யாழ்பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் #கைது

(By Arun Sitharth Maithreyan, சமூக நீதிக்கான இளைஞர் இயக்கம், யாழ்ப்பாணம்)

யாழ் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் சிவபாதசுந்தரம் பிரணவன் (46 வயது) சற்று முன் 4.30 pm மணியளவில் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். எமது அமைப்பான யாழ்/சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ரஜிவரன் சோபிதன் (19 வயது D/B 10-06-1999) என்னும் இளைஞனை கடத்தியமை, சித்திரவதை புரிந்தமை, மற்றும் சோபிதனின் உடைமையில் இருந்த ரூபாய் 28,000 பெறுமதியான Huwavi Y-7 வர்க்க போனை பலாத்காரமாகத் திருடிச் சென்ற குற்றங்களுக்காகவே இவர் கைது செய்யப்பட்டார். இவர் நாளை யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என யாழ் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிகத் தகவல்கள் தேவையான ஊடக நண்பர்கள் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் பதவி வகிக்கும் பிரணவன் சிவபாதசுந்தரம் அரசியல் அதிகாரம், பணபலம், மற்றும் படையினர் (CID,POLICE) பலம் மிக்க ,BA,MA, மற்றும் சட்டத்தரணி(தான் சட்டக்கல்லூரியில் இறுதியாண்டில் கல்வி கற்பதாக அவரே கூறினார்.) ஆன ஒருவர், மெத்தப் படித்த கல்விமானான ஒருவர் அவருடன் ஒப்பிடும் போது சாதாரண ஏழைச் சிறுவனான என்னை எதற்காக தூஷனங்களால் தூஷிக்க வேண்டும்? எதற்காக சாதிய ரீதியிலான வசவுகளை என்மேல் அள்ளித் தெளிக்க வேண்டும்? தனக்கு விஜயகலா மகேஸ்வரன், சுமந்திரன், நவீன் திசாநாயக்க போன்ற ‘ஆசியாவின் ஒப்பற்ற’ அரசியல்வாதிகளைத் தெரியும் எனக்கூறி என்னை அச்சுறுத்த வேண்டும்.?
சும்மா யாராவது யாரையாவது திட்டுவார்களா? இல்லையே! அவ்வாறாயின் நடந்தது என்ன?
அந்த வசவுகளுக்குப் பின்னால் ஒரு காதல் கதையொன்றுண்டு.
அது என்னுடைய காதல் கதையல்ல.1999 ஆம் ஆண்டு பிறந்த சட்டப்படி18 வயதைப் பூர்த்தி செய்த ஒரு வறிய இளைஞனின் கதையது. முல்லைத்தீவைச் சேர்ந்த அந்த இளைஞனின் தந்தை ஒரு விவசாயி. அந்த இளைஞனுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்துக்காக நியாயம் கேட்டு உயர் நீதிமன்றம் வரை செல்வதற்கு நான் தயார்.
இவர்களுக்கு களத்தில் நின்று, இவர்களால் கொடுக்கப்பட்ட கலாஷ்நிக்கோவ்-47 ஐ சுமந்து சென்று சாவதற்கு வன்னியைச் சேர்ந்த ஏழைத் தாயின் மகன் வேண்டும், ஆனால்ல்ல் தனது மகள் அவனைக் காதலித்தால் சாதியும்,பிரதேசவாதமும்,அந்தஸ்தும், பணமும் முன் வந்து நிற்கின்றன.
சரி தனது மகளையல்லவா கண்டிக்க வேண்டும்…..? இந்த இளைஞனைத் தண்டிக்க இவருக்கு யார் அதிகாரம் வழங்கியது. அந்த வன்னியைச் சேர்ந்த ஏழைத் தாயின் மகன் படித்தவர்கள் எனக்கூறிக்கொள்ளும் ‘மாக்களால்’ கடத்தப்பட்டான், தாக்கப்பட்டான் பற்றைக்குள் தூக்கி எறியப்பட்டான். கூலி வேலை செய்து சிறுகச் சிறுகச் சேமித்து அவன் தன் ‘சொந்த உழைப்பில்’ இந்த வாக்கியத்தை மறந்து விடாதீர்கள், சொந்த உழைப்பில் வாங்கிய HUAWEI Y-7 கைத்தொலைபேசியை தன் மகளும் இந்த இளைஞனும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருக்கும் காரணத்தால் பலாத்காரமாக திருடிச் சென்றார். அவனது தொலைபேசியையாவது கொடுத்துவிடுங்கள் என நான் கேட்ட போது ‘ அதை உடைத்து விட்டேன் வேண்டுமானால் உனக்கு இருமடங்கு காசு தருகிறேன் வாங்கிக்கொள் எனத் திமிராகப் பதில் தருகிறார்.

