வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை தொடமுடியும்.

சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும். இலங்கை இந்தியாவின் வளர்ச்சியடைந்த தென் இந்திய மாநிலங்களுக்கு அருகாமையில் இருக்கிறது. இந்த வளர்ச்சியும் இலங்கையின் சமூக பொருளாதார வளர்ச்சியும் நெருங்கிய தொடர்பு பட்டவை என்பதே புவி பொருளாதார அரசியல் யதார்தமாகும். 1.5 மில்லியன் புலம் பெயர் மக்களுடனான சமூக பொருளாதார தொடர்புகள் அதிகமாகும். இங்கு உற்பத்தி சந்தை நடவடிக்கைகள் வேலைவாய்ப்புக்கள். கல்வியில் மறுமலர்ச்சி வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன.இலங்கையை சிங்கப்பூராக்குவது பற்றிய கதைகள் ஜே ஆர் காலத்தில் இருந்து ரணில் காலம் வரை கூறப்படுபவை.
எமது அண்டை அயல் யதார்த்தங்கள் பற்றி பிரக்ஞை இன்றி
இலங்கையின் வடக்கு துறைமுகங்கள் விமானநிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும் போது பிரமாண்டமான வளர்ச்சிக்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.
ஆனால் யாரும் ஏதும் உருப்படியாக சமூகத்திற்கு எதுவும் செய்து விடக் கூடாது என்று கருதும் பிரகிருதிகள் எமது சமூகத்தில் இன்றளவில் இருக்க தான் செய்கின்றன.
தமிழ் அரசியல் அதிகார மட்டத்திலிருந்து சாமானியர் வரை இந்த பிரக்ஞை அற்ற போக்கு விரவிக் கிடக்கிறது
எரியுண்ட பொது நூலகம் திறக்கப்பட்ட போது அதனை திறக்க கூடாது ஞாபகச் சின்னமாக இருக்க வேண்டும் இடி பாடாகவே இருக்கவேண்டும் என்று அங்கலாய்த்தவர்கள் இருக்கிறார்கள்.
தற்போது எமது பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு மாற்றுவது பற்றிய பிரக்ஞை கிடையாது.
அவ்வாறு இங்கு சேவை செய்ய வருவோர் மீதான வெறுப்பு.
அண்டை நாட்டின் உதவித்தூதரகம் ஒன்று வடபகுதியில் அமைந்திருப்பது சமூகபொருளாதார கல்வி வளர்ச்சியில் பெரும் பங்களிப்பு.
உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று குடியேறி பல்லின சமூகங்கள் மத்தியில் வளமுடன் வாழ்பவர்கள் எல்லாரும் அல்லர் சிலர் யுத்தத்தால் அழிந்த நம் பிரதேசங்கள் இடிபாடுகளாக ஞாபக சின்னங்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களுக்கு ஊர் தொல்பொருட்காட்சியகம் போல் இருக்க வேண்டும்.

தூய யாழ்மையவாத கற்பு இங்கு எம்முடன் சக மனிதர்களாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் திரும்ப குடியேறுவதைப் பற்றி எதுவும் பேசுகிறதா?
கள்ள மௌனம் 1990 இல் இருந்து தொடர்கிறது.
சாதரண மக்களாக இருந்தாலென்ன அண்டை நாட்டு இராஜ தந்திரிகளாக இருந்தாலென்ன இங்குள்ள மக்களுடன் உறவாடக் கூடாது.
ஏன் புலம் பெயர்ந்த புலமைலயாளர்கள் யாரும் இங்கு வந்து எமது பல்கலைக் கழகங்களில் கற்பிக்க கூடாது.
சக சமூகங்களின அரசியல் ஜனநாயக மனித உரிமைகளை நாம் பொருட்படுத்த மாட்டோம்.
ஆனால் எங்களுக்கு வளமான மேற்கத்திய வட அமெரிக்க நாடுகளின் பல்கலாச்சார சூழலில் எமக்கு வாழும் உரிமை வேண்டும். ஆனால் எங்கள் சூழலில் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டோம்?? தீண்டமாட்டோம்.
இங்கு ஒரு பகுதி மக்களை தீண்டாதவர்களாக சமூக நீதியை மறுத்துக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட மனித உரிமை பேசுவோம். அதை உலகம் அங்கீகரிக்க வேண்டும்.
இத்தகைய தர்ம நியாயங்களுடன் ஒரு சமூகம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
உலகில் எந்த ஒரு சமூகத்திடமும் இல்லாத போலிப் பெருமித உணர்ச்சியும் வன்மமும் யாழ்மையவாத கற்பிடம் இருக்கிறது. ஆசார –ஆசாடபூதிகளின் அத்து மீறல்கள் எல்லை மீறிப்போய்விட்டன.
இந்த மையவாத அதிகாரம் தகர்த்தெறியப்பபட வேண்டும்.

(Sugu Sritharan)