கலம் மெக்ரேயின் மூன்றாம் வலை

இறுதி யுத்தத்தின்போது, இலங்கையில்; இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கோரி சர்வதேச ரீதியில் பாரிய பிரசாரத்தை மீண்டும் முன்னெடுக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக பிரித்தானியாவின் செனல் 4 நிறுவனத்தின் யுத்த சூனிய வலயம் எனும் திரைப்படத்தை தயாரித்த கலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர் மற்றுமொரு திரைப்படத்தை வெளியிட தயாராகி வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 30ஆம் திகதி நிறைவடையவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் அமர்வு நடைபெறும் காலத்தில் கலம் மெக்ரே உள்ளிட்ட குழுவினர் இந்த பிரசாரத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு எதிர்வரும் 30ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கலம் மெக்ரே குழுவினர்;, இந்த பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்துக்கு எதிரான கலம் மெக்ரே குழுவால் தாயரிக்கப்பட்டுள்ள ஆவணப்படங்கள் தற்போது தமிழ், சிங்களம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தயாராகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தான் தயாரித்துள்ள நீதிக்கான தேடல் திரைப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கலம் மெக்ரே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் நீதிக்கான தேடல் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வழமை போன்று இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்ற மறுப்பை வெளியிட்டுள்ளதாகவும் இந்த தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் குறித்த ஆவணப்படத்துக்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கலம் மெக்ரே அறிவித்துள்ளார்.

தான், எதிர்வரும் 16ம்திகதி தொடக்கம் ஜெனீவாவில் இருக்கவுள்ளதாகவும், தனது கொலைக்களம், யுத்த சூனிய வலயம், மற்றும் நீதிக்கான தேடல் ஆவணப்படங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விரும்பினால் ஜெனீவாவில் அரச பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, தற்போது தான் வெளியிடவுள்ள நீதிக்கான தேடல் ஆவணப்படம் தெடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை கலம் மெக்ரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் இது நாளை 15ஆம் தகதி வொஷிங்கடன் நகரில் காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.