குறிப்பு- தாக்கப்பட்ட இளைஞன் காயங்கள் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 25/11/2018 நேற்று முன்தினமே ticket வெட்டி வீடு செல்ல அனுமதிக்கப்பட்டான். அந்த யுவதி 2000 ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி பிறந்தவர். சட்டப்படி 18 வயது பூர்த்தியானவர்.

நண்பர்களே யாழ் பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் என்னைச் சாதிய அடையாளங்களைக் குறிப்பிட்டு மிக ஆபாசமாக தொலைபேசியில் திட்டினார். இரண்டு பிரபலமான தமிழ் அரசியல்வாதிகளின் பெயர்களையும் ஒரு தென்னிலங்கை அரசியல்வாதியின் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும் CID காரர்களைத் தெரியும் என்றும் என்னைப் பயமுறுத்தினார். நான் மிகவும் பயந்து போய் என் மனைவியின் பாதுகாப்புடனும் கொஞ்சம் மிளகாய்த் தூளுடனுமே இப்போதெல்லாம் வெளியே சென்று வந்துகொண்டிருக்கிறேன். என் மனைவி புலியை முறத்தால் விரட்டிய பரம்பரையில் வந்தவள். ஆயினும் அவளுக்கு ஐந்து வயது இருக்கும் போது அவளுடைய தந்தையை ‘நிஜப்புலி’ விசாரணைக்கெனப் பக்குவமாக அழைத்துச் சென்ற போது அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை…. ஒரு வேளை அவளுக்கு அன்று முறம் எதுவும் கையில் சிக்காமல் இருந்திருக்கும்.அன்று அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்றுவரை திரும்பி வரவேயில்லை. இன்று என் மனைவிக்கு 35 வயது.

நண்பர்களே என் தாத்தாமார் இருவரும் கள்ளுச் சீவியதற்கு நான் என்ன் செய்வது.. நான் இழி சாதியாம். அவர் உயர் சாதியாம். அப்பிடியா நண்பர்களே! தாத்தாமார் கள்ளுச் சீவினாலும், அவர்கள் உழைத்துத்தானே சாப்பிட்டார்கள் என எண்ணி இறுமாந்திருந்தேன். ஆனால் இந்த MA பட்டதாரி என்னுடைய குலம் இழிவானதெனக் கூறி என்னை இகழ்கிறார். அவங்கள் கள்ளுச் சீவினத்துக்கு நான் என்ன செய்வது நண்பர்களே! அவர் என்னைப் பேசிய தொலைபேசி recording உள்ளது. தாத்தாமார் உயிரோடிருந்தாலாவது இந்த தொழில் செய்யவேண்டாம் ,இழி குலம் என என்னைத் திட்டுகிறார்கள் எனக் கூறி கள்ளுச் சீவும் வேலைக்குத் தேவையான பாளைக் கத்தியைச் சரி எடுத்து ஒழித்து வைத்திருப்பேன்.இப்ப நான் என்ன செய்யிறது நண்பர்களே! அந்த recording ஐ நாளைக்கு வெளியிடப் போகிறேன் …

“மத ஸ்தாபனங்களையும், உயர் கல்வி நிறுவனங்களையும் சேர்ந்தவர்களில் பலர் பொய்மையில் வாழ்வதை தமது இருப்பிற்கான நடைமுறைகளாக்கினர்.”
—- ராஜனி திரணகம. முறிந்த பனை தமிழ் பதிப்பிற்கான முன்னுரையிலிருந்து.