ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை தமிழரசுக் கட்சி தன்வசம் இழுத்தது?

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எப்​) முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், நேற்று (19) அவர் அக்கட்சியில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர் துரைராசா ரவிகரன், இதுவரை சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்து, மாற்றுத் தலைமை கோரி வரும் சுரேஸ் பிரேமச்சந்திரன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, க.குமாருடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கியே போட்டியிடப்போவதாகவும் பகிரங்கமாக தெரிவித்து, புதிய முன்னணியின் உருவாக்கத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.

இந்நிலையில், அவரது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரை, தமிழரசுக் கட்சி தன் பக்கம் இழுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உறுப்பினர், ஒரு நெருக்கடியான கட்டத்தில் தமிழரசுக் கட்சியின்பால் நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (19) தமிழரசுக் கட்சியின் தெல்லிப்பளைத் தொகுதி அலுவலகத்தில் வைத்து கட்சியின் தலைவரிடத்தில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து, முறைப்படி தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.