ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும்” என, தெரிவித்து உறவினர்களால் குறித்த போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் 67ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது. 67 நாட்கள் ஆகியும் அரசாங்கம் தீர்வு எதனையும் வழங்காத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரும் இராணுவ புலனாய்வாளர்களும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாகவும் பலநாட்களாக குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவும் ஏ-9 வீதியை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் மயங்கி விழுந்தனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடவேண்டும், காணிகளை விடுவிக்க ​வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, வடமாகாணம் முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.