உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் பயங்கரவாதிகளின் வலையமைப்பு

பல்வேறான இரசாயனப் பதார்த்தங்களை உருக்கியே, இந்தக் குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தக் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக, மின்குமிழ்களில் பயன்படுத்தும் நுண்ணிழைகளையே பயன்படுத்தியுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

குண்டுதாரிகளின் முதுகுப் பொதியில், இவ்வாறான குண்டு இருந்துள்ளமை தொடர்பில், விசாரணைகளின் போதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும் என்றும் இராணுவ தரத்திலான வெடிபொருள்களை இவர்கள் பயன்படுத்தியுள்ளமை, நம்பமுடியாத உண்மை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிச்சம்பவம் இடம்பெற்றதை அடுத்தும் கூட, TNT மற்றும் RDX போன்ற வெடிபொருள்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் தெரியவருகின்றது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, இவ்வாறான வெடிகுண்டுகளை, உலகின் பல இடங்களிலும் பயன்படுத்தியுள்ளனர் என்றும் வெடிகுண்டுகளில் கலக்கப்படும் இரசாயனங்கள், சரியான அளவில் கலக்கப்பட்டிருந்தால், பேரழிவு ஏற்படக்கூடும் என்றும், விசாரணைகளை மேற்கொள்ளும் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான நுட்பங்கள், வெளிநாடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற பின்னர், தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட பாணந்துறை பகுதியிலுள்ள வீடொன்றை, பொலிஸார் முற்றுகையிட்டிருந்தனர். வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட பகுதியாக அது இருப்பதற்கான ஆதாரங்கள் அங்கு சிக்கியதாகவும் இரசாயனங்கள் நிரப்பப்பட்டு எரிக்கப்பட்ட இரண்டு கலன்களை, பொலிஸார் கைப்பற்றியதாகவும், ஆனால், குண்டுதாரிகளால் அங்கு இருந்த சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியின் உடலில் இருந்து, மின்குமிழ்களுக்குப் பயன்படுத்தும் நுண்ணிழையைக் கண்டுபிடித்ததாகவும் அதேபோன்ற சிறிய கம்பி, பாணந்துறையில் முற்றுகையிட்ட வீட்டிலிருந்து கண்டுபிடித்ததாகவும் தெரியவருகின்றது.

இந்தத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துச் சாட்சியங்களும், பரிசோதனைக்காக, ஆய்வுக்கூடத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.



நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்று (13) இரவு 9 மணி முதல் நாளை (14) அதிகாலை நான்கு மணிவரை, நாடு முழுவதற்கும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, வடமேல் மாகாணத்துக்கு, மறு அறிவித்தல் விடுக்கும் வரையிலும் கம்பஹா மாவட்டத்தில்,நாளை காலை 6 மணி வரையிலும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவித்துள்ளது.

அந்த வகையில், கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா, மினுவங்கொட, தொம்பே, கணேமுல்ல, கிரிந்திவெல, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயங்கொட, வீரகுல, வெலிவேரிய, பெல்லேவெல மற்றும் யக்கல பொலிஸ் பிரிவுகளிலேயே, இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தவிர, வடமேல் மாகாணத்துக்குட்பட்ட, குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, கொபெய்கனே, ரஸ்நாயக்கபுர போன்ற பொலிஸ் பிரதேசங்களுக்கு, மறு அறிவித்தல் விடுக்கும் வரையில், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென்றும், ஊடகப் பேச்சாளர் கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் கூறியது.

இருப்பினும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், படையினரின் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியோர், படையினரின் முன்னிலையிலேயே சொத்துகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

வீதியோரங்களிலிருந்த தற்காலிக வர்த்த நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில கடைகள், பிரட்டி உருட்டித்தள்ளப்பட்டுள்ளன.

இதனால், முஸ்லிம்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் சிலர், வயல்வெளிகளில் கூடாரங்களை அமைத்துத் தஞ்சமடைந்துள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அறிக்கையொன்றை விடுத்துள்ள அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபை, பொறுமை காக்குமாறு சகல முஸ்லிம்களிடமும் கேட்டுகொண்டுள்ளது.

