ஜேஆர் அறிவிப்பு! பண்டா அமுலாக்கல்! பெரேரா எதிர்ப்பு! கொல்வின் விளக்கம்! பதவிக்காக கொள்கையை கைவிட்டவர்கள்!

காந்தியின் வெள்ளையனே வெளியேறு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட ஜே ஆர், தான் ஆற்றிய உரையில் இலங்கை பல மொழி பேசும் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்படல் வேண்டும் என்ற தன் நிலைப்பட்டை தெரிவித்தார். பின்பு அநகாரிக தர்மபாலாவின் சிந்தனை வழியில் சிங்களம் தேசிய மொழியாக வேண்டும் என, சட்டசபையில் கூறி தன் அரசியல் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். அதேபோல பிரித்தானியாவில் மேற்படிப்பு படித்து நாடு திரும்பிய பண்டாரநாயக்க, இலங்கை மூன்று சமஸ்டி ராச்சியங்களாக மாற்றம்பெற வேண்டும் என கூறினார். ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் தமிழரசு கட்சி கோரிய சமஸ்ட்சிக்கு ஒப்பமிட்டு பின்பு அதனை கிழித்து எறிந்தார்.

சிங்கள மசோதாவை சமசமாஜ கட்சி தலைவர் என் எம் பெரேரா தனது கட்சி சார்பாக சபையில் எதிர்த்தார். அவரது கட்சியை சேர்ந்த கொல்வின் ஆர் டி சில்வா அந்த விவாதத்தின் போது இரு மொழி ஒருநாடு, ஒரு மொழி இருநாடு என்று விளக்கம் கொடுத்தார். ஆனால் 1970ல் கூட்டரசில் இணைந்து மந்திரிகளான இருவரும், 1972ல் உருவாக்கப்பட்ட தமிழருக்கு பாதிப்பை அதிகரிக்க செய்த அரசியல் அமைப்பை ஆதரித்தனர். அந்த அரசியல் அமைப்பை உருவாக்கியதால் அரசியல் அமைப்பின் தந்தை என கொல்வின் வர்ணிக்கப்பட்டார். [ Father of Constitution ]. பதவில் அரசியலில் இதுபோல் கொண்ட கொள்கையை கைவிட்டவர்கள் எம்மிலும் உண்டு.

டி எஸ் சேனநாயக்கவின் பின் தான்னைத் தான் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யவர், என்ற எதிர்பார்ப்பில் இருந்த பண்டாரநாயக்காவுக்கு, வில்லனாக இருந்தவர் சேர் ஜோன் கொத்தலாவலை. தனது மருமகனை டி எஸ் முன்னிலைப் படுத்துவதாக முரண்பட்டே 1951ல் பண்டா கட்சியில் இருந்து வெளியேறினார். 1952 ல் டி எஸ் இன் திடீர் மறைவின் பின் புதிய திருப்பம் ஏற்ப்பட்டது. தேசாதிபதி சோல்பெரி பிரபுவுடன் தனக்கு பின் தன் மகன் தான் பிரதமராக வேண்டும் என, டி எஸ் ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி, கழுத்தில் கமெராவுடன் இயற்கை காட்சிகளை படம் பிடித்து அரசியல் வாடையின்றி இயற்கையுடன் ஒன்றித்திரிந்த டட்லி பிரதமரானார்.

1944ல் ஜே ஆர் சிங்களம் அரசகரும மொழி என பிரேரித்தபோது கல்வி அமைச்சர் கன்னங்கரா சிங்களமும் தமிழும் அரசகருமமொழி என முன்மொழிந்ததை, ஜே ஆர் ஏற்று பிரேரணை 29/8 வாக்குகளால் நிறைவேறியது. 1.சிங்களம் – தமிழ் கற்கை மொழியாக பாடசாலைகளில் பயன்படுத்தல். 2. பொது பரீட்சைகளில் சிங்களம் – தமிழ் கட்டாய பாடமாகல். 3. சட்டசபை நடவடிக்கைகளை சிங்களம் – தமிழ் மொழிகளில் நடத்தல். 4. பிறமொழிகளில் உள்ள புத்தகங்களை தெரிவு செய்து சிங்களம் – தமிழ் மொழியில் மொழிபெயர்க்க ஒரு கமிஷனை அமைத்தல். 5. ஆங்கிலத்தில் இருந்து சிங்களம் – தமிழ் மொழிபெயர்பில், எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி அறிவிப்பதற்கு ஒரு கமிஷனை அமைத்தல்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பண்டாரநாயக்க அரச கருமமொழியாக தமிழ் பாவிக்கப்படுவதால் எந்த பாதகமும் இல்லை. அது இன நல்லுறவை ஏற்படுத்தும். சகல சமூகங்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு தனிபட்டரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு எந்த காரணமும் இல்லை என்றார். அதேவேளை நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் 1951 வரை எடுபடாமல் இருந்ததையும் கண்டித்த பண்டாரநாயக்க, அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றம் சுமத்தினார். அந்த நேரத்தில் வடக்கிற்கு சென்ற சேர் ஜோன் கொத்தலாவலைக்கு, கொக்குவில் இந்து கல்லூரியில் கொடுக்கப்பட்ட வரவேற்பில் அதிபர் ஹண்டி பேரின்பநாயகம் முன்வைத்த, தமிழ் மொழி அமுலாக்கல் கோரிக்கையை ஏற்று அரசியல் அமைப்பு திருத்தம் மூலம், தான் அதை நிறைவேற்றுவேன் என அளித்த வாக்குறுதி தெற்கில் பெரும் எதிர்வலையை ஏற்படுத்தியது.

