சப்ரகமுவ ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடு

(மக்கள் ஆசிரியர் சங்கம்)

2017ஆம் ஆண்டுக்கான சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றங்களில் மீண்டும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. நியாயமான காரணங்களை முன்வைத்து இடமாற்றத்தை கோரியவர்களின் இடமாற்றங்கள் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாண ஆசிரியர் இடமாற்றல் சபைகளில் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இவ் வருடம் மக்கள் ஆசிரியர் சங்கம் சபரகமுவ மாகாண ஆளுநருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது முன்வைத்த பல கோரிக்கைகளில், இடமாற்றல் சபைகள் ஒழுங்குமுறையில் பல வருடங்களாக நடைபெறுவதில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டு அச்சபைகள் முறையாக இடம் பெறுவதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அதனடிப்படையில் ஆளுநர் 2017ஆம் ஆண்டுக்கான இடமாற்றல் சபைகள் முறையாக செயற்படுத்தப்படுவதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். அக்கடிதத்தின் பிரதியை எமது சங்கத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். 2017ஆம் ஆண்டுக்கான இடாற்றங்கள், இடமாற்றல் சபையினூடாக இடம்பெறுவதனை உறுதிப்படுத்த மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலையீடு குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் இடமாற்றல் சபைகளினூடாக இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் இவ்வருடம் இடமாற்றுச் சபைகள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக இயங்கும் நிலை இருந்தது.
எவ்வாறாயினும் 2017ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களிலும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் நிகழ்ந்துள்ளன. முந்திய வருடங்களில் தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த போதும் இடமாற்றங்கள் உரிய முறையில் செய்யப்படாமையின் காரணத்தினால் இடமாற்றல் பெற தகுதியான தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அநீதிக்கு ஆளானார்கள். இம்முறை வலையங்களுக்கிடையிலான இடமாற்றத்திற்கு விண்ணத்தவர்களில் இடமாற்றத்திற்கு தகுதியான, இடமாற்றம் செய்யக்கூடிய அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றல் சபைகளினால் 2017 ஜனவரி 02ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ன. இடமாற்றத்தை கோரியவர்களுக்கும் அதற்கு பதலீடாக இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கும் என இரு சாராருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பதிலீடாக அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கும் கால அவகாசம் இடமாற்றல் சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதிலீடாக இடமாற்றத்தை பெறுபவர்கள் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமைக்கான தங்களின் நியாயங்களை இடமாற்றல் மேன்முறையீட்டு சபைக்கு வழங்க முடியும். ஆனாலும் சில ஆசிரியர்கள் மேன்முறையீட்டினை அரசியல்வாதிகளின் சிபாரிசுடன் மேற்கொண்டிருந்தனர். அரசியல்வாதிகளின் சிபாரிசுடன் மேன்முறையீடு செய்திருந்த விண்ணப்பங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு அவ் இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது பல வருட காலங்களாக ஒரே பாடசாலையில் பணிபுரிந்து இடமாற்றம் பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே, இவ்வாறு அரசியல் சிபாரிசுகளுடன் இரத்து செய்யப்பட்டு இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டு இடமாற்றல் சபைகளினூடாக இடமாற்றல் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.