சிலாபத்தை சேர்ந்த வர்த்தரொருவர், தன்னுடைய பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட கருத்தொன்றை அடுத்து ஏற்பட்ட பதற்றமான நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, சிலாபத்தில், நேற்று (12) பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அது, இன்று காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், குருநாகல், அலகொலதெனிய பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியிலுள்ள இரண்டு மாடிக்கட்டிடத்தை தடைச் செய்யப்பட்ட இயக்கமான தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு வழங்கியதாக கூறப்படும் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான வர்த்தகரொருவர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, அந்த கட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத பரப்புரையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் கதிர்இயக்கப் பிரிவின் அதிகாரி கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்தே, அப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.

அந்தப் பதற்றமான நிலைமை தொடர்ந்திருந்த நிலையிலேயே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இன்று மாலைவரையிலும் தொடர்ந்தது. அதனையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்தியாவுக்குள் தாம், தமக்கான இடமொன்றை ஸ்தாபித்துக் கொண்டதாக, இஸ்லாமிய அரசு என்ற பெயரில் இயங்கும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில், காஷ்மிர் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலொன்றைத் தொடர்ந்தே, தாம் தமக்கான இடமொன்றை ஸ்தாபித்ததாக, அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

இந்த மோதலின் போது, ஐ.எஸ் அமைப்பு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவ்வமைப்பின் அமாக் செய்திச் சேவை, நேற்றைய தினம் (10), செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவில் தாம் ஸ்தாபித்த இடத்துக்கு, ‘விலாயஹ் ஒஃப் ஹிந்த்’ எனப் பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மிரின் ஷொப்பியான் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஷிபோரா நகரிலேயே, இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில், தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் காயமடைந்ததாக, ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த மோதலில், இஷாக் அஹ்மட் சோஃபி என்ற தமது போராளி உயிரிழந்ததாக அவ்வமைப்பு அறிவித்துள்ள அதேவேளை, இதனை, இந்தியப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பைத் தம்வசம் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில், கலீஃபா ஒன்றையும் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், அந்தப் பூமிப் பிரதேசத்தை, கடந்த பெப்ரவரி மாதத்தில், அவ்வமைப்பு இழந்து, பாரிய தோல்வியமைடந்தது.

அந்தத் தோல்வியைத் தொடர்ந்தே, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் போன்ற பாரிய தாக்குதல்களை நடத்தி, தமது பலத்தைக் காண்பித்து வருகின்றனர். இலங்கையில் அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பொறுப்பையும், அவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புதுடில்லி – இந்தியா ரொய்டர்ஸ் செய்திச் சேவை)



“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரான் என்பவரின் நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான்கு வயதான அந்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அம்பாறை சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு, கடந்த 8 ஆம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைள் தொடர்பில் சஹ்ரானின் மனையான அப்துல் காதர் பாதிமா சாதியா என்பவர், மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை ​விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த இவ்விருவரும் சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தையென, சஹ்ரானின் சகோதரியும் ச​கோதருமே பாதுகாப்பு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளையிடம், குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினர் ​ஒவ்வொரு நாளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூற்று மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதியளித்துள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணமடைந்துவிட்டார் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

மரணமடைந்த பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரானின் சகோதரி, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபரினதும், சஹ்ரானினதும் டீ.என்.ஏ-ஐ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குகு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் கோரிநின்றனர்.

சிறைச்சாலையில் இருக்கும் சஹ்ரானின் சகோதரியை அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று இரத்த மாதிரியை பெற்று, அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி, டீ.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதன் அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்குமாறு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தற்கொலைத் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் தலையின் பகுதிகள் மற்றும் உடற்பாகங்களில் இரசாயன திரவியங்கள் உள்ளடங்கியுள்ளதா என்பது தொடர்பில் தேடியறிவதற்காக, அதன் பகுதிகளையும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்து பரிசோதனைக்கு அனுமதியளிக்குமாறு நீதவான் கோரிநின்றார். அதற்கும் நீதவான் அனுமதியளித்தார்.