அந்த வேளையில் சமசமாஜகட்சி இரு மொழி பாவனைக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு நகரமண்டபத்தில் பொது கூட்டம் நடத்தியது. அதனை குழப்ப முற்பட்ட சிங்கள தீவிரவாதிகளால் சமசமாஜ கட்சி தலைவர்கள் தாக்கப்பட்டனர். 1955ல் என் எம் பெரேரா சிங்களம் – தமிழ் அரசகரும மொழியாக அரசியல் அமைப்பு திருத்தம் ஊடாக உடனடியாக அமுல்படுத்தபடவேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்த போது யு என் பி யும், எஸ் எல் எப் பி யும் அதனை ஆதரிக்கவில்லை. மொழியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தான் பிரதமர் பதவியை பெறுவதற்கான வழியாக, 1955ல் நடந்த தனது கட்சி மாநாட்டில் சிங்களம் மட்டும் தீர்மானத்தை முன்மொழிந்த பண்டா, தமிழ் மொழியின் நியாயமான பிரயோகத்துக்கும் உத்தரவாதம் அளித்தார்.

1956ல் களனி மாநாட்டில் ஜே ஆர் சிங்களம் மட்டும் பிரேரணையை முன்வைக்க, அதை எதிர்த்து நடேசன் உட்பட பல தமிழ் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். ஜே ஆரின் அறிவிப்பு தந்த அதிர்வில் நான் பதவிக்குவந்த 24 மணிநேரத்தில் அதை நிறைவேற்றுவேன் என கூறினார் பண்டாரநாயக்கா. அதுவும் அவரது வெற்றிக்கு பெரும் பங்களிப்பை செய்தது. காரணம் அவர் உருவாக்கிய நாட்டுவைத்தியர், ஆசிரியர், தொழிலாளர், விவசாயிகள், பௌத்த பிக்குகள் என ஐந்து அமைப்புகளின் கூட்டு, சிங்கள மொழி பேசும் அமைப்புகள் என்பதால் ஆங்கில அறிவு கொண்டவரின் ஆளுமையில் இருந்து விடுபட, ஏற்புடைய ஆயுதம் சிங்களம் அரசகரும மொழியாதல், அதுவும் 24 மணிநேர அவகாசத்தில் என்ற உத்வேகம் வாக்குகளாக குவிந்து, 95 ஆசனங்களில் 51ஐ வென்று பண்டா பிரதமரானார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதுபோல், சமஸ்டி முறைமை தான் எம் நாட்டுக்கு ஏற்றது என கூறியவர், செல்வாவுடனான ஒப்பந்ததை பேரினவாத எதிர்ப்பால் கிழித்தெறிந்தார். அவர் பதவிக்குவர உதவிய ஐந்து அமைப்புகளில் ஒன்றின் புத்தபிக்குவால் அவர் சுட்டுக்கொல்லபட்டபோது, சேர் ஜான் கொத்தலாவலை நான் கட்டிவைத்திருந்ததை பண்டா அவிழ்த்து விட்டார் அது அவரை கடித்துவிட்டது என்றார். 1928 ல் கொண்ட கொள்கையை 1956ல் பிரதமர் பதவிக்காக கைவிட்டவர் தான் பண்டாரநாயக்க. ஈழக்கனவு சுமந்த இளைஞர்களுக்கு தலைமை தாங்கி அவர்கள் களப்பலியாக, தாம் இன்று காணும் கனவில் வாழும் தலைவர்களை போல், அன்றைய அரசியல் தலைவர்கள் செய்ததையும் நாம் சிந்தையில் கொள்வோம்.

(ராம்)