ஜெனிவாவில் தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்ற போது காலையில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சில தமிழ் அரசியல்வாதிகளை மனித உரிமை பேரவையின் கீழ் தளத்தில் உள்ள தேனீர்ச்சாலையில் கண்டேன். பின்னர் நண்பகல் உணவிற்காக நான் அங்கு சென்ற போது தேனீர்ச்சாலையில் அதேகதிரைகளில் தான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் 5.30மணியளவில் எனது நண்பர் ஒருவரை சந்திக்க அந்த தேனீர்ச்சாலைக்கு சென்ற போது அப்போதும் அங்குதான் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். ஜெனிவா செல்கிறோம், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கிறோம், கூட்டத்தொடரில் பேசுகிறோம், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்திக்கிறோம் என கூறிவிட்டு வரும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு இவ்வாறு தேனீர்ச்சாலைகளில் காலம் கழிப்பதைத்தான் காணமுடிகிறது. ஜெனிவாவுக்கு வரும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் எந்த இராஜதந்திரிகளையும் சந்திப்பது கிடையாது. சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் சரி, தூதுவர்கள் இராஜதந்திரிகளும் சரி, இலங்கை என்று வரும் போது இரு தரப்பைத்தான் சந்திக்கிறார்கள். ஒன்று அரச தரப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இரண்டாவது தரப்பாக தமிழர்களின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். இம்முறை ஜெனிவாவில் பிரித்தானிய தூதுவர், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் அரசதரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் தமிழர் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் மட்டுமே சந்தித்தனர்.

(Rajaguru Theyvendran)