குற்றம் செய்த புலி உறுப்பினர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்கை வரை அனைத்து யோசனைகள் குறித்தும் அவதானம் செலுத்தி இந்த இறுதித் தீர்மானத்தை வௌியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த அவரது நிலைப்பாடு என்ன என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சந்திரிக்கா, சுமார் 300 பேர் வரையிலேயே உள்ளதாகவும் அவர்களை மூன்று கட்டங்களாக விடுவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அதில் ஒருதரப்பினர் குற்றங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள், அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியோ அல்லது கண்காணிப்புக்கு உட்படுத்தியோ எவ்வாறாயினும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும், மற்றொரு தரப்பினர் பாரிய குற்றங்கள் இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் அவர்களுக்கு எதிராக சில ஆதாரங்களும் உள்ளன, அவ்வாறானவர்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை, தௌிவான ஆதாரங்கள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் விடுவிப்பதை நாம் எவ்வாறு நியாயப்படுத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்