யார் இந்த யாழ்ப்பாணத்தான் ?

(யார் இந்த யாழ்ப்பாணத்தான் ?என்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒரு ஆய்வு கட்டுரை எழுதியிருப்பார் அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது.தோழர் தேவதாசனின் முகனூலில் வந்துள்ள இந்த குறிப்பு புகலிடத்து தமிழர்களின் சாதி வன்மம் கொண்ட வாழ்வியல் குறித்து பலத்த கேள்விகளை எழுப்புகின்றது எனவே பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் .யார் இந்த யாழ்ப்பாணத்தான் ? என்னும் தலைப்பில் இங்கே பிரசுரமாகின்றது.)

சாதிய வேர்படரும் புகலிடத்து மனநிலை

தமது பொருளாதார நிலைகளை வளப்படுத்தும் நோக்கில் கடும் உழைப்பில் கவனம் செலுத்திவருவதுபோல்; தமது பண்பாடு கலாசாரத்தில் எவ்வித மாற்றமும் நிகழாது பேணுவதிலும் புகலிடம்வாழ் எமது சமூகம் சாதனை படைத்துவருகிறது. அந்தவகையில் சாதியும்; எமது பண்பாட்டோடும், கலாசரத்தோடும் இணைந்தே நகர்ந்து வருகிறது.
குறிப்பாக அண்மைக்காலங்களில் சாதிய திமிர், சாதிய ஆணவம், சாதிய பெருமை பேசும் சம்பவங்களும் முகநூல் வழியாக பரிமாறப்பட்டு வருகிறது. இதனூடாக விஞ்ஞான தொழில் நுட்பங்களையும் ‘சாதகமாக’ பயன்படுத்தும் ஒரு சமூகமாக புதுப் பரிமாணம் பெற்று வருகின்றது.
புலம்பெயர் வெகுஜன ஊடகங்களும் இவ்வாறு சாதிய பாகுபாட்டைப் பேணும் வகையில் தமது பங்களிப்பையும் நல்கி வருகின்றது. அண்மையில் தீவிர தமிழ்தேசிய வாதியும், தமிழ் ஈழப்பற்றாளருமான துரைரெட்ணம் அவர்கள் முகநூல் உரையாடல் ஒன்றில் எழுத்தாளர் ரவிக்குமார் அவர்களை வெளிப்படையாகவே சாதிப் பெயர் கூறி இழிவு படுத்தினார். இச்செயலை கண்டித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் I.B.C தொலைக்காட்சி நிறுவனம் துரைரெட்ணம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. இதனூடாக I.B.C தொலைக்காட்சி நிறுவனமும் சாதிய ஒடுக்குமுறை மனநிலை இருப்பிற்கான தனது பங்களிப்பை பிரக்ஞைபூர்வமாகவே மேற்கொண்டிருக்கின்றது.
புகலிடத்தில் தொடரும் சாதியத்தின் இருப்பும் அதன் நவீன போக்குகள் குறித்தும் நான் தொடர்ந்து பல்வேறு தளங்களில் பதிவுசெய்துகொண்டும், அதை எதிர்கொண்டும் வருகின்றேன். தற்போது இந்த முகநூல் வழியாக காட்சி தரும் சாதியம் மிக கொடூரமானதாக உள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப பெண்போராளிகளில் ஒருவரான புஸ்பராணி அவர்கள் முகநூல் வழியாக எதிர்கொண்ட சாதிய வன்கொடுமை மிக வக்கிரமானது. அவர் முன்வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு சாதியை பயன்படுத்தும் வழியை மேற்கொள்ளும் ஒரு மனநிலையை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?
சாதிய இருப்பு குறித்தும், அதற்கான ஒரு அரசியல் சொல்லாடலாக தலித் என்ற சொல்லையும் முன்வைத்து நாம் புகலிடத்தில் செயல்பட்டு வருகின்றோம். இதுகுறித்த அக்கறையுடனான உரையாடல்களையோ விமர்சனங்களையே மேற்கொள்ளாது ரௌடித்தனமான, காடைத்தனமான மிரட்டல்களின் பின்னால் உள்ள நோக்கம் என்ன? ‘தலித் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது.’எனும் அறிவித்தல் ஒன்று அண்மையில் முகநூலில் உலாவியது. ஆரோக்கியமான எதிர்வினை ஊக்கம் அற்ற இவ்வாறான அறிவித்தலின் பின்னாலுள்ள மிரட்டலின் நோக்கம் சாதி குறித்து பேசக்கூடாது என்பதாகவே கருதமுடிகின்றது. இந்த அனுபவத்தை நாம் யுத்தகாலத்தில், விடுதலைப்புலிகளின் போராட்ட காலத்தில் பெற்றவர்கள்.
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தில் கொள்கையளவில் சாதிய பாகுபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. சாதிய ஒழிப்பிற்கான சமூகவியல் காரணிகளின் அடிப்படைகளை கண்டறிவதோ அதைக் கண்டறிந்து அகற்றுவதோ விடுதலைப்புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. ஆயுதப்போராட்டத்திற்கு சாதியம் ஒரு தடையாக இருந்ததே பிரதான நோக்கம். சாதியம் குறித்த சமூகவியல் ஆய்வென்பது விடுதலைப்புலிகளுக்கு பல்வேறு தரப்பினரையும் இணைக்கும் ஆயுதப்போராட்டத்திற்கு பாதகமாக அமையும் என்பதுவும் காரணமாக இருக்கலாம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளபோது சாதியம் முற்றாக ஒழிந்துவிட்டது எனும் கதையாடலும் நிகழ்ந்தது. மாறாக சாதிய வக்கிரங்களும், சாதிய ஒடுக்குமுறை மேலாதிக்கமும் மிகவும் பாதுகாப்பாக குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்ட இறைச்சிபோல் பாதுகாத்து வைக்கப்பட்டது. சாதியத்தில் மெல்ல மெல்ல நிகழும் நடைமுறை மாற்றங்கள் என்பது சாதியம் முற்றாக அழிந்து போவதற்கான வாய்ப்பாக கருதமுடியாது. அனாகரிகமாக கருதப்படும் சில நடைமுறைகள் தவிர்க்கப்படவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுகின்றது. இவ்வாறு வெளிப்படுத்தப்படாத நடைமுறைகள் அனைத்தும் சேர்ந்து சேர்ந்து மனங்களில் சேர்ந்து உறைந்துகொள்ளும். சாதிய ஒழிப்பு என்பது நடைமுறைகளில் இருந்து அகற்றவதல்ல! முற்றாக மனங்களில் இருந்து அகற்றுவதாகும்! எனவே ‘தலித் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது.’எனும் அறிவித்தலும் ஒரு பாசிச வன்முறை வெளிப்பாடு என கண்டித்து நாம் கடந்து செல்லவேண்டியதுதான்.

