வெருகல் படுகொலையின் வெஞ்சினம்

பேரிகை ஆற்றின் கதறல்.
கதிரவெளி ஒரு குருசேத்திரமாக
மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்
கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்
வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு
வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு
அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து
இரண்டாவது பெரியவெள்ளியை
எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.
வடக்கு வாரியடித்த புழுதியில்
வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல
கிழக்கு மண்ணும் சிவந்தது.
வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்
வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே
அதை நாம் அறிவோம் என்றும்
காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்
கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்
காடுகளுக்கு சொல்லிப்பறந்தது
கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.