படிக்கப் போன எமது பிள்ளைகளை மடக்கிப் பிடித்து படையணியில் சேர்த்தவர்களை விசாரணை செய்ய வேண்டும் !

(சலசலப்பு என்ற இணையத் தளம் வெளியிட்டிருக்கும் கட்டுரை இது. இக்கட்டுரையூடாவே இவர்கள் அம்பலப்படுவதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சியை ஒழித்து நின்று கொண்டு காட்டிக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு செயல்படும் இழிச்செயல்களை அம்பலப்படுத்துவதற்காகவும் அவர்களின் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் – ஆர்)

1987ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட “ஒப்பரேஷன் லிபரேஷன்” இராணுவ நடவடிக்கையின் போது தாக்குப்பிடிக்க முடியாமல் புலிகள் பின்வாங்கினர். இதைத்தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்தது. வட-கிழக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு, தற்காலிகமாக இணைந்த வட கிழக்கின் மாகாண சபையை ஆளுகின்ற அரிய சந்தர்ப்பம் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்திற்கே கிடைத்தது.

இப்படியொரு சந்தர்ப்பம் ஏனைய எந்தவொரு இயக்கத்திற்கும் கிடைக்கவுமில்லை, இனிமேல் கிடைக்கப்போவதும் இல்லை. இனிமேல் “நாங்களே தான் ராஜாக்கள், இனி எம்மை எவராலும் அசைக்க முடியாது” என்ற அதிகார மமதையினால், “நாங்கள் முன்னைய ஈ.பீ.ஆர்.எல்.எப். அல்ல “ எனும் புதுக்கோஷத்துடன் கிருஷ்ணராஜா போன்ற புத்திஜீவிகள், தமிழ் வணசிங்கா போன்ற ஆசிரியர் சங்க தலைவர்கள், வண பிதா சந்திரா பெர்னாண்டோ போன்ற பிரசைகள் குழு தலைவர்கள், அகிலன் போன்ற மாணவ தலைவர்கள், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள் என வகை தொகையின்றி கொன்று தள்ளினார்கள் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தினர்.

இதனால், அன்று தொட்ட சனியனால் இன்று வரை தொடர்ந்து மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றார்கள் ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தினர். அத்துடன் மட்டும் நின்றுவிடாது, பாடசாலைக்கு சென்ற, வேலைக்கு சென்ற, கோவிலுக்கு சென்ற, வைத்திய சாலைக்கு சென்ற தமிழ் இளைஞர்களை பலவந்தமாக வகை தொகையின்றி தங்களது படையணிக்கு அள்ளிச்சென்றார்கள். தமிழ் அரசியல் வரலாற்றில் “பலவந்த பிள்ளை பிடிப்பின் பிதாமகர்கள்” என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கோ, அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கோ அனுப்புவதற்கே பயந்து வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருக்கும் அளவிற்கு பயங்கரம் தாண்டவமாடியது.

புலிகளின் புலனாய்விற்கு எப்படி ஒரு பொட்டம்மானோ, அவ்வாறு தான் ஈ.பீ.ஆர்.எல்.எப். இன் புலனாய்வு பிரிவான மக்க ஆய்வு படைக்கு (MAP)பொறுப்பாக இருந்து செயற்பட்டவர் ஜேம்ஸ் என்று அழைக்கப்படும் ஈஸ்வரமூர்த்தி. கொலை, கடத்தல், கப்பம் ஆகியன ஜேம்ஸின் உத்தரவுக்கிணங்கவே இடம்பெற்றது.

புலிகள் அழிக்கப்பட்டு, புதைக்கப்பட்டபின்னர் இப்போ தலை நீட்டியிருக்கும் ஜேம்ஸ், தன்னை ஒரு ஒரு தீவிர புலி எதிர்ப்பாளனாகவும், ஐக்கியத்திற்காக உழைக்கும் ஒருவனாகவும், முற்போக்கு சிந்தனையாளனாகவும் காட்ட முற்படுகிறார்.

ஆனால் அவரால் நடத்தப்படும் சூத்திரம் என்னும் இணைய தளத்தில், காழ்ப்புணர்ச்சியின் நிமித்தம் கொட்டப்படும் அலம்பல்களிலோ, இருக்கின்ற ஐக்கியத்திற்கும் ஆப்பு வைக்கும் செய்திகளே பிரசுரிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, புலிகள் எத்தனையோ பேரை கடத்தி சென்று கொலை செய்திருக்கின்றார்கள்.

புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரும், புலிகளின் கடத்தல் தொடர்பாக சாட்சியமளிக்க பலர் தயங்குகிறார்கள். காரணம் தங்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பீதி.

இவை பற்றி ஜேம்ஸ் என்ற பிரகிருதி ஒரு வரி கூட எழுதுவதில்லை. இவர்களது வயித்தெரிச்சல் எல்லாம் “இனி தேவா சரி, இனி தேவா சரி “ என்று ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின்போதும் சொல்லிக்கொண்டு வருகின்றோமே, ஆனால் தேவாவோ (டக்ளஸ் தேவானந்தா ) கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் பிரதிநிதியாக இருந்து வருகின்றாரே என்பதுதான். காகம் திட்டி மாடு சாவதில்லை என்பதை ஜேம்ஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அமைதி காக்கும் படை காலத்தில் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் பரணகம ஆணைக்குளுமுன்னர் சாட்சியமளிக்க இருக்கின்றார்கள் .ஜேம்சும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா ?

*தோழர் கா .வீரகத்தி)