சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!

கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இத்தகையதொரு நிலையில் புங்குடுதீவு மகாவித்தியாலய நிர்வாகம் மற்றும் அப்பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மேற்படி மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள் இவ்வருடம்(2016) ஜனவரி மாதம் முதல் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

மேற்படி பிரயாண ஒழுங்குக்கான செலவினை நிவர்த்தி செய்வதற்கென்று புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களிடம் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் இலங்கை ரூபாய் 6லட்சம் (600,000) நிதியினை வழங்கி அதில் தண்ணீர் ட்ரக்டர் ஒன்றினை வாங்கும்படி கேட்டுக் கொண்டது.

ஆயினும் மேற்படி நிதி அதற்குப் போதுமானதாக இல்லை என்பதனால் “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினரும் ஒருதொகை நிதியினை வழங்கி எமது இந்த சேவைக்கு உதவி புரிந்துள்ளனர். அதேபோல் திருமதி. தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களும் மிகுதிப் பணத்தை தான் போட்டு செய்வதாகக் கூறி அதனைச் செய்துள்ளார்.

திருமதி சுலோசனாம்பிகை அவர்கள் சுமார் இரண்டரை வருடங்களுக்கான நிதியே எம்மால் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ச்சியாக இந்த சேவையினைச் செய்வேன் என்றும் குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கேனும் தான் இந்த சேவையை செய்வதாகவும் உறுதியளிக்கின்றார்.

இந்தவகையில் திருமதி சுலோசனாம்பிகை அவர்களுக்கும், மேற்படி சேவையில் எம்மோடு துணைநிற்கும் “புங்குடுதீவு தாயகம்” அமைப்புக்கும் உட்பட ஏனைய அனைவருக்கும் நாம் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆகவே இந்த சேவையினை நாங்கள் தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தயவுசெய்து “வேரும் விழுதும்” விழாவின் போது நிதி வழங்குவதாக எழுதி இதுவரையில் பணம் தராதோர் மற்றும் விளம்பரம் தந்து அதற்கு இதுவரையில் பணம் தராதவர்கள் தயவுசெய்து அந்த பணத்தினை நிர்வாக உறுப்பினர்களிடமோ, விழா ஏற்பாட்டுக் குழுவிடமோ உடன் ஒப்படைத்து எமது செயற்பாட்டிற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

நன்றி.
இவ்வண்ணம்,

த.தங்கராஜா,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
21.03.2016.