முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக் கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன். 8 வெற்றிடங்கட்கு 20 பேர் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் அளித்திருந்தனர்.


காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நேர்முகப் பரீட்சைக்கு 7.30 மணிக்கே பலர் வந்து விட்டனர். வன்னியில் வசித்தவர்களுக்கா அல்லது இடம்பெயர்தவர்களுக்கா முன்னுரிமை வழங்குவது என்று முடிவெடுப்பதுதான் முதல் சிக்கல். வன்னிக்கான கல்விப் பொறுப்பாளர் ஒரு தடவை கதையோடு கதையாகக் கூறியது என் நினைவுக்கு வந்தது. ‘முந்தி ஒரு துண்டை எழுதி பஸ் ட்ரைவரிட்டை கொடுத்து விட்டால் காணும் எல்லா அதிபர்மாரும் சொன்ன இடத்தில சொன்ன நேரத்திற்கு நிப்பினம். இந்த யாழ்ப்பாணத்தாங்கள் வந்து எல்லாத்தையும் பழுதாக்கிப்போட்டாங்கள்’
‘ஒரு ரீ குடியுங்கோ சேர்’ என்ற பியூன் பொடியன் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு ஒருமாதிரி பம்மிக்கொண்டு நின்றான்.
‘என்ன விஷயம் சொல்லு’ என்றேன்.
‘இல்லை சேர்….. அந்த பச்சை சேர்ட் போட்ட பெடியனை எனக்குத் தெரியும். வீட்டில சரியான கஷ்டம்;’ என்றான் பிடரியைச் சொறிந்தவாறு.
‘ஆருக்குத்தான் கஷ்டமில்லைஇ ஆளிண்ட பேர் என்ன’ என்று மொட்டையாகக் கேட்டு முடிக்க முன்னரே தனது மேல்பொக்கட்டுக்குளிருந்து ஒரு துண்டை எடுத்து மேசை மேல் வைத்தான்.
வழமையாக தாமதமாக வேலைக்கு வரும் பணியாட்கள் சிலர் அன்று நேரகாலத்திற்கே கந்தோருக்கு வந்துவிட்டார்கள். அன்று அவர்கள் முன்கூட்டியே கந்தோருக்கு வந்த நோக்கத்தை புரிந்துகொள்ள எனக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. தாங்கள் யார்யாரை சிபாரிசு செய்கிறார்கள் என்பதை மிகவும் பக்குவமாவும் நைஸாகவும் சொல்லிவிட்டு தங்கள் மேசைகட்கு சென்று ஏதோ அவசரமாக வேலை செய்வதுபோல் பாசங்கு பண்ணத்தொடங்கினார்கள்.
‘சேர் அதில சிவப்பு சேட்டோட நிக்கிற ஒல்லியனை மாத்திரம் எடுத்துப்போடாதையுங்கோ, மல்லாவிக் காம்பிலை சித்திரவதை செய்ததில முன்னுக்கு நிண்டவன், கட்டாயம் புலனாய்வுத் துறைதான் அனுப்பியிருக்க வேணும்’ என்றார் பைல்லை புரட்டியவாறு எனது பக்கத்து சீட்காரர்.
நானும் ஒன்றும் கோளாதவன் போல் கடிதங்களை பிரித்துக்கொண்டிருந்தேன். அவரோ விட்டபாடாய்யில்லை. “அந்தக் கட்டைத்தடியன் முந்தி பளைப் பொறுப்பாளராய் இருந்தவன். உவன் சாகவேண்டுமென்று அங்க ஒருத்தன் கிடாய் ஒண்டை நேர்ந்துவிட்டிருக்கிறான்”.
புதிதாக ஆட்களை எடுக்கிறதை விட வுசுழு விட்ட எல்லாத்தையும் கையளித்து விடுதல் மேல் என்ற எண்ணம் என்னையறியாமலே மனதில் வந்து போனது. என்னுடன் தேர்வுக் குழுவிலிருக்கும் மற்றைய இருவரும் கையில் ஏதோவொரு லிஸ்ட்டுடன் வந்தார்கள். நேர்முகப் பரிட்சையில் முதலிரண்டு இடங்களையும் பளைப் பொறுப்பாளரும் மல்லாவிப் பொடியனும் தட்டிக்கொண்டார்கள்.

