‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: இந்திய விஞ்ஞானிகள் சாதனை!

உலகை அச்சுறுத்தி வரும் ‘ஜிகா’ வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடித்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3,500 குழந்தைகள் இதுபோல் பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது. இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை.

இந்நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் ஆய்வக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், ”உலகிலேயே முதலாவதாக ஜிகா வைரஸ்-க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்த நிறுவனம் நாமக இருக்கலாம். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பே அந்த மருந்தை பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் மாதிரியை இறக்குமதி செய்து இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளோம். இந்த மருந்தை விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய அரசின் ஆதரவை கேட்டுள்ளோம். இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சிலும் உதவி செய்ய முன்வந்திருக்கிறது” என்றார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ”பாரத் பயோடெக் ‘ஜிகா’ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இதை அறிவியலாளர்கள் கருத்தின்படி ஆய்வு செய்ய உள்ளோம். இது ‘மேக் இன் இந்தியா’ தயாரிப்புக்கு ஒரு நல்ல உதாரணம்” என்றார்.

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இல்லை. இருப்பினும், இந்த புதிய தடுப்பு மருந்து உலக அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.