அதேபோல் இலங்கை அரசியலில் சாதிய பாகுபாடு குறித்து நாம் காணும் வெளிப்படையான ஒரு அம்சம்: வடபகுதியில் தற்போது பெரும்பான்மையான மக்கள் தலித் சமூகங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். பாராளுமன்றத்தின் தமிழ் பிரதிநிதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று எவரும் இல்லை. இக்குறைபாட்டை கவனத்தில் கொண்டு சென்றபோதும் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. தலித் மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் அவர்கள். எனவே பொதுவாக தமிழ்பேசும் மக்கள் அனைவரின் பொது நலனுக்கான பிரதிநிதிகள்தான் அவர்கள் என்று யாராவது கருதினால். எனக்கு சிரிப்பு வாயால் வராது. வேறொரு வாசலால்தான் வரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எவருமே சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கோ, சமூகத்திற்கான அத்தியாவசிய தேவைகளை தீர்ப்பதற்கான கடமைகளை செய்பவர்களாகவோ இல்லை. அவர்கள் சிங்களவர்களையும், சிங்கள் அரசையும் குற்றம் சாட்டுவதையும், சிங்கள அரசுடன் இணக்கமாக எவராவது அரசியல் செய்தால் அவர்களை துரோகிகள் என அடையாளப்படுத்துவதுமே தமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவ கடமையாக கருதுகின்றார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் சமூகமட்டத்தில் பல்வேறு நிர்வாக-அதிகார புறக்கணிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவேதான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினூடாக நிர்வாக-அதிகார மட்டத்திலான மறுக்கப்பட்டு வரும் உரிமைகளை பெறுவதற்கு அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது எனவும் கருதுகின்றேன்.
-தேவதாசன்-