‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீபாவளி தினமான சனிக்கிழமையன்று, மதுபோதையில் அட்டகாசம் செய்து, பொதுமக்களை ஒருவர் அச்சுறுத்துவதாக, அச்சுவேலி பொலிஸாருக்கு தகவலொன்று கிடைக்கபெற்றிருந்தது. இதன் அடிப்படையில், அச்சுவேலி பஸ் நிலையத்துக்குச் சென்ற இரகசிய பொலிஸாரை, மேற்படி நபர் அச்சுறுத்தி விட்டு, தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். துரத்திச் சென்ற பொலிஸார், தம்பாலை சந்திப் பகுதியில் வைத்து, அவரை கையும் மெய்யுமாக பிடித்திருந்தனர். இதன் போது, அந்தச் சந்தேகநகபர், கஞ்சா போதைப்பொருள் நுகர்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்நபருடன் நின்ற மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய, உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜீ.பி அனில்குமார தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கைதான இளைஞன் தலைமையில், அக்லின் என பெயர் கொண்ட குழு ஒன்று இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இக்குழுவில் 25 பேர் வரையில் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இக்குழு தொடர்பில், பொலிஸ் புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், கைதான ஆவா குழுவுடன் தொடர்புடைய இளைஞனை, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினர்.