மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?

கையடக்க பூசணி. நம் கட்டைப் பைக்கு அளவெடுத்த சைஸில் ‘குட்டை’ புடலை என இப்போது காய்கறிகளும் அல்ட்ரா மாடர்ன் ஆகிவிட்டன. இதெல்லாம்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என யாரோ சொல்ல, பகீரென்றது நமக்கு. அய்யய்யோ… மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் ஆபத்துனு சொல்லித்தானே எதிர்க்குறாங்க. அப்போ நாம ஆபத்தையா சாப்பிடுறோம்? தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான செல்வத்திடம் கேட்டோம்…‘‘ஓர் உயிரின் கேரக்டரை வடிவமைப்பது அதன் மரபணுதான். மனிதர்களிலேயே கறுப்பு, சிவப்பு, உயரம், குள்ளம் என வேறுபாடு இருப்பதற்கு இந்த மரபணுதான் முக்கியக் காரணம். காய்கறிகள், பழங்கள் என்ன சைஸில் இருக்க வேண்டும், விதைகள் எவ்வளவு இருக்க வேண்டும், என்ன சீதோஷ்ண நிலையில் வளர வேண்டும் என்பதையெல்லாம் அவற்றின் மரபணுதான் தீர்மானிக்கிறது. இந்த மரபணுவை மாற்றி வைத்து காய்கறிகளை நம் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக் கொள்வது தான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்!

இயற்கை மாற்றம்…

ஒரு தாவரத்தின் மரபணுவை மனித முயற்சியால் நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். அதாவது, மிகச் சிறியதாய் ஒரு தக்காளி வகை… ஆனாலும் சுவை அபாரமாய் இருக்கிறதென்று வையுங்கள். சுவையே இல்லாத இன்னொரு தக்காளி வகை… ஆனால், புஷ்டியாக வளர்கிறது. இந்த இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. ஆனால், சின்ன மரபணு மாற்றத்தால் வெவ்வேறு குணம் கொண்டிருக்கின்றன. அவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் சுவையான பெரிய தக்காளிகளை உருவாக்கலாம். இது பெரிய ஆபத்துகள் ஏதும் இல்லாமல் செய்யப்படும் இயற்கையான மரபணு மாற்றம்.

செயற்கை மாற்றம்…

செயற்கை மரபணு மாற்றம்தான் ஆபத்தான ஆபரேஷன். இதன்படி, கொஞ்சமும் சம்பந்தமில்லாத வெவ்வேறு பயிர்களில் இருந்து தேவையான மரபணுவை மட்டும் எடுத்து புதியதொரு பயிரை உருவாக்குவார்கள். உதாரணத்துக்கு, கோதுமைப் பயிரின் கதிர் மட்டும் மக்காச் சோளம் அளவுக்குப் பெரியதாய் இருந்தால் எவ்வளவு மகசூல் கிடைக்கும் எனக் கணக்குப் போட்டு மக்காச்சோளத்தின் வளரும் மரபணுவை கோதுமைக்குக் கொடுத்து வளர்ப்பதே செயற்கை மரபணு மாற்றம்.

இப்படி இரண்டு தாவரங்களைத்தான் இணைக்க வேண்டும் என்பதில்லை… தற்போது சிலந்தி, தேள், பாம்பு போன்றவற்றின் மரபணுவை பயிர்களுக்குக் கொடுத்து பூச்சி அரிக்காதபடி வளர்க்கக் கூட முயற்சிகள் நடக்கின்றன. ஏன், மனித தாய்ப்பாலின் மரபணுவைக் கொண்டு நெல் விளைச்சலைப் பெருக்கவும் முயற்சி நடக்கின்றது.

என்ன ஆபத்து?

இப்படி நம் சுயநலத்துக்காக நாம் உருவாக்கும் மரபணு மாற்ற உயிரினங்கள் எல்லாமே இந்த உலகத்தைப் பொறுத்தவரை புதிய உயிரினங்கள். அவை தன்னைச் சுற்றியுள்ள உயிர்களிடம் எப்படி நடந்துகொள்ளும்? தங்களை உண்ணும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அவை நல்லது செய்யுமா? கெட்டது செய்யுமா? – யாருக்கும் தெரியாது. இதுபற்றி யாரும் இதுவரை விரிவான ஆராய்ச்சி செய்யவில்லை.

தப்பாய் போனவை…

இந்தியாவில் முதல்முறையாக பருத்தியில்தான் மரபணு மாற்று விவசாயம் புகுத்தப்பட்டது. பூச்சி அரிக்காத பருத்தி கிடைக்கும் என்றார்கள். ஆனால், பருத்தி காய்களுக்கு பதில் இலைகள்தான் வளமாக வளர்ந்தன. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மரபணு மாற்று மக்காச்சோளத்தை உண்டவர்கள் அலர்ஜி வந்து இறந்திருக்கிறார்கள். அது எலிகளில் சோதிக்கப்பட்டபோது புற்றுநோய், கட்டி, இனப்பெருக்க குறைபாடு, ஈரல் நோய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில உணவுகளை உலக அளவில் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எவையெல்லாம் ம.மா. காய்கறிகள்?

இந்தியாவில் சுமார் 72 வகையான பயிர்களுக்கு மரபணு மாற்று ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று, கிடைக்கும் காய்கறிகளில் எத்தனை மரபணு மாற்றி பயிர் செய்யப்பட்ட காய்-கனிகள், எவை பாரம்பரிய காய்கறிகள் எனக் கண்ணால் பார்த்துச் சொல்லிவிட முடியாது. காரணம், உள்நாட்டு – வெளிநாட்டு விதை நிறுவனங்கள் கையில் விவசாயம் போய் பல நாளாகிறது. ஒவ்வொரு பிராண்ட் விதைக்கும் ஒவ்வொரு வகையான காய் கனிகள் விளைகின்றன.

ஒரு சின்ன பாகற்காயில் கூட பல்வேறு அளவு, அடர் – வெளிர் நிறம் என நூற்றுக்கணக்கான ரகங்கள் வைத்திருக்கிறார்கள். அத்தனை வகைகள் எங்கிருந்து வந்தன, யார் உருவாக்கினார்கள் என எதுவும் இங்கே ஆவணங்களில் இல்லை. ஒரு காலத்தில் பப்பாளிப் பழத்தில் உள்ளே குலுங்கக் குலுங்க விதை இருக்கும். இப்போதெல்லாம் விதையே இல்லாமல் வருகின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று விசாரித்து ஆராய வேண்டியது அரசின் கடமை. இயற்கையின் ஒழுங்கில் மனிதன் தேவையில்லாமல் கை வைப்பதெல்லாம் தேன்கூட்டில் கல்லெறிவதற்கு சமானம்’’ என ஆவேசமாக முடித்தார் செல்வம்!

– டி.ரஞ்சித்