ஆளுநர் நியமனம்; ‘புதியதோர் அத்தியாயம்’

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் நம்பிக்கையூட்டும் புதியதோர் அத்தியாயம் இணைக்கப்பட்டுள்ளதாகவே, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையை, ஐக்கிய சமாதான கூட்டமைப்புக் கருதுவதாக, அக்கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987இல் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடங்கி, இன்று வரையிலான கடந்த 31 வருடங்களாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே, இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதோர் முன்னேற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் வாழும் சகல இனங்களினதும் சம்மதத்துடன் முழுமையானதோர் அரசியல் யாப்பு, சட்ட ரீதியாக நிறைவேற்றப்பட்டு அமுலுக்குவரும் வரை, சிறுபான்மை இனங்களின் வாழ்வுரிமை, தனித்துவ அடையாளம், இருப்பு என்பனவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு – கிழக்கிலுள்ள தமிழ்பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களினதும், மாவட்டங்களினதும் ஆளுநர்களும், மாவட்ட செயலாளர்களும் சரளமாகத் தமிழ் பேசுபவர்களாகவே இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகங்களிலுள்ள உயர்நிலை அரச மற்றும் திணைக்களப் பதவிகள் அனைத்தும், அந்தந்த மாகாணங்களில் வாழும் சமூகங்களின் இனப்பரம்பலுக்கு ஏற்ப பங்கிடப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்ந்த தகைமைகளைக் கொண்டுள்ள சிறுபான்மை சமூகத்தினர், தங்களது சொந்த மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் உரிய பதவி நிலைகளில் அமர்த்தப்படாமல், அவர்களது தகைமைகளுக்குக் குறைந்த பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுவதனை தாம் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.