‘கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் அரசாங்கம்’

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஓர் அரசாங்கத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தப் போகிறது என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரித்தார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ இணங்கவில்லை எனவும் அதனால் தான், கூட்டமைப்பினர் மஹிந்த ராஜப க்‌ஷவுக்கு எதிராக வாக்களித்தனர் எனவும் தெரிவித்தார்.அத்துடன், பொதுத் தேர்தலை நடத்துவதை இலக்காகக் கொண்டு தான், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் பதவியேற்றார் என்றும் எனினும், அந்தப் பதவியில் நீண்ட நாள்கள் அமர்ந்திருப்பது அவரது நோக்கமாக இருக்கவில்லை என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மேலும், கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு இணங்கி, அரசாங்கத்தை அமைப்பதற்கு மஹிந்த விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், இலங்கை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குப் பெரும்பான்மை தேவை என்பதால், கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு, ரணில் விக்கிரமசிங்க இணங்கித்தான் ஆக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.