அதேபோல, குண்டுதாரிகள் போக்குவரத்து செய்ததாகக் கூறப்படும், இதுவரையிலும் கைப்பற்றப்பட்ட ஏழு வாகனங்களிலும் குண்டுகள், வெடிப்​பொருட்கள் கடத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நீதவான் அனுமதியளித்தார்.

அதேபோல, தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள தெமட்டகொடை மஹவில பூங்காவை வசிப்பிடமாகக் கொண்ட மசாலாப் பொருட்களை இறக்குமதிய செய்தவரான இப்ராஹிம் மொஹமட் என்பவருக்கு, பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, சர்வதேச ரீதியிலிருந்து நிதி கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இஷானா என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தின் கணக்காளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேற்படி விவகாரம் தொடர்பில், அவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

ஷங்கரில்லா மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தாக்குதல்களை நடத்திய இரண்டு தற்கொலைத்தாரிகளுக்கும் அறைகளை ஒருநபரை ஒதுக்கியுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், குண்டுத்தாக்குதலில் அவரும் மரணமடைந்துவிட்டார் என நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், அதன் முன்னேற்ற அறிக்கையை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் (06) சமர்ப்பித்தே, மேற்கண்ட விவரங்களை நீதவான் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், இந்தியாவிலுள்ள சில நகரங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளபோது, தமிழ்நாட்டுக்கும் சென்றிருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள், இந்திய ஊடகமான த ஹிந்துவுக்குத் தெரிவித்துள்ளனர்.

மன்னாரிலிருந்து கடல்வழியாக தமிழ்நாட்டுக்கு சஹ்ரான் சென்றிருக்கலாம் என்றும் தாக்குதல்களுக்கு டி.ஏ.டி.பி வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன. சலவை இயந்திர நேரக்கணிப்பு பொறிகள் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த செய்தியில், இணையத்தள வழிகாட்டல்களைப் பயன்படுத்தி இவற்றை உள்ளூரில் குண்டுதாரிகள் தயாரித்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் இந்தியாவுக்கு விமானத்தின் மூலமாகச் சென்றமைக்கான எந்தவொரு விமானப் பயண பதிவுகளும் அதிகாரிகளினால் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. அதற்கான குடியேற்ற பதிவுகளும் உறுதிப்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஆனால், மன்னாரிலிருந்து, தமிழ்நாட்டுக்கு, கடல் வழியாக அவர் சென்றிருக்கலாம்” என்றும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைகுண்டுதாரிகள், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலான புலன்விசாரணைகளின் போது, கிழக்கு கடற்கரையோரப்பகுதின் மட்டக்களப்பு மற்றும் மேற்கு கடற்பகுதியிலுள்ள கொழும்பு பகுதிகளிலேயே, இவர்களது ஆதாரங்கள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் இந்தத் தற்கொலைகுண்டுத்தாரிகளின் பல செயற்பாடுகள், இந்த இரண்டு நகரங்களிலுமே இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள் விசாரணைகளின் பிரகாரம், சஹ்ரான் ஷாசிம், பெங்களூர், காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு, 2018ஆம் ஆண்டு இறுதியில் சென்றுள்ளார் என்றும் சக பயங்கரவாதிகள் மற்றும் ஜிகாதிகளுடன் வலையமைப்பை ​ஏற்படுத்திக்கொள்ளவே இவர் அங்கு சென்றிருக்கலாம் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சென்றவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றும் ஆனால், அவர்கள் நிச்சயமாக பாதயாத்திரைக்காகச் சென்றிருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

