காட்டுப்பகுதியில் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாபத்துறை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை மீட்டுள்ளனர். மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் மது வரி நிலைய சாஜன் வி.திருச்செல்வம், மது வரி நிலைய காவலாளி எஸ்.விதுசன், மது வரி திணைக்களத்தின் சாரதி ஏ.ஜே.பீரிஸ் மற்றும் சிலாபத்துறை கடற்படையினர் ஆகியோர் இணைந்து குறித்த கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.

08 பொதிகளைக்கொண்ட இக்கஞ்சாப்பொதிகள் 17 கிலோ 640 கிராம் எடை கொண்டது என மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார். கடல் மார்க்கமாக வங்காலை கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு பின் காட்டுப்பாதைகளினூடாக சிலாபத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரந்த பிரதேசத்தினூடாக குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்று கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ள போதும் எவரையும் கைதுசெய்யவில்லை எனவும் கஞ்சாப்பொதிகள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை (15) குறித்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கஞ்சாப்பொதிகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக மன்னார் மது வரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் மேலும் தெரிவித்தார்.