சி.வி – ஜனாதிபதி சந்திப்பு இன்று இடம்பெறாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இன்றைய (18) சந்திப்பு, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவருக்குமிடையிலான சந்திப்பு, இன்று திங்கட்கிழமை (18) காலை இடம்பெறவிருந்தது. இந்தச் சந்திப்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவிருந்தார். இருப்பினும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, இந்தச் சந்திப்பு இடம்பெறாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பின் போது, வடமாகாணத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமாகவுள்ள காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அத்துடன், வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை, அரசாங்கம் கையகப்படுத்த தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி, தன்னிடம் உறுதியளித்திருந்ததாகவும் அந்த நம்பிக்கையிலேயே, இது தொடர்பில் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது தொடர்பில் நிரந்தரக் கொள்கையொன்றைத் தயாரிப்பது குறித்தும் கொக்கிலாள் உள்ளிட்ட பல பிரதேசங்களில், சிங்களவர்களைக் குடியேற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள கலந்துரையாடர்கள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதியுடன் பேசுவதற்கு, முதலமைச்சர் எதிர்பார்த்திருந்தார்.