இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை!

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த அரசாங்கத்தினை போன்று இல்லாமல் மிகவும் நேர்மையான முறையில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்கள் இயல்பாகவே தமது இலங்கை பிரஜாவுரிமையை இழந்து விடுகின்றனர். எனவே, இவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் இலங்கைக்கான பிரஜாவுரிமையினை பெற முடியுமென அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் இலங்கையில், இடம்பெற்ற யுத்தம் காரணமாக , கல்வித் தகைமை மற்றும் தொழில்துறையில் தேர்ச்சிபெற்ற பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறியவர்களினது, அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பு நாட்டிற்கு அவசியமாகின்றது. எனவேதான், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இரட்டை பிரஜாவுரிமை வழங்கலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.