சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து இன்று (22) யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சேயா சதெவ்மி கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று (22) காலை யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சிறுமியின் அநீதிக்கு தகுந்த நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறையை எதிர்ப்போம் என்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர விரிவுரைகளை புறக்கணித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை யாழ். அளவெட்டி பகுதி இளைஞர்கள் சேயா சதெவ்மியின் கொலைக்கு நீதி கோரி தெல்லிப்பளை பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.