இ – மெயிலை கண்டுபிடித்த அய்யாதுரையின் ஆதங்கம்!!!

இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று, தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ – மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம் சூட்டியுள்ளன.

ஆனால் அந்த அங்கீகாரம், கவுரவம் தனக்குச் சொந்தமானது என்று அமெரிக்காவில் வாழும் தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவகாரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய 14வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் நேரடி இணைப்பின் மூலம் தகவல் அனுப்பும் சேவை இருந்தது.

அதில் வெறும் வார்த்தைகளை (டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் கண்டுபிடித்தார். நான்தான் முதன் முதலில் கணினி மூலம் தகவல்களை அனுப்பும் மென்பொருளை உருவாக்கினேன். நான் கண்டுபிடித்த இ-மெயில், டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பாக்ஸ், அவுட்பாக்ஸ், சிசி, பிசிசி, டேட்டா, பார்வர்டு, ரீப்ளை உட்பட அனைத்தையும் நான்தான் உருவாக்கினேன். அதற்கான காப்புரிமையை 1982-ல் பெற்றேன்.

ஆனால் எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம் நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன். இன்று சிவராத்திரி கொண்டாட படுகிறது. இது உண்மை, நீதியின் தினம். உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சிவா அய்யாதுரையின் தந்தை ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர். தாயார் மீனாட்சி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர்.