அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழில் போராட்டம்!

விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் 14 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனும் கலந்துகொண்டார்.