களை மக்களின் நலனுக்காகவும் இலட்சியத்துக்காகவும் தியாகம் செய்ய தயாராயிருந்தமை- அனைத்தும் அர்த்தமற்றுப் போய் விட்டது. சிறுவர்களைச் சித்திரவதையாளர்களாகப் பாவிக்கும் புலிகள் அமைப்பானது சிறைச்சாலைகளும் வதைமுகாம்களும் கொண்ட வலைப்பின்னாலாக வியாபகமடைந்துள்ளது. தனது சொந்த அதிகாரபீடமே திணறும் வகையில் அது தனி நபர்கள் பற்றிய தகவல்களை குவித்து வைத்திருக்கின்றது. எமது சமூகத்தில் மனிதம் தாழ்ந்து போய் விட்டதையே இது பிரதிபலிக்கின்றது. எனினும் புலிகளின் இந்த இலட்சியத்துக்காக பரிந்து பேசுபவர்கள் உலகில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றனர். பெண்கள் பற்றிய புலிகளின் கண்ணோட்டமும் கூட அதன் பொதுவான சமூகப்பார்வை மூலமே நிர்ணயிக்கப்படுகின்றது. ஆயுதம் தாங்கிய பெண்கள் இயக்கத்தில் இருப்பதை விதந்துரைக்கும் இப்பரிவாளர்கள் புலிகள் விடுதலைக்காக போராடுகிறார்கள் என்ற பிரமையையே ஏற்படுத்துகின்றனர். சமூகப்பிரக்ஞை கொண்ட செல்வி தியாகராஜா, ராஜனி திரானகம ஆகிய இரு பெண்களும் புலிகளின் வன்முறைக்குப் பலியானார்கள். புலிகளின் சிறையிலிருக்கும் அரசியல் கைதியான பெண்கவி செல்வி தியாகராஜா, இரண்டு சர்வதேச இலக்கியப் பரிசுகளை சிறை சென்ற பின் பெற்றிருக்கிறார்.
இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிகழ்வுகள் மூன்று வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தவை என்பதை குறிப்பிட விரும்புகின்றோம். வடபகுதியிலிருந்து தகவல்கள் மந்த கதியில் வருவது தெரிந்ததே. இப்பற்றாக்குறையே இவ்விடயம் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இப்பதிவுகள் வெறும் சரித்திரத்திற்காகவல்ல.
புலிகளின் தொடர்ந்த இருப்பும் அதன் மாற்றப்படாத அரசியல் நடவடிக்கைகளும் தொடர்ந்து கவலைக்குரிய விடயங்களாகவே இருக்கின்றன. இன்றிருக்கும் பெண் கைதிகளின் கதி அவர்கள் எந்த எண்ணிக்கையில் இருப்பினும் கவனிக்கப்பட வேண்டிய விடயமே.
இங்கு ஒரு கேள்வி எழுப்பப்பட வேண்டியுள்ளது. தமிழ் சமூகம் மத்தயில் தார்மீக ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படும் புலிகளின் ஆட்சியானது, அதிருப்தியாளர்களை மட்டுமல்ல அவர்களது தாய்மார்களையும், சகோதரிகளையும், மனைவியர்களையும் பேத்திமார்களையும் கூட இருட்டறைக்குள் பூட்டிவைத்து சித்திரவதை செய்யும் அமைப்பாக உருவெடுத்திருக்கின்றது. இதன் தாற்பரியம் தான் என்ன?

சிறைகளின் அமைவிடங்கள்
*******
தற்போது அவுஸ்திரேலியாவிலிருக்கும் கூட்டணி அரசியல்வாதியும் சட்டத்தரணியுமான அம்பிகைபாலனின் மட்டுவில் வீடு, புலிகளின் பெண்கள் வதை முகாமாக மாற்றப்பட்டு இருந்தது. இது பல அறைகள் கொண்ட விசாலமான வீடு. சிறு அறையொன்றினுள் ஏறத்தாழ 25 பேர் வரை வைக்கப்பட்டு இருந்தனர். நில சுரங்க அறைகளும் உள்ளே கட்டப்பட்டன. 1990 மார்ச்சில் 500 கைதிகள் இருந்தனரென அதன் கைதிகள் அபிப்பிராயப்பட்டனர். குறைந்தது 200 கைதிகள் வரையிலாவது இருந்திருக்கலாமென நாம் நம்புகின்றோம். இம்முகாமுக்கு மூன்று நான்கு மாதங்களின் பின் மீண்டும் கொண்டு செல்லப்பட்ட கைதிகளின் தகவல்களின் படி இது கைதிகளை நீண்ட காலம் சிறை வைக்கும் முகாமாக தெரியவில்லை. ஏனெனில் முன்னிருந்த கைதிகள் மாற்றப்பட்டு இருந்ததை அவர்கள் அவதானித்தனர்.

(தொடரும்….)