2019.05.05 பி.ப 5.50

உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்​ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே, பகிரங்கமாகத் தேடிக் கண்டுபிடித்துள்ளாரென, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆறு இளைஞர்களையும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகும் மனநிலைக்குக் கொண்டுவருவதற்கான மூளைச் சலவையை, தொடர்ந்து பல மாதங்களாக, தனிப்பட்ட “ஷெட்ரூம்” ஊடாக மேற்கொண்டுள்ளார் என்று, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக், இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை மேற்​கோள்காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள மேற்படி ஊடகம், முஸ்லிம்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்தே, இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக, தற்கொலைத் தாக்குதலை நடத்தக்கூடிய மனப்பக்குவத்துக்கு அவ்விளைஞர்களைக் கொண்டுவருவதற்காக, அவர்களுக்கான மூளைச்சலவை செய்யும் பணியில், சஹ்ரான் ஹாஸிம் தீவிரமாகச் செயற்பட்டுள்ளாரெனவும் இதற்காக, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராசிக் தெரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில், சஹ்ரான் ஹஸீமின் செயற்பாடுகளால் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடுமென அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், அதற்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் இளைஞர்களின் மனதை மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்ட சஹ்ரான் ஹஸீமின் பேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகளை முடக்குமாறு, புலனாய்வுப் பிரிவினரிடம் தாம் கோரியிருந்ததாகவும் அவ்வாறு அந்த சமூக வலைத்தளங்களை மேற்பார்வை செய்திருந்தால், சஹ்ரானின் திட்டங்களை இலகுவில் கண்டறிந்திருக்கலாம் என்று, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு உள்ளிட்ட ஏனைய அமைப்புகளின் ​தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ———————————————————————————————————————————————————————-


2019.05.04 பி.ப 8.55

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின் வெள்ளை நிற ஆடைகள், எதிர்வரும் நாள்களில் தேவைப்படும் என்ற நோக்கத்துடனேயே கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இருப்பினும், அவை எதற்காகக் கொள்வனவு செய்யப்பட்டன என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் இது பற்றி, கல்முனை குண்டுத் தாக்குதலில் உயிரிந்த சாரா என்ற பெண்ணுக்கே தெரிந்திருந்தது என்றும், பாத்திமா நாதியா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னதான எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவானது, கல்முனையில் தாங்கள் இறுதியாகத் தங்கியிருந்த வீட்டிலிருந்தே எடுக்கப்பட்டதாகவும் சஹ்ரானினால், தாங்கள் அனைவரும், கடந்த 19ஆம் திகதியன்று, வானொன்றின் மூலம் சம்மாந்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தாங்கள், நிந்தவூர் பிரதேசத்தில் தங்கியிருந்த போது, படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதால், 26ஆம் திகதியன்று, சாய்ந்தமருது வீட்டுக்குச் சென்றதாகவும், சஹ்ரானின் மனைவி, வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த வீட்டில் தான் தங்கியிருந்த போதும், அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்றும், சஹிரானின் மனைவியான பாத்திமா நாதியா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குத் தேவையான குண்டுகளை, இணையத்தளத்தினூடான தகவல்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்பினரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் குண்டுகளைத் தயாரிப்பதற்காக, வெடிபொருட்களைப் போன்று, யூரியா, வோட்டர் ஜெல் உள்ளிட்ட இரசாயனப் பதார்த்தங்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்திற் தற்கொலைக் குண்டுத் தாக்குதலi நடத்திய குண்டுதாரியே, இந்த குண்டுகளைத் தயாரித்துள்ளார் என்றும் இந்தச் சந்தேகநபர், களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்தவர் என்றும், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை நடத்திய குண்டுதாரி, கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அதிவிசேட (ஏ-9) புள்ளிகளைப் பெற்றவர் என்றும் காத்தான்குடியில் அமைந்துள்ள அரபிப் பாடசாலையில் இணைந்து உயர்க்கல்வியைக் கற்கச் சென்ற காலத்திலேயே, பிரிவினைவாதச் சக்திகளுடன் இணைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