யாழ்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கான தற்காலிக வீடுகளை அமைக்கும் வேலை முட்கொம்பனில் மும்மாரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஊர் மக்களும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவன பணியாட்களும் இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். சில வீடுகளின் கூரைகள் கிடுகுகளினால் வேய்யப்பட்டுக்கொண்டிருந்தன வேறு சிலவற்றில் மண்சுவர்கள் எழும்பிக்கொண்டிருந்தன. சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வேலைத்திட்டங்களை உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கப்பட்ட தொகையில் வெறும் 30 சதவீதம் மாத்திரம் தான் செலவு செய்யப்பட்டிருக்குமென்பது ஊரறிந்த இரகசியம். ஒரு சில அதுவும் அரைகுறையாக முடிக்கப்பட்ட வீடுகளில் மக்கள் குடியமரத் தொடங்கிவிட்டார்கள். வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடங்களை நானும் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ஜயா இதை ஒருக்கா பாருங்கோ” என்று குருநாகலிலிருந்து வந்த கிடுகுகளில் சிலவற்றைக்காட்டினார் கொஞ்சமாகத் ‘தண்ணி’ பாவித்த ஒருவர். பாதிக் கிடுகுகள் பெரிய கண்ணறைகளோடு இருந்தன. ‘சிங்களவங்கள் எல்லாத்திலையும் தானே எங்களைப் பேய்க் காட்டுறாங்கள்’ என்று கூறியவர் காறித்துப்பிவிட்டு ‘ உவங்கள் எண்டாப்போல என்ன திறமே’ என கொஞ்சம் தொலையில் நின்ற வுசுழு காறறைக் காட்டி சற்றே தணிந்த குரலில் சொன்னார். “சீமான்கள் வீடுகட்ட தந்த மரங்களைப்பாருங்கோ ஒண்டுக்கும் உதவாது. ஒரு மாசம் நிண்டுபிடிக்குமோ தெரியாது. எங்களை வைச்சு எத்தனை பேர்தான் காசடிக்கிறாங்கள்” என்றார் யதார்த்தமாக.
காட்டு வெக்கையின் கடுமை எல்லோரையும் வாட்டி வதைத்தது. நானும் அவர்களுடன் பாலை மர நிழலில் ஒதுங்கினேன்.
“என்ன வந்திறங்கிய கிடுகுகள் மரங்கள் ஒண்டும் அவ்வளவாய் வாய்க்கவில்லை போல கிடக்குது” என்றபடி அவர்களது சம்பாஷனையில் இணைந்து கொண்டேன்.
“உங்களுக்கேன் நல்ல கிடுகும் நல்ல மரங்களும், பொடியள் வலு கெதியாய் யாழ்ப்பாணத்தை திருப்பி பிடிப்பாங்கள் தானே” என்றேன் நமட்டுச் சிரிப்புடன்.
“மண்ணாங்கட்டி…. மனுசனுக்கு விசர்வரப் பண்ணாதையுங்கோ. வன்னியும் எப்ப பறிபோகுதோ தெரியாது” என்ற அவரது குரலில் வெறுப்பு, கோபம,; வெறுமை எல்லாம் தென்பட்டது.
அப்பதான் சைக்கிளில் வந்திறங்கிய வயதானவொருவர் “நாளைக்கு எல்லாரையும் துயிலுமில்லத்தை துப்பரவு செய்ய வரட்டாம,; இல்லாட்டி நிவாரணம் இல்லையாம்” என்றார் கொதியுடன்.
“என்னத்தைச் சொன்னாலும் உவங்கள் ஆட்கள் கெட்டிக்காரர்கள், அரசாங்கம் தாறதைக் வைத்துக்கொண்டு தங்கட வேலைகளை எங்களைக்கொண்டு சிம்பிளாகச் செய்து முடிக்கிறாங்கள்”
“ரெட் குறோஸ் உவங்களுக்கு கனக்க காசு குடுத்திருக்குப்போல கிடக்கு, அவசர அவசரமாய் கக்கூஸ் கட்டட்டாம் இல்லாட்டி காசு திரும்பிப்போடுமாம்இ கக்கூஸ் கட்டி என்ன பிரியோசனம் தண்ணிக்கு எங்க போறது”
“வந்தாரை வாழவைக்கும் வளம் கொழிக்கும் வன்னிக்கு வாங்கோ உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது” என்று லவுட்ஸ் பீக்கரில எனவுன்ஸ் பண்ணியெல்லே எங்களை பேய்க்காட்டி இஞ்சாலை கூட்டி வந்தவங்கள், நாங்கள் எவ்வளவு பேயர் என்று அவங்களுக்கு நல்லாத் தெரியும்
“இந்த இடப்பெயர்வுடன் எனக்கு கடவுள் நம்பிக்கையும் துப்பரவாய் போட்டுது, கோதாரி….கடவுளும் அவங்கட பக்கம் போலத்தான் கிடக்குது.”
“சனங்களப்போல அவனுக்கும் மறதி கூடப்போல, எட உவங்கள் கோயில் நகைகளை தன்னும்; விட்டாங்களே” இப்படியாக இவர்களது உரையாடல் சுவாரிசயமாக தொடர்கையில்….
“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன் நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை” என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஓங்கி ஒலிக்க வாகனம் ஒன்று அந்த வழியால் வந்துகொண்டிருந்தது.
“உந்தா வருகுது பிள்ளைபிடிக்கிற கோஷ்டி, உன்ட பொடியனை எங்கயாலும் ஒழிக்கச் சொல்லு”
“உனக்கு விஷயம் தெரியாது போலகிடக்கு உவங்கள் எங்களையெல்லே ரெயினிங் எடுக்கெட்டாம். ஆண் பெண் கிழடுகட்டை எண்ட எந்த வேறுபாடும் கிடையாதாம். எல்லாரும் கட்டாயம் ரெயினிங் எடுக்க வேணுமாம். ஒண்டில் மாவீரர் அல்லது நாட்டுப்பற்றாளராக மாறவேண்டுமாம் இல்லாட்டி வீண் வில்லங்கம்தான”;
“இதுதாண்டா அப்பா சமஉரிமைச் சமுதாயம.; வாழ்க தமிழீழம்இ கெதியாய் வெளிக்கிடு கோப்பரேசனுக்கு.”

(முள்ளுள்ள புதர்கள் வளரும்….)