இவ்வருடம் தேர்தல் இல்லை

தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்த முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய மீள்திருத்தப் பணிகள், இதுவரை முற்றுப்பெறாதிருப்பதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதென்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது என, கொழும்பில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காக, ஒழுக்கமின்றி நடந்துகொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க, கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறாக நடந்துகொண்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலைமை, எதிர்காலத்தில் மாற்றம் பெற்று, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க செயற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.