தமிழ் குறும் தேசியவாதமும், முஸ்லீம் குறும் தேசியவாதமும்

1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகான சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகான சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிபிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா , அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் , அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார் .

எப்படியாயினும் சுதந்திரத்தின் பின்னரான காணி நிலப் பிரச்சினை என்பது கல்லோயா சிங்களக் குடியேற்றத்துடன் கிழக்கில் தொடங்கி , இன்றுவரை தொடர்வதாக குறிப்பட்டு , வடக்கு கிழக்கில் உள்ள காணி நிலம் தமிழர் தாயகத்துக்குரியது. சிங்கள குடியேற்றங்கள் எமது ” நாட்டின்” மீது ஆக்கிரமிப்பு செய்கின்றன என்பது தமிழ் தேசியவாதிகளின் தொடர்ச்சியான தணியாத அரசியல் அஸ்திரம் . இதனயே தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் இனவாத அரசியல் மூலம் தமது அரசியல் இருப்பை உறுதி செய்ய கற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரசினரும் , அந்த இலகுவான அரசியல் கோசங்களையே தேர்தல் கால அஸ்திரங்களாக பாவித்து வருவதையும் , ஆளும் அரசுடன் கூட்டு சேர்ந்தவுடன் அந்த கோசங்களை மறந்து போவதையும் காண்கிற பின்னணியில் காணி நிலம் என்பது எப்போதும் தமிழ் முஸ்லிம் பிரதான கட்சிகளின் அரசியல் இயங்கு விசையாக இருந்து வரும் என்பதில் மாற்றங்கள் காணப்படவில்லை.

(Bazeer Seyed)