கோட்டாவுக்கு பிரசாரத்துக்கும் யாழுக்கு வர முடியாது

அத்துடன், வெள்ளைவான் கடத்தல்களை முன்னெடுத்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தான் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிடவுள்ளார் என்பதை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் எனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் பொதுநூலக சிற்றுண்டிச்சாலை கேட்போர் கூடத்தில், இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகனின் வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, லலித் குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சாட்சியமளிப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (27)ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு வருகைதர வேண்டியிருந்தது என்றார்.

ஆனால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. கொழும்பு மேல் நீதிமன்றில் இருந்து ஒரு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தான் யாழ்ப்பாணம் வருவதற்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்ட கட்டளை ஒன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன் காரணமாக அவர், இன்றைய தினம் (27) விசாரணைக்கும் வருகை தரவில்லை. ஆகையால், அவரின் காரணத்தை எடுத்து நோக்கினால், அதற்குள் ஒரு முக்கியமான காரணம் ஒன்று புதைந்துள்ளது.

முதலாளித்துவ நீதித்துறைகளை வைத்துப் பார்க்கும் போது, சட்டத்தை நம்ப முடியாத ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது. பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு வழக்கிற்கு வர முடியாது. பாதுகாப்பு இல்லை என கூறும் ஒருவர் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கும் எவ்வாறு வர முடியும். மே உட்பட ஜூன் மற்றும் இம்மாதமும் விசாரணைக்கு வர முடியாதென்றும் தனக்கு பாதுகாப்பு போதாதென்றும் கட்டளையில் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகனின் பிரச்சினைகள் மட்டுமன்றி, வடமாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கான மக்களின் பிரச்சினை.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள். ஜனாதிபதி உட்பட பிரதமர், கூட்டமைப்பினர் என பல தரப்பினர்களையும் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்த போதும், இதுவரை அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

ஜனநாயகத்துக்கு எதிராக நடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியால் நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன், தொடர்புடைய மற்றொரு சம்பவம். காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவுகளை பற்றி தேடித் தகவல் பெற்றவர்கள் தான் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆவணங்கள் இராணுவத்திடமும் இராணுவத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட குழுக்களிடமும் இருந்தன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சகலரின் பிரச்சினையையும் மஹிந்த அராங்கமும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவத்தினருமே பொறுப்பேற்க வேண்டும்.

இது ஓர் அரச பயங்கரவாத சம்பவம். ஆகையினால் தான், நாங்கள், அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமென கேட்கின்றோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்ட ஒருவர் தான் ஜனாபதியாக போட்டியிடுகின்றார். இந்த விடயம் தொடர்பில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், அவர் மேலும் கூறினார்.