ஒரே நாளில் பல தாக்குதல்கள் திட்டம்; வெற்றியளிக்காமைக்கான காரணம் வெளியானது

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இந்தக் கருத்து மோதலானது, தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தாக்குதலை நடத்துவதற்கான களத்தில் இறங்காதிருந்த சஹ்ரானும், களத்தில் இறங்கித் தாக்குதலை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத் தரப்பு விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து மோதலின் பின்னர், சஹ்ரானுக்கு எதிராகக் குரலெழுப்பிய சிலர், தங்களுக்கான வேறு தலைவரொன்றை நியமித்துக்கொண்டு, வேறொரு இஸ்லாமிய பள்ளிவாசலொன்றுக்குச் சென்றதாகவும், இதனாலேயே, தாக்குதல்கள் பல நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை பிரதேசத்திலுள்ள பாதணி விற்பனை நிலையத்திலிருந்து கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும், சஹரானுக்கு எதிரான கருத்து மோதலில் ஈடுபட்டவர்கள் என்றும் இந்தக் கருத்து மோதலுக்கு முன்னதாக, நாடு முழுவதிலும், பல இடங்களில் தாக்குதல்களை நடத்துவதற்கே தீர்மானிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில், கருத்து மோதலில் ஈடுபட்ட குழு பங்குபெறாததாலேயே, பல தாக்குதல்கள் தவிக்கப்பட்டதாகவும் இல்லையேல், தற்போது இடம்பெற்ற உயிர்ச் சேதங்களை விட 4, 5 மடங்கு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



02.05.2019 பி.ப 02.15

தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.

சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா, நேற்றுமுன்தினம் (01), காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்றுமுன்தினம் மாலை, மதனியாவின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.

இந்தப் பணம், சஹ்ரானிடமிருந்து கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், அது, சஹ்ரானிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளப்பட்டது என, மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.

தன்னை கொழும்புக்கு வருமாறு, சஹ்ரான் அழைத்ததாகவும் இதையடுத்து, வான் ஒன்றில் கொழும்புக்குச் சென்று, கல்கிசையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில், கடந்த ஏப்ரல் 12ஆம் திகதியன்று சஹ்ரானைச் சந்தித்தாகவும் மதனியா கூறியுள்ளார்.

இதன்போதே, தேசிய ஜமாஅத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்காக, 20 இலட்சம் ரூபாயைத் தன்னிடம் சஹ்ரான் வழங்கியதாகவும், மதனியா கூறியுள்ளார்.

இதேவேளை, தனக்கும் சஹரானுக்கும் நீண்டகாலமாக தொடர்பு இல்லை என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியிலிருந்து தனது குடும்பத்தினர் அனைவரும் காணாமல் போய்விட்டதாகவும் கூறியிருந்த மதனியா, சஹ்ரானின் நடவடிக்கைகள் மீது தனது கணவன் வெறுப்படைந்திருந்தார் என்றும் அதனால், அவருடன் தமக்குத் தொடர்புகள் இல்லை என்றும், வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஏற்கெனவே மதனியா தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது, அவர் தனது அண்ணனுடனான தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



02.05.2019 மு.ப 11.12

உயிர்த்த ஞாயிறன்று (21) நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையானத் தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

அவர்களின் விவரங்கள் பின்வருமாறு,



29.04.2019 பி.ப 11.20

சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் இறுதிக் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழிதீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை மேற்​கொண்டதாக, ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி, காணொளியொன்றின் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களுக்குப் பின்னர் முதற்றடவையாக காணொளியொன்றை வெளியிட்டுள்ள பக்டாடியின் 18 நிமிடங்கள் கொண்டுள்ள இந்தக் காணொளியில், ஈராக் மற்றும் சிரியாவில், பிரிட்டன் அளவில் தங்கள் வசமிருந்து பிரதேசத்தை, அந்நாட்டுடன் இடம்பெற்ற போரின் போது இழந்ததாகவும் இது, நீண்டநாள் போராட்டமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின் போது, தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பாரிய பிரதேசம், தங்களது கையை விட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிராளிகளை அழிப்பது குறித்துச் சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும், அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில், வடக்கு ஈராக்கிலுள்ள மொசூலில் முன்னெடுத்த பிரசாரத்தின் பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவரால் வெளியிடப்பட்ட முதல் காணொளி இதுவாகும்.

(Tamil Mirror)