கட்டிய மனைவி வீட்டில் இருக்க விலைமகள் வீடு தேடி போன விக்னேஸ்வரன் – நக்கீரன் குற்றச்சாட்டு

கடலில் மூழ்கிறவன் ஒரு துரும்பைப் பிடித்தாவது கரையெற முயற்சிப்பது போல வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளாராக விக்னேஸ்வரன் போட்டி போட்டபோது அவரைக் கொழும்புத் தமிழன், வாசுதேவ நாணயக்காரரின் சம்பந்தி, அவரது பிள்ளைகள் சிங்களத்திகளை திருமணம் செய்தவர்கள் என்று அர்ச்சித்தவர்கள் – தூசித்தவர்கள் இப்போது அவரைத் தலையில் தூக்கி வைத்து காவடி ஆடுகிறார்கள். அவருக்கு உடுக்கு அடித்து உசுப்பேத்துகிறார்கள்.

கஜேந்திரகுமார் என்ற நொண்டிக் குதிரையில் பணம் கட்டிப் பணத்தை இழந்தவர்கள்தான் இப்போது வின்னேஸ்வரனைப் பஞ்சகல்யாணிக் குதிரை என நினைத்து அதில் பணம் கட்ட வெளிக்கிட்டுள்ளார்கள். விக்னேஸ்வரன் என்ன சொன்னாலும் எதைப் பேசினாலும் அதற்குப் பதவுரை, விரிவுரை, பொழிப்புரை எழுதி அவரை அரசியலில் ஒரு சாணக்கியன் எனப் படம் காட்டப் பார்க்கிறார்கள். தன்னை ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்ளும் விக்னேஸ்வரன் அரசியலுக்கு முற்றிலும் புதியவர்.

வட கிழக்கில் நடந்த போரையோ வேறு உயிர், உடமை அழிவுகளையோ அறியாதவர். முதலமைச்சராக வந்த பின்னர்தான் தனக்கு வடக்கில் வாழும் மக்களின் துன்ப துயரங்கள் தெரியவந்ததாம். இப்போது விக்னேஸ்வரன் புதிதாக ஒரு கண்டு பிடிப்பைக் கண்டு பிடித்துள்ளார் என அவரது தொண்டரடிப் பொடியாழ்வார்கள் இணையதளங்களில் கிறுக்கித் தள்ளுகிறார்கள். அறியாமை தவறில்லை. ஆனால் அதனைப் பகிரங்கப்படுத்துவது அறிவீனம்.
“ 2103 ல் இருந்த சுயநிர்ணயம் எனும் பதம், 2015 தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை என்பதையும் போட்டு கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்” என வன்னியின் எச்சங்கள் நடத்தும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தச் செய்தியை வெளியிட்டுத் தங்கள் முதுகிலே தாங்களே தட்டிக் கொள்கின்றன. அதாவது வட மாகாண சபைத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழர்களது சுயநிர்ணய உரிமை வற்புறுத்தப்பட்டதாம். ஆனால் 2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அது விடுபட்டு உள்ளது எனத் தான் நினைப்பதாக விக்னேஸ்வரன் வட மாகாண சபை உறுப்பினர்களோடான சந்திப்பில் சொன்னாராம். அதைத்தான் வன்னியின் எச்சங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். சும்மா வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு விக்னேஸ்வரன் அவல் கொடுத்தால் விடவா போகிறார்கள்? உண்மை என்ன? 2013 இல் ததேகூ வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சுயநிர்ணய உரிமை பற்றி சொன்ன அதே வாசகம் 2015 இல் ததேகூ வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் அட்சரம் பிசகாமல் இருக்கிறது.

2013 தேர்தல் அறிக்கை
தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.(The Tamil People are entitled to the right to self-determination)

2015 தேர்தல் அறிக்கை
ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமை, பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் தொடர்பாக எழுதப்பட்ட பன்னாட்டு உடன்படிக்கைகளுக்கு ஒப்ப தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். அந்த உடன்பாட்டை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொண்டு இணக்கமும் தெரிவித்துள்ளது. (The Tamil People are entitled to the right to self-determination in keeping with United Nations International Covenants on Civil and Political Rights and Economic, Social and Cultural Rights, both of which Sri Lanka has accepted and acceded)
2013, 2015 தேர்தல் அறிக்கைகள் மட்டுமல்ல 2010 இல் நடந்த பொதுத்தேர்தலிலும் இதே கோட்பாட்டை ததேகூ முன்வைத்தது.

2010 தேர்தல் அறிக்கை
தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். (The Tamil People are entitled to the right of self determination)
தமிழ் பேசும் மக்கள் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதால் ஒன்றுபட்ட இலங்கையில் தங்கள் வரலாற்று வாழ்விடத்தில் இணைப்பாட்சி (சமஷ்டி) அடிப்படையில் ஆட்சியமைக்க உரித்துடையவர்கள் என்பதை தொடர்ச்சியாக, முன்னுக்குப் பின் முரண்படாத வகையில் ததே கூ தனது தேர்தல் அறிக்கைகள் மூலமாக 2001 இல் இருந்து வெளியிட்டு வருகிறது.

விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்லவென்றும் 2013 இல் ததேகூ வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு ஏற்ப ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதுதான் அதன் நோக்கம் எனச் சொல்கிறார். இது கட்டிய மனைவி வீட்டில் கல்லுப்போல இருக்க விலைமகள் வீடு தேடிப் போனவன் கதையாக இருக்கிறது. உண்மை என்னவென்றால் விக்னேஸ்வரன் தனது அரசியல் அறிவுப் பஞ்சம் காரணமாக தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பப் பார்க்கிறார். அதற்கு வட மாகாண சபை ததேகூ இன் உறுப்பினர்கள், அமைச்சர்கள் இடங்கொடுக்கக் கூடாது.
விக்னேஸ்வரனுக்கு இரண்டு தேர்வுகள்தான் இருக்கின்றன.

தமபே இல் அவர் தொடர்ந்து இணைத் தலைவராக இருக்க வேண்டும் என்றால் வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை விட்டு மரியாதையோடு விலக வேண்டும்.
வட மாகாண சபையின் முதலமைச்சராக தொடர்ந்து இருக்க விரும்பினால் அவர் தமபே இன் இணைத் தலைவர் பதவீயல் இருந்து மரியாதையோடு விலக வேண்டும்.

அவருக்கு வேறு தேர்வில்லை என்பதை வட மாகாண சபையில் உறுப்பினர்களாக இருப்போர் வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்ல வேண்டும்.
தமிழ்மக்கள் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களித்தார்கள். விக்னேஸ்வரன் சொல்வதுபோல் அவருக்கோ, அல்ல.

[தினக்கதிர் ]