சமூக இடைவெளியை பேணும் பொருட்டு சந்தை இடமாற்றம்

ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்கள் யாவும் அக்கரைப்பற்று தர்சங்கரி மைதானத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்தே, இவ்வாறான சுமூக நிலை நேற்று உருவானதை அவதானிக்க முடிந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரதேச சபை, பொலிஸ், இராணுவம், அரச அமைப்புகள் ஒன்றிணைந்த பிரதேச கொரோனா பாதுகாப்புச் செயலணிக்கூட்ட தீர்மானத்துக்கு அமைவாகவே குறித்த சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது.

இதன்பயனாக, நேற்றையதினம் சந்தையில் சமூக இடைவெளி சிறந்த முறையில் பேணப்பட்டதுடன், பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருள்களை நியாயமான விலைகளில் பெற்றுக்கொண்டனர். ஆயினும், ஒரு சில இடங்களில் பொருள்களின் விலை உயர்வாக காணப்பட்டதாகவும் அறிய முடிந்தது.

இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலனின் பணிப்புரையின் பேரில், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள் சந்தையில் மேற்பார்வை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.