எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை – வட கொரிய தூதுவர்

“எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை.” இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
தூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:

– என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

– ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

– வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.(Kalaiyarasan Tha)