‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றாமல், தமிழர்களின் உரிமைகளை அழித்து, இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றுவதற்கு முயற்சித்தால், தனித் தமிழ் தேசம் உருவாகுவதற்கு அது வழியேற்படுத்தும், அதனை தடுக்க முடியாது, அதற்கு, சர்வதேச நாடுகளின் அனுமதியை வாங்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள கலப்பு நீதிமன்ற முறை கூறப்பட்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம். கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக தமிழர்களுக்கான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

எனினும், இலங்கை மீதான யுத்தக் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் முன்னர் இருந்த, சர்வதேச விசாரணை மற்றும் தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது போன்ற சொற்தொடர்கள் நீக்கப்பட்டுள்ளமை எமக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஐ.நா.வின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளன.

ஒரு நாட்டுக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்படும்போது, நிரந்தர உறுப்புரிமை நாடுகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரிக்கலாம். ஆனால், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளே இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இறுதிக்கட்டப் போரில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருப்பது, தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி.

உண்மையை வெளிக்கொணர்தல் மற்றும் போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற சட்டமீறல்கள் தொடர்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படுகின்றபோது புதிய விசாரணைப் பொறிமுறை உருவாகும் நிலைமை ஏற்படும் என நாம் நம்புகின்றோம்.

பலர், கலப்பு நீதிமன்றம் என்ற வார்த்தையை தவிர்த்து, உள்ளகப் பொறிமுறை விசாரணை என்று கூறுகின்றனர். அதற்கு அரசாங்கமும் உடன்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் நம்பக்கூடிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் அத்துடன் அதன் மீது மக்கள் நம்பிக்கை கொண்டால் மாத்திரமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதுதொடர்பில் பேசமுடியும்.

குற்றம் இழைத்தவர்கள் இந்த நாட்டுக்குள்ளேயே உள்ளனர், பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் இங்கே தான் உள்ளனர். எனவே, சரியான நீதி வழங்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது இலங்கையின் பொறுப்பாக காணப்படுகின்றது.
2011.09.24ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்கா பேசுகையில் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெறும் என்று கூறியது. ஆனால், தற்போது கலப்பு நீதிமன்ற முறைமை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை, சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரோம் பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாமை காரணமாக சர்வதேச விசாரணை என்பது சாத்தியப்படாத ஒன்றாக மாறியுள்ள நிலையில், கலப்பு நீதிமன்ற விசாரணை முறை, ஆறுதல் தரும் ஒன்றாக அமைந்துள்ளது.

யுத்த குற்றம் தொடர்பில் விசாரணை நடத்தி, உரிய தீர்வு காண்பதாக சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றவில்லை. அத்துடன், தமிழர்களின் கலாசாரம், வாழ்விடம் என்பவற்றை அழித்துவிட்டால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க தேவையில்லை என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ, அதிகளவான இராணுவத்தை தமிழ் பிரதேசத்தில் குவித்து, தமிழ் மக்களின் நிலங்களை கையகப்படுத்தி தமிழரின் அடையாளங்களை அழிக்க முயன்றார்.

இதன்காரணமாக, மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். புதிய அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான வழி ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.

ஐ.நா.வின் பிரேரணையை நிராகரித்து, தனி சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால் தனி தமிழீழம் உருவாவதற்கு அது வழிசமைத்துவிடும். அதற்கு சர்வதேச நாடுகளின் அனுமதியை பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.