“ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!” – லலிதா

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்துப் பேசினோம். அவர் கூறுகையில், ‘சினிமாவில் இருந்தவரைக்கும் ஜெயலலிதாவுடன், எங்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கும் எங்களுக்குமான தொடர்பு நின்றுபோனது. அதன் பின்னர், எங்க பெரியம்மா ஜெயலட்சுமி மட்டும் அவருடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார். இந்தச் சூழலில், அவரின் தாயார் சந்தியா இறந்த பிறகு ஒரு சமயம் எங்க பெரியம்மாவை, ஜெயலலிதா அவசரமாக அழைத்திருந்தார். என் பெரியம்மா சென்று பார்த்தபோது ஜெயலலிதா தாய்மை அடைந்து இருந்துள்ளார். இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு, அவர்தான் பிரசவம் பார்த்துவிட்டு வந்துள்ளார்.

இதை பெரியம்மா, என் தாயாரிடம் சொன்னதும் அவர் கோபம் அடைந்துவிட்டார். ஏன் என்றால் எங்க மாமா ஜெயராமன் (ஜெயலலிதாவின் தந்தை) இறந்த பிறகு, எங்க அம்மாவுக்கு, ஜெயலலிதா குடும்பத்தினரைச் சுத்தமாகப் பிடிக்காது. அந்தக் குழந்தை சோபன்பாபுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த குழந்தை என்று பெரியம்மா எங்களிடம் கூறினார். அந்தக் குழந்தைதான் அம்ருதாவா என்று எனக்குத் தெரியாது. டி.என்.ஏ சோதனைதான் அதைத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார் தெளிவாக.

